அமெரிக்கா மீது நம்பிக்கை இல்லை: ஈரான்
அமெரிக்கா - ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது பற்றி..
பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது பற்றி ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவர் மற்றும் ஈரான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் கடந்த பிப்.28 ஆம் தேதி தொடங்கியது. தாக்குதல்கள் தொடர்ந்த நிலையில் ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஏப்.8) அதிகாலையில் அறிவித்தார்.
இந்தப் போரை முழுமையாக நிறுத்த அமெரிக்கா-ஈரான் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வரும் நிலையில் ஏப்ரல் 10 அன்று ஈரான் மற்றும் அமெரிக்க குழுக்களை பாகிஸ்தான் வருமாறு அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து, சனிக்கிழமை (ஏப்.11) பேச்சுவார்த்தை தாமதமாகத் தொடங்கியது.
Advertisement
சுமார் 21 மணிநேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்ததாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்தார்.
இந்தப் பேச்சுவார்த்தை பற்றி கருத்து தெரிவித்த ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவர் பாகெர் கலீஃபா, பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பு, "எங்களுக்கு நல்ல எண்ணமும் போரை நிறுத்துவதற்கு விருப்பமும் உள்ளது. ஆனால் முந்தைய இரண்டு போர்களின் அனுபவங்கள் காரணமாக, எதிர்த்தரப்பின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை" என்று அவர் கூறியதாகக் குறிப்பிட்டார்.
பேச்சுவார்த்தையின் முடிவுபற்றி தெரிவித்த அவர், ”எதிர்தரப்பினர் சமாதான பேச்சுவார்த்தையின் முடிவில் ஈரான் குழுவினரின் நம்பிக்கையைப் பெற தவறிவிட்டனர்.
இந்தப் பேச்சுவார்த்தையை சுமூகமாக நடத்த முயற்சிகள் எடுத்த சகோதர நாடான பாகிஸ்தானுக்கு நன்றி. பாகிஸ்தான் மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
இதுபற்றி மேலும் தகவல்களை அளித்த ஈரான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய், ”அமெரிக்க அதிகாரிகளுடன் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்த இந்த சந்திப்பு சுமார் இருபத்தி நான்கு முதல் இருபத்தைந்து மணி நேரம் நீடித்தது. இது தற்போது வரை நடந்ததில் மிக நீண்ட சுற்றுப் பேச்சுவார்த்தை.
பிரச்னைகளின் சிக்கலான தன்மை, மோசமான சூழ்நிலைகள் காரணமாக, கடந்த 9 மாதங்களில் இருமுறை அமெரிக்கத் தரப்பும், இஸ்ரேல் தரப்பும் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள் இந்தப் பேச்சுவார்த்தையில் எட்டவேண்டிய சமாதான நிலையை சாத்தியமற்றதாக்கியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணைப் பிரச்னை மற்றும் ஈரான் சார்ந்த விஷயங்கள் பற்றி பேச்சுவார்த்தை விரிவடைந்தது. அவர்கள் குறிப்பிட்ட பத்து முன்மொழிவுகளில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டபோதும், 'முக்கியப் பிரச்சினைகள்' தொடர்பான உரசல் பேச்சுவார்த்தையின் இறுதி உடன்படிக்கையைத் தடுத்தது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோரின் மகத்தான முயற்சிகளுக்கு நன்றி” என்று அவர் தெரிவித்தார்.