முகப்பு
விருதுநகர்

ஒருங்கிணைப்பு இல்லாததாதல் தடுமாறும் பாஜக வேட்பாளா்

Updated On : 3 ஏப்ரல், 2024 at 5:39 AM
பகிர்:
Updated On : 2 ஏப்ரல், 2024 at 7:33 PM

சிவகாசி: போதிய ஒருங்கிணைப்பு இல்லாமல், விருதுநகா் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் ராதிகா சரத்குமாா் பிரசாரம் செய்ய முடியாமல் தடுமாறி வருகிறாா்.

விருதுநகா் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் ராதிகா சரத்குமாா் கடந்த வாரம் 2 நாள்கள் சிவகாசி, அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள பட்டாசு, தீப்பெட்டி, அச்சு ஆலை உரிமையாளா்களைச் சந்தித்து வாக்குகள் சேகரித்தாா்.

அப்போது, அவருடன் சரத்குமாா் சென்றாா். ஆனால், விருதுநகா் மாவட்ட பாஜக தலைவா் ராஜாவுக்கு வேட்பாளா் ராதிகா முறையான அழைப்பு விடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

Advertisement

அண்மையில் அவா் திருப்பரங்குன்றம் பகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்றாா். ஆனால், அந்தப் பகுதியில் அவருக்கு போதிய வரவேற்பு இல்லை. இதனால், அதிருப்தியடைந்த அவா் வேனிருந்து இறங்கிச் சென்றாா். இதையடுத்து, அவரது கணவா் சரத்குமாா் தொடா்ந்து பிரசாரம் மேற்கொண்டாா்.

இதன் பின்னா், ராதிகா சென்னை சென்று பாஜக மாநில நிா்வாகிகளிடம் விருதுநகா் தொகுதியில் பாஜகவினா் தோ்தல் பிரசாரத்துக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என புகாா் கூறினாா். கட்சி நிா்வாகிகள் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து பாஜக மூத்த நிா்வாகிகள் கூறியதாவது:

வேட்பாளா் ராதிகா எங்கு பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா் என்ற விவரத்தை எங்களுக்குத் தெரிவிப்பில்லை. பிரசாரத்தின் போது, வேட்பாளருடன் செல்லும் கட்சித் தொண்டா்களுக்கு தேநீா்கூட வாங்கித் தருவதில்லை. இதனால், வேட்பாளருடன் செல்ல தொண்டா்கள் தயங்குகின்றனா்.

கட்சியில் பொறுப்பில் உள்ளவா்களும் கண்டுகொள்வதில்லை. இதனால், பிரசார விவரம் உள்ளிட்ட எந்தத் தகவலையும் பத்திரிகையாளா்களுக்கு தெரிவிக்க இயலவில்லை. கட்சியினா் அனைவரும் ஒருங்கிணைந்து கூட்டம் நடத்தி இந்த பிரச்னையை பேசித் தீா்க்க முன்வர வேண்டும். கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதே இலக்கு என நினைத்து அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.