132. கள்ளார்ந்த பூங்கொன்றை - பாடல் 10
நீராடல்
பாடல் 10:
கடுத்து வரும் கங்கை தனைக் கமழ் சடை ஒன்று ஆடாமே
தடுத்தவர் எம் பெருமானார் தாம் இனிதா உறையும் இடம்
விடைத்து வரும் இலங்கைக் கோன் கலங்கச் சென்று இராமர்காப்
புடைத்து அவனை பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே
விளக்கம்:
Advertisement
கடுத்து வரும்=மிகுந்த கோபத்துடன்; நீர்நிலைகளில் முங்கி, தலை உட்பட உடல் உறுப்புகள் அனைத்தும் நனையும் வண்ணம் குளித்தலே, நீராடல் என்று சொல்லப்படும். பெருமான் தனது சடையில் கங்கை நதியினை மறைத்த போதிலும் அவரது சடை முழுதும் நனையாமல் இருந்தது என்பதை உணர்த்தும் வண்ணம், சடை ஒன்றும் ஆடாமே என்று சம்பந்தர் கூறுகின்றார். பெருமானுக்கு ஒன்பது சடைகள் என்று தேவாரப் பாடல்கள் உணர்த்துகின்றன. அந்த ஒன்பது சடைகளில் ஒரு சடை மட்டுமே, கங்கை நதியைக் கரந்திடப் பயன்பட்டது என்பதையும் சம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். விடைத்து=சீறி; கமழ் சடை=பரந்து விளங்கிய சடை; மலங்க=கலங்க; கமழ் சடை என்ற தொடருக்கு நறுமணம் கமழும் பூக்களை சடையில் அணிந்தவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. சூரிய மண்டலம் வரை பறந்து சென்றதால் சம்பாதியின் சிறகுகள் எரிந்து அழிந்தன என்று மனிமேகலை காப்பியம், சம்பாதி வனத்தை குறிப்பிடுகையில் சொல்கின்றது. அரக்கன் இராவணன் வைத்திருந்த சந்திரகாசம் என்றார் வாள் மிகவும் சிறந்த படைக்கலம் என்பதால். அந்த படைக்கலம் மீண்டும் பயன்படாத வகையில் செயல்பட்ட ஜடாயு இராமபிரானுக்கு செய்த உதவி மிகவும் பெரிய உதவியாகும்.
பொழிப்புரை:
தனது விருப்பத்திற்கு மாறாக நிலவுலகம் செல்லுமாறு பணிக்கப்பட்டதால், மிகுந்த கோபத்துடன் வேகமாக கீழே இறங்கிய கங்கை நதியினை, தனது ஒன்பது சடைகளில் ஒரு சடையில் பெருமான் தாங்கிய போதிலும், அந்த ஒரு சடையும் முழுவதும் நனையாத வண்ணம் இருந்தது. அத்தகைய பேருருவும் ஆற்றலும் கொண்டுள்ள பெருமான், மிகுந்த மகிழ்வுடன் உறையும் இடம் புள்ளிருக்குவேளூர் ஆகும். தான் சீதா பிராட்டியைக் கவர்ந்து சென்றதை கண்டுவிட்ட ஜடாயு என்பதால் மிகுந்த கோபம் கொண்டு சீறிப் பாய்ந்த, இலங்கை மன்னனாகிய அரக்கன் கலங்கும் வண்ணம், இராம பிரானுக்கு உதவி செய்யும் பொருட்டு அரக்கனுடன் கடுமையாக போரிட்டு அவனது வலிமையை அழித்த ஜடாயு வழிபட்ட தலம் புள்ளிருக்குவேளூராகும்.