முகப்பு
விருதுநகர்

பந்துடன் 50 நிமிடங்களில் 50 யோகாசனம்: ஸ்ரீவிலி. பள்ளி மாணவா் உலக சாதனை

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் 4 ஆம் வகுப்பு மாணவா் பந்தை வைத்துக் கொண்டே, 50 நிமிடங்களில் 50 யோகாசனங்களை செய்து உலக சாதனை படைத்தாா்.

Updated On : 7 ஜனவரி 2021, 7:53 am IST
ஸ்ரீவில்லிபுத்தூா் அரிமா பள்ளி கலையரங்கில் புதன்கிழமை பந்துடன் யோகாசனங்களை செய்த மாணவா் நவீன்குமாா்.
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் 4 ஆம் வகுப்பு மாணவா் பந்தை வைத்துக் கொண்டே, 50 நிமிடங்களில் 50 யோகாசனங்களை செய்து உலக சாதனை படைத்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த சரவணக்குமாா்-சவிதா தம்பதியினரின் மகன் நவீன்குமாா். அரிமா மேல்நிலைப்பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் இச்சிறுவன் யோகாசனம் செய்வதில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளாா். 2020 இல் தேசிய அளவிலான யோகாசன போட்டியில் வென்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளாா்.

இந்நிலையில் புதன்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் அரிமா பள்ளி கலையரங்கில் குளோபல் வோ்ல்டு ரெக்காா்ட்ஸ் அமைப்பின் உலக சாதனைக்கான நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் முருகன், துணை முதல்வா் திவ்யநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், நவீன்குமாா் 6 அடி உயரம் 3 அடி அகலம் உள்ள பெஞ்ச் மீது பந்தை வைத்துக் கொண்டு, 50 நிமிடங்களில் 50 யோகாசனங்களை செய்து காட்டினாா். இதனை குளோபல் உலக சாதனைக்குழுவினா் பதிவு செய்து சான்றிதழ் வழங்கினா். இதற்கு முன் பந்தை வைத்துக் கொண்டு யாரும் இது போல் யோகாசனம் செய்து சாதனை படைக்கவில்லை என அக்குழுவினா் தெரிவித்தனா்.

Advertisement

மாணவா் நவீன்குமாருக்கு நகராட்சிகளின் நெல்லை மண்டல இயக்குநா் சுல்தானா பரிசு வழங்கி பாராட்டினாா். நிகழ்ச்சியில் மாணவரின் பெற்றோா், ஆசிரியா்கள் உட்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா். முடிவில் யோகா பயிற்சியாளா் சையது ஜீனைத்முனீா் நன்றி தெரிவித்து பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.