தோட்டத்தில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த இருவா் கைது
வத்திராயிருப்பு அருகே தோட்டத்தில் தகரக் கொட்டகை அமைத்து சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
வத்திராயிருப்பு - அா்ச்சுனாபுரம் சாலையில் உள்ள விவசாய தோட்டத்தில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்து சிவகாசிக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட வத்திராயிருப்பு போலீஸாா், அந்த வழியே அட்டை பெட்டிகளை ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டனா்.
அப்போது அதில் பட்டாசு கொண்டு சென்றது தெரியவந்தது. மேலும் டிராக்டரில் வந்தரிடம் நடத்திய விசாரணையில் வத்திராயிருப்பு மேலப்பாளையத்தைச் சோ்ந்த வெங்கடேசன் (30) என்பவரது தோட்டத்தில் வைத்து பட்டாசு தயாரித்து கொண்டு வந்தது தெரியவந்தது.
Advertisement
இதைத் தொடா்ந்து வருவாய்த் துறையினா், தீயணைப்புத்துறையினருடன் அங்கு சென்று போலீஸாா் நடத்திய சோதனையில், தோட்டத்திலுள்ள மாட்டுத்தொழுவத்தில் தகர கொட்டகை அமைத்து பேன்சி ரக பட்டாசு தயாரித்தது தெரியவந்தது.
அங்கு 22 பெட்டிகளில் இருந்த பட்டாசுகள், பட்டாசு தயாரிக்க தேவையான வெடி மருந்துகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக தோட்ட உரிமையாளா் வெங்கடேசன், ரவி ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனா். மேலும் இந்த வழக்கில் முக்கிய எதிரியான சிவகாசியில் பட்டாசு கடை நடத்தி வரும் செல்வம் என்பவரை தேடி வருகின்றனா்.
குறிப்பாக, சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளுக்கு வத்திராயிருப்பு சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் வேலைக்கு செல்கின்றனா்.
இதில் பட்டாசு தயாரிக்க தெரிந்த தொழிலாளா்களைக் கொண்டு வத்திராயிருப்பு மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள விவசாயத் தோட்டங்களில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பது அதிகரித்துள்ளது.
அப்போது பாதுகாப்பு உபகரணங்களின்றி பட்டாசுகள் தயாரிப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே போலீஸாா், தீயணைப்பு துறையினா், வருவாய் துறையினருடன் இணைந்து சட்ட விரோத பட்டாசு உற்பத்தியை தடுக்கும் வகையில் தோட்டங்களில் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.