இ-மெயில் ஹேக்கிங்! வணிக மின்னஞ்சல் சமரச மோசடி பற்றி தெரியுமா?
வணிக மின்னஞ்சல் சமரச மோசடி பற்றி...
உங்களுடைய இ-மெயிலை ஹேக் செய்து அதன் மூலமாக தெரிந்தவர்களுக்கு பணம் செலுத்தக் கூறி இ-மெயில் அனுப்பப்பட்டு மோசடி நடைபெற்று வருகிறது.
பெரும்பாலாக வணிக நிறுவனங்களை வைத்திருப்போரின் இ-மெயில்தான் இதில் குறிவைக்கப்படுகிறது. இது மிகவும் நவீன சைபர் தாக்குதலாகும்.
மோசடிகளில் ஒவ்வொரு நாளும் புதுப்புது வகையான மோசடிகள் நடைபெற்று வருகின்றன. அதிகம் பணம் வைத்திருக்கும்/ புழங்கும் நபர்களைக் குறிவைத்தே பெரும்பாலும் இணையவழி குற்றங்கள் நடைபெறுகின்றன.
அந்த வகையில் பெரிய நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் அல்லது மூத்த அதிகாரிகளின் மின்னஞ்சல்கள் ஹேக் செய்யப்பட்டு அதில் உள்ள விவரங்கள் திருடப்படுகின்றன. நிறுவனங்களின் முக்கிய மின்னஞ்சல்களும் ஹேக் செய்யப்பட்டு மூத்த நிர்வாகி அல்லது பங்குதாரர் என்று கூறி பணத்தையோ விவரங்களையோ கேட்கின்றனர்.
முழுவதுமாக மின்னஞ்சலை அவர்களின் கட்டுப்பாட்டிற்கு எடுத்துச் சென்று தேவைப்படும் நபருக்கு மெயில் அனுப்பி பணத்தைப் பறிக்கின்றனர்.
மற்றொரு விதமாக இ-மெயில் மூலமாக தனிப்பட்ட நபரின் விவரங்களை மற்றவர்களிடம் கேட்கின்றனர். அந்த விவரங்களைக் கொண்டு வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தைத் திருடுகின்றனர்.
சைபர் குற்றவாளிகள் வணிக மின்னஞ்சல் கணக்குகளை ஹேக் செய்து மூத்த நிர்வாகிகள் போல ஆள்மாறாட்டம் செய்து அவசர பணம் செலுத்தவோ அல்லது ரகசிய தகவல்களைப் பகிரவோ செய்கிறார்கள். சமீபமாக இவ்வகைத் தாக்குதல்கள் அதிகம் நடைபெற்று வருகின்றன.
ஏன் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி என்று ஆள்மாறாட்டம் செய்து அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு போலி விலை பட்டியல் அனுப்பி பணத்தைப் பெறுகிறார்கள். மற்றவர்கள் நம்பும் அளவிற்கே இவர்களது இ-மெயில் இருக்கும் என்று கூறப்படுகிறது. மிகவும் நுட்பமாக இந்த மோசடியில் ஈடுபடுகிறார்கள்.
பாதுகாப்பு வழிமுறைகள்
இ-மெயில் மூலமாக யாரேனும் பணம் கேட்டால் மிகவும் பாதுகாப்பான விவரங்களைக் கேட்டால் போனில் ஒருமுறை தொடர்புகொண்டு உறுதிப்படுத்திய பின்னர் பதிலளிப்பது நல்லது.
பணம் செலுத்துதல் அல்லது தகவல்கள் கோருவது போன்ற கோரிக்கைகளை நேரடியாகவும் சரிபார்க்கவும்
சிலர் தலைமை நிர்வாகியின் போலியான மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துகிறார்கள். அதனால் மின்னஞ்சல் முகவரிகளில் உள்ள சிறிய மாறுபாடுகளையும் கவனியுங்கள்.
ஒரு நிறுவனத்தின் நிதி சார்ந்த பதவிகளில் இருப்போர் இதுபோன்ற இ-மெயில்களை கவனமுடன் கையாள வேண்டும்.
ஃபிஷிங் தாக்குதல்களை அடையாளம் காண ஊழியர்களுக்கு தொடர்ந்து அந்தந்த நிறுவனங்கள் பயிற்சி அளிக்க வேண்டும்.
அவசரத்துடன்கூடிய அல்லது வழக்கத்திற்கு மாறாக வரும் மின்னஞ்சல்களிடம் கவனமாக இருக்கவும்.
வணிக மின்னஞ்சல் கணக்குகளுக்கு வலுவான கடவுச்சொற்களை பயன்படுத்தி இரண்டு-அடுக்குபாதுகாப்பு முறையை (2FA) செயல்படுத்தவும்.
தெரியாத மின்னஞ்சல்களுக்கு ஒருபோதும் பதிலளிக்க வேண்டாம்.
ஒருவேளை மோசடியால் பாதிக்கப்பட்டால் வங்கியைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிப்பதுடன் காவல்துறையில் புகார் அளிக்கவும்.
இணையவழி மோசடிகளுக்கு 1930 அல்லது https://www.cybercrime.gov.in. என்ற இணையதளம் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம்.