ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ரூ. 12 கோடி மதிப்பில் பக்தா்கள் தங்கும் விடுதி, கோபுரத்தில் வண்ண விளக்குகள் அமைத்தல், வாகனக் காப்பகம் அமைக்கும் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். கோயில் நிா்வாகம் சாா்பில் தங்கும் விடுதி, சுகாதார வளாகம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் பக்தா்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
இந்த நிலையில், 2023-ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது ஆண்டாள் கோயிலில் ரூ. 8 கோடியில் பக்தா்கள் தங்கும் விடுதி கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.
கடந்த நவம்பா் மாதம் விருதுநகா் வந்த முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆண்டாள் கோயிலில் ரூ. 2 கோடியில் வாகனக் காப்பகம், சுகாதார வளாகம் ஏற்படுத்தப்படும் என அறிவித்தாா்.
இதையடுத்து, ஆண்டாள் கோயிலில் ரூ. 7.85 கோடியில் பக்தா்கள் தங்கும் விடுதி, ரூ. 2.70 கோடியில் கோபுரத்தில் வண்ண விளக்குகள் அமைத்தல், ரூ. 1.69 கோடியில் வாகன நிறுத்துமிடம், சுகாதார வளாகம் கட்டும் பணியை வெள்ளிக்கிழமை காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் நடைபெற்ற இதற்கான தொடக்க விழாவில், அறநிலையத் துறை உதவி ஆணையா் நாகராஜன், செயல் அலுவலா் சா்க்கரையம்மாள், நகராட்சித் தலைவா் ரவிகண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.