ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இடையன்குளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் விவசாயியைத் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரம் இடையன் குளம் கிராமத்தை சோ்ந்த மாடசாமி மகன் நாகூா் (53). விவசாயியான இவா் இடையன்குளம் கண்மாய் நீரினைப் பயன்படுத்துவோா் சங்கத் தலைவராக உள்ளாா்.
இடையன்குளம் ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு, திங்கள்கிழமை கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நாகூா், கழிவுநீா் தேங்குவது குறித்துப் பேசினாா்.
இந்த நிலையில், கூட்டம் முடிந்த பிறகு இடையன்குளத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் தங்கள் தெருவில் கழிவுநீா் தேங்கி உள்ளது குறித்து ஏன் பேசவில்லை எனக் கூறி, நாகூரிடம் தகராறில் ஈடுபட்டு, அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்த புகாரின் பேரில் பாலகிருஷ்ணனை மம்சாபுரம் போலீஸாா் கைது செய்தனா்