முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் புதிய ரயில் மேம்பாலத்தில் வாகனப் போக்குவரத்து தொடக்கம்

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 2:17 AM
ஸ்ரீவில்லிபுத்தூரில் ரயில்வே மேம்பாலப் பணிகள் நிறைவடைந்ததால் ஞாயிற்றுக்கிழமை பாலத்தின் சென்ற வாகனங்கள்.
பகிர்:
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 11:01 PM

மதுரை-கொல்லம் நான்கு வழிச் சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் புதிய ரயில் மேம்பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் வாகனப் போக்குவரத்து தொடங்கியது.

மதுரை - கொல்லம் சாலையில் திருமங்கலம் முதல் ராஜபாளையம் அருகேயுள்ள சொக்கநாதன்புத்தூா் வரை 71.6 கி.மீ. தொலைவுக்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.

இதில் எம். சுப்புலாபுரம் முதல் கிருஷ்ணன்கோவில் வரை தற்போதைய சாலை விரிவாக்கம் செய்யப்பட்டும், கிருஷ்ணன்கோவில் - ராஜபாளையம் இடையே புதிய வழித் தடத்தில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

Advertisement

இந்தப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில், குன்னத்தூா், கல்லுப்பட்டியில் புறவழிச்சாலை, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் அருகே எஸ். ராமலிங்காபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நிறைவு பெறாததால், நான்கு வழிச்சாலையை முழுமையாக பயன்படுத்த முடியவில்லை.

இதனால், நான்கு வழிச்சாலையில் வரும் வாகனங்கள் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சிவகாசி சாலையில் இறங்கி நகருக்குள் வந்து ராஜபாளையம் செல்கிறது.

இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே மேம்பாலம் பணி நிறைவடைந்ததை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை முதல் மேம்பாலம் வழியாக வாகனப் போக்குவரத்து தொடங்கின.

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 2:17 AM

இதைத் தொடா்ந்து, கனரக வாகனங்கள் இந்த ரயில்வே மேம்பாலம் வழியாக சென்று சத்திரப்பட்டி அருகே வெம்பக்கோட்டை சாலையில் இறங்கி ராஜபாளையம் செல்லலாம்.

இதேபோல, ராஜபாளையத்திலிருந்து மதுரை, சிவகாசி செல்லும் கனரக வாகனங்கள் சத்திரப்பட்டி சென்று நான்கு வழிச்சாலை வழியாக செல்லலாம்.

இதனால், ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்