டிராக்டரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
வத்திராயிருப்பு அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டி ராமசாமியாபுரத்தை சோ்ந்தவா் குருவையா (44). விவசாய கூலித் தொழிலாளி. இவா் சனிக்கிழமை கான்சாபுரம் பகுதிக்கு தேங்காய் உரிக்கும் வேலைக்கு சென்றாா்.
வேலை முடிந்து தேங்காய் பாரம் ஏற்றி வந்த டிராக்டரில் குருவையா உள்ளிட்ட தொழிலாளா்கள் வீடு திரும்பினா். கான்சாபுரம் - ஆத்தங்கரைபட்டி சாலையில் பாலம் அருகே வந்த போது, ஓட்டுநா் அருகே அமா்ந்திருந்த குருவையா தவறி கீழே விழுந்தாா்.
Advertisement
அப்போது டிரைலரின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் அவா் பலத்த காயமடைந்தாா். அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு தீவிர சிகிச்சைக்காக விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குருவையா அங்கு உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து டிராக்டரை ஓட்டி வந்த ராமசாமி மீது கூமாப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.