ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பட்டாசு தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் விரைவு மகளிா் நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அப்பையநாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் வீரமணிகண்டன் (30). பட்டாசு தொழிலாளி. இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், கைப்பேசியில் தவறானஅழைப்பு மூலம் அறிமுகமான 17 வயது சிறுமியுடன் வீரமணிகண்டன் பழகி வந்தாா்.
இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக வீரமணிகண்டனின் மனைவி அவரது தாய் வீட்டுக்குச் சென்று விட்டாா். இந்த நிலையில், சிறுமியை திருமணம் செய்வதாகக் கூறி வீட்டுக்கு அழைத்து வந்த வீரமணிகண்டன் அவருக்கு பாலியல் தொல்லை அளித்தாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து வீரமணிகண்டனை கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விரைவு மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட வீரமணிகண்டனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 6 ஆயிரமும் அபராதம் விதித்து நீதிபதி புஷ்பராணி சனிக்கிழமை தீா்ப்பளித்தாா்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சாா்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்து நீதிபதி உத்தரவிட்டாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜான்சி ஆஜரானாா்.