முகப்பு
தினம் ஒரு தேவாரம்

132. கள்ளார்ந்த பூங்கொன்றை - பாடல் 7

பித்தர் என்று சம்பந்தர்

Updated On : 21 ஜூன், 2019 at 12:00 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 2:46 PM

பாடல் 7:

    அத்தியின் ஈருரி மூடி அழகாக அனல் ஏந்திப்
    பித்தரைப் போல் பலி திரியும் பெருமானார் பேணுமிடம்
    பத்தியினால் வழிபட்டுப் பலகாலம் தவம் செய்து
    புத்தி ஒன்ற வைத்து உகந்தான் புள்ளிருக்குவேளூரே

விளக்கம்:

Advertisement

அத்தி=யானை; பசி, தாகம், தூக்கம் ஆகியவற்றைக் கடந்த பெருமான், தான் உயிர் வாழும்  வண்ணம் உதவி புரியும் உணவினுக்காக பிச்சை எடுப்பது போன்ற தோற்றத்தை தருவதால், அவரை பித்தர் என்று சம்பந்தர் அழைக்கின்றார். யானையின் பசுமைத் தோல் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் அனைவரும் அதனைத் தவிர்ப்பார்கள். ஆனால் பெருமானோ யானையின் தோலை தனது உடல் மீது போர்த்துக் கொண்டதும் அன்றி,  எரியும் தீப்பிழம்பினை ஏந்தி நடமாடுகின்றார். இவ்வாறு அனைவரும் தவிக்கும் மூன்று செயல்களை செய்யும் பெருமானை மிகவும் பொருத்தமாக பித்தர் என்று சம்பந்தர் அழைப்பதை நாம் உணரலாம். பத்தி=பக்தி; உகந்தான்=உயர்ந்த நிலையினை அடைந்து மகிழ்ச்சியுடன் இருந்தான்;

மனமொன்றி ஜடாயு வழிபட்டான் என்று சமபந்தர் கூறுவது, நமக்கு அப்பர் பிரான் தில்லைத் தலத்தின் மீது அருளிய பாடலினை (4.82.3). நினைவூட்டுகின்றது. கன்றிய=சினந்த சிறுவன் மார்க்கண்டேயனின் வாழ்நாள் முடிந்து விட்ட நிலையில், அவனது உயிர்னைக் கவரும் பொருட்டு தனது கடமையைச் செய்ய வந்த இயமனுக்கு அந்தச் சிறுவன் தனது கடமையைச் செய்ய விடாமல் சிவலிங்கத்தைக் கட்டிக் கொண்டு இருந்தது, கோபத்தை ஏற்படுத்தியது.

    ஒன்றி இருந்து நினைமின்கள் உந்தமுக்கு ஊனமில்லை
    கன்றிய காலனைக் காலால் கடிந்தான் அடியவற்காச்
    சென்று தொழுமின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
    என்று வந்தாய் என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே  

பொழிப்புரை:

தன்னை எதிர்த்து வந்த மதயானையின் தோலை உரித்து, அந்த ஈரப்பசை மிகுந்த தோலினைத் தனது உடல் மீது போர்த்தவனும், மிகுந்த அழகுடன் தனது கையினில் தீப்பிழம்பை ஏந்தி நடனம் ஆடுபவனும், தனக்கு உணவு ஏதும் தேவைப்படாத நிலையிலும் பித்தர் போன்று பலியேற்று உலகெங்கும் திரிபவனும் ஆகிய பெருமான், மிகுந்த விருப்பத்துடன் பேணி பாதுகாத்து உறையும் இடம் புள்ளிருக்குவேளூர். பல காலம் தவம் செய்து அடைந்த ஞானம் கொண்டு, மிகுந்த பக்தியுடன் தனது மனம் ஒன்றி பெருமானை வழிபட்டதால் உய்வினை அடைந்து மகிழ்ச்சியுடன் இருந்த ஜடாயுவும் சம்பாதியும்  பெருமானை வழிபட்ட தலம் புள்ளிருக்குவேளூர் என்பதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.