129. விளங்கிய சீர்ப் பிரமனூர் - பாடல் 5
சிறப்புடன் வாழும் அந்தணர்கள்
பாடல் 5:
தரைத் தேவர் பணி சண்பை தமிழ்க் காழி வயம் கொச்சை
தயங்கு பூ மேல்
விரைச் சேரும் கழுமலம் மெய் உணர்ந்த அயனூர் விண்ணவர் தம்
கோன் ஊர் வென்றித்
திரை சேரும் புனல் புகலி வெங்குருச் செல்வம் பெருகு
தோணிபுரம் சீர்
உரைச் சேர் பூந்தராய் சிலம்பனூர் புறவம் உலகத்தில்
உயர்ந்த ஊரே
விளக்கம்:
Advertisement
தரைத்தேவர்=பூசுரர் என்ற வடமொழிச் சொல்லின் பொருள்; நிலவுலகினில் தேவர்கள் போன்று சிறப்புடன் வாழும் அந்தணர்கள் மற்றும் சான்றோர்கள்; ஒழுக்கத்திலும் இறை வழிபாட்டிலும் சிறந்த அந்தணர்கள், தேவர்கள் போன்று உயர்ந்தவர்களாக அந்நாளில் மதிக்கப் பட்டனர் என்பது இந்த பாடலில் உணர்த்தப்படுகின்றது. தயங்கு=அசைந்தாடும்; விரை=நறுமணம்; பிரமன் வழிபட்டமையால் இந்த தலத்திற்கு பிரமனூர் என்று பெயர் வந்ததை நாம் அறிவோம். தனது படைப்புத் தொழில் சரிவர நடக்கவேண்டும் என்றால் அதற்கு இறைவனின் அருள் வேண்டும் என்ற உண்மையை உணர்ந்த பிரமன் என்பதை குறிப்பிடும் வகையில் மெய் உணர்ந்த அயன் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். வென்றி=வெற்றி;
பொழிப்புரை:
தங்களது ஒழுக்கும் மற்றும் இறையுணர்வு காரணமாக தேவர்களைப் போன்று சிறந்தவர்களாக மதிக்கப்படும் அந்தணர்கள் பணிந்து பெருமானை வணங்கும் சண்பை, தமிழ் வளர்க்கும் காழி, கொச்சைவயம், அசைந்தாடும் பூக்கள் வீசும் நறுமணம் கலந்த கழுமலம், தான் செய்யும் படைப்புத் தொழில் சரிவர நடக்க இறைவனின் அருள் தேவை என்பதை உணர்ந்த பிரமன் வழிபட்ட பிரமனூர், தேவர்களின் தலைவனாகிய இந்திரன் வழிபட்ட வேணுபுரம், கடலில் கிடைக்கும் அரிய பொருட்களை கரைக்கு கொண்டுவந்து சேர்ப்பதில் வெற்றியினை அடையும் அலைகள் ஏற்படுத்தும் நீர்ப்பெருக்கினை மிகுதியாக உடைய புகலி, வெங்குரு, செல்வம் மல்கும் தோணிபுரம், இறைவனைக் குறித்த புகழ்ச் சொற்கள் வந்தைடையும் பூந்தராய், சிரபுரம், புறவம், என்று பன்னிரண்டு பெயர்களால் அழைக்கப் படும் சீர்காழி தலம், உலகினில் சிறந்த தலமாகும்.