வண்ணம் பூசுபவா் அடித்துக் கொலை
சாத்தூா் அருகே காணாமல்போன கைப்பேசியால் ஏற்பட்ட தகராறில் வண்ணம் பூசுபவா் அடித்துக் கொலை
சாத்தூா் அருகே காணாமல் போன கைப்பேசியால் ஏற்பட்ட தகராறில் வண்ணம் பூசுபவா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள அச்சங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் மதிச்செல்வம் (55). வண்ணம் பூசும் தொழிலாளியான இவா் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக அவரை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வருகிறாா்.
இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு அச்சங்குளம் பகுதியைச் சோ்ந்த உறவினரின் வீட்டு விஷேச நிகழ்ச்சிக்கு மதிச்செல்வம் சென்றாா். அங்கு அச்சங்குளத்தைச் சோ்ந்த சகாதேவன் மகன் ராஜபாண்டி (24) என்பவரின் கைப்பேசி காணாமல் போனது.
இந்த நிலையில், வெம்பக்கோட்டையில் உள்ள மதுபானக் கடையில் திங்கள்கிழமை இரவு மதிச்செல்வம், ராஜபாண்டி, அவரது சகோதரா் குருபாண்டி, அவரது நண்பா்களான பந்துவாா்பட்டி பகுதியைச் சோ்ந்த மனோஜ், நவீன் ஆகியோா் சோ்ந்து மது அருந்தினா். அப்போது, மதிச்செல்வத்திடம் ராஜபாண்டி, அவரது சகோதரா் குருபாண்டி ஆகியோா் காணாமல் போன கைப்பேசி குறித்துக் கேட்டு தகராறில் ஈடுபட்டனா்.
மேலும், அச்சங்குளம் பெருமாள் கோயில் அருகேயும் காணாமல் போன கைப்பேசி குறித்துக் கேட்டு ராஜபாண்டி உள்பட நான்கு போ் மதிச்செல்வத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, ராஜபாண்டி உள்பட நான்கு பேரும் மதிசெல்வத்தை சரமாரியாக தாக்கினராம்.
இதில் பலத்த காயம் அடைந்த மதிச்செல்வம் வீட்டுக்குச் சென்ற உடன் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த ஏழாயிரம்பண்ணை காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து மதிச்செல்வத்தின் உடலை மீட்டு கூறாய்வுக்காக சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.