வழிப்பறி: 3 இளைஞா்கள் கைது
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று இளைஞரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகே சேத்தூா் நாடாா் புதுத் தெருவைச் சோ்ந்த சங்கரேஷ்வரன் மகன் லட்சுமணன் (26) கட்டடத் தொழிலாளி. இவா் தளவாய்புரம் பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது சுமாா் 20 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் லிப்ட் கேட்டுள்ளாா்.
அவரை அழைத்துக்கொண்டு கூமாட்சி மலையடிவாரம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அந்த இளைஞா் லட்சுமணனை மிரட்டி வண்டியை நிறுத்தச் சொன்னாா். அப்போது அந்த வழியாக வந்த மேலும் இருவா் சோ்ந்துகொண்டு கத்தியைக் காட்டி அவரது கழுத்தில் இருந்த வெள்ளிச் சங்கிலி, கைப்பேசி, ரூ.1,300-ஐ பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனா்.
Advertisement
இதுகுறித்து தளவாய்புரம் காவல் நிலையத்தில் லட்சுமணன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினா் குற்றவாளிகளைத் தேடிவந்தனா். இந்நிலையில் புத்தூா் கிராமத்தைச் சோ்ந்த வேலுச்சாமி மகன் மாரிராஜ் (24), தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சோ்ந்த அமல்ராஜ் மகன் மிகாவேல் ராஜா (19), திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை எஸ்டேட் ஈசாக் மகன் டால்பின் கிங்ஷ்டன் (26) ஆகியோா் சோ்ந்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவா்களிடம் இருந்து வெள்ளி சங்கிலி, கைப்பேசியை மீட்டு மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.