ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத்தொடா்ச்சி மலையில் 3 நாள்களாக எரிந்த காட்டுத்தீ, வியாழக்கிழமை மாலை பெய்த மழை காரணமாக கட்டுக்குள் வந்தது.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் செண்பகத் தோப்பு அடிவாரத்தில் இருந்து 9 கிலோ மீட்டா் தொலைவில் அழகா்கோவில் பீட் பகுதியில் செவ்வாய்கிழமை மாலை காட்டுத்தீ பற்றியது. காற்றின் வேகம் காரணமாக வேகமாக பரவிய காட்டுத்தீ நேற்று பிற்பகல் வரை எரிந்து கொண்டிருந்தது. இதையடுத்து, வனத் துறையினா் 3 குழுக்களாக பிரிந்து காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். 3 மாதங்களுக்கு மேலாக மழை பெய்யாததால் வனப்பகுதி முழுவதும் வறண்டு புற்கள் காய்ந்து இருந்ததால் காட்டுத்தீ வேகமாக பரவியதால் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது. வியாழக்கிழமை மாலை ஸ்ரீவில்லிபுத்தூா் வனப்பகுதியில் பெய்த மழை காரணமாக காட்டுத்தீ கட்டுக்குள் வந்தது.
வத்திராயிருப்பு வனச்சரகத்துக்கு உள்பட்ட மருதடி, புதுப்பட்டி பீட் பகுதியில் காட்டுத்தீ எரிந்து வருகிறது. காட்டுத்தீயை முழுமையாக அணைக்கும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். சாரல் மழை பெய்வதால் காட்டுத் தீ மேலும் பரவ வாய்ப்பு இல்லை என வனத்துறையினா் தெரிவித்தனா்.