சமூக வலைத்தளங்களாக வாட்ஸ்ஆப் அல்லது ஃபேஸ்புக் மெசேஞ்ஜரில் அடையாளம் தெரியாதவர்களிடமிருந்து வந்த அழைப்பினை ஏற்ற மென்பொருள் ஊழியர் ஒருவர் ரூ.2.6 லட்சம் அளவுக்கு ஏமாற்றப்பட்டுள்ளார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர், தன்னுடைய மார்பிங் செய்த விடியோக்களை வெளியிட்டுவிடுவோம் என்று மோசடியாளர்கள் மிரட்டியதற்கு பயந்து, ரூ.2.6 லட்சத்தை அவர்கள் சொன்ன வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியிருக்கிறார்.
அக். 5ஆம் தேதி அந்த இளைஞரின் வாட்ஸ்-ஆப்புக்கு ஒரு விடியோ கால் வந்துள்ளது. அதில் ஒரு பெண் பேசியிருக்கிறார். 15 வினாடிகள் மட்டுமே இந்த அழைப்பு நீடித்திருக்கிறது. அழைப்பு துண்டிக்கப்பட்டதும், அதே எண்ணிலிருந்து சாதாரண அழைப்பு வந்துள்ளது.
மேலும், அந்த பெண்ணுடன், அழைப்பை ஏற்ற இளைஞருக்கும் இருப்பது போன்ற புகைப்படத்தையும் அவர்கள் வாட்ஸ்ஆப்பில் அனுப்பியிருக்கிறார்கள்.
இளைஞரின் செல்போனில் உள்ள தொடர்பு எண்கள் அனைத்துக்கும் இந்த புகைப்படம் அனுப்பப்படும் என்று மிரட்டியிருக்கிறார்கள். தொடர்ந்து மிரட்டி, இளைஞரிடமிருந்து படிப்படியாக ரூ.2.6 லட்சத்தை வாங்கியிருக்கிறார்கள். தொடர்ந்து அவர்கள் பணம் கேட்டு மிரட்டியதால், இளைஞர் ஒரு கட்டத்தில் சைபர் குற்றப் பிரிவுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.
உடனடியாக வாட்ஸ்ஆப்பில் அழைத்தவர்களின் எண், வங்கிக் கணக்கு, பணப்பரிமாற்றம் செய்ய பயன்படுத்திய வங்கிக் கணக்குகள் என அனைத்தையும் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால், இதுபோன்ற சம்பவங்களில், மக்களிடம் ஏமாற்றி மியூல் வங்கிக் கணக்குகளை மோசடியாளர்கள் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
இதுபோன்ற மோசடிகளில், இளைஞர்களின் பணம், பொருள் பறிபோவதுடன், புகைப்படங்களை பதிவேற்றினால், அது அவர்களது எதிர்காலத்தையும் சேர்த்து பாதிக்கும் அபாயம் இருப்பதால் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மட்டுமே சிறந்த வழி என்று காவல்துறை கூறுகிறது.
எனவே, அடையாளம் தெரியாத எண்களிலிருந்து விடியோ அழைப்புகள் வந்தால் ஏற்க வேண்டாம், அந்த எண்ணை சாதாரண எண்ணில் தொடர்புகொண்டு யார் என கேட்டறிந்து உங்களுக்குத் தெரிந்தவராக இருந்தால் அழைப்பை ஏற்கலாம் என்று காவல்துறை எச்சரித்து வருகிறது.
தனிநபர்கள், தங்களுடைய வாட்ஸ் ஆப்பில் இருக்கும் டிபிகளை மற்றவர்கள் பார்க்காத வகையில் பாதுகாத்து வைக்கலாம்.
செய்ய வேண்டியது என்ன?
ஆன்லைன் அல்லது சமூக வலைத்தளங்களில் தனிநபர்கள் தங்களது புகைப்படம் அல்லது விடியோக்களை பகிராமல் இருப்பது.
எப்போதும் சைபர் மோசடியாளர்களின் மிரட்டல்களுக்கு பயப்படக் கூடாது.
சைபர் மோசடியாளர்கள் மிரட்டும்போது, பயப்படாமல் புகார் தெரிவிக்க வேண்டும்.
சமூக ஊடகங்களில் தனிநபர் பாதுகாப்புகளுக்காகக் கொடுக்கப்படும் சேவைகளைப் பயன்படுத்தி, வழிமுறைகளை கட்டாயம் பின்பற்றவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.