'ஃபிரண்ட் ரிக்வெஸ்ட்' மூலமாக மோசடிகள்! எப்படியெல்லாம் நடக்கிறது?
சமூக ஊடகங்களில் நட்பு அழைப்புகள் மூலமாக நடைபெறும் மோசடிகள் பற்றி...
சமூக வலைத்தளங்களின் பயன்பாடு இப்போது அதிகரித்துவிட்டது. வயது வித்தியாசமின்றி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துகின்றனர். இன்றைய சூழ்நிலையில் பதின் வயதினர், இளைஞர்கள் பலரும் சமூக ஊடகங்களுக்கும் ஸ்மார்ட் போன்களுக்கும் அடிமையாகிவிட்டனர் என்றே கூறலாம். ஏனெனில் ஒரு நாளைக்கு பல மணி நேரங்கள் அதில் நேரம் செலவழிக்கின்றனர். சமூக ஊடகங்கள்தான் மிகப்பெரிய பொழுதுபோக்காக மாறியிருக்கிறது.
இந்நிலையில் இந்த சமூக ஊடகங்கள் மூலமாக குறிப்பாக பெண்களைக் குறிவைத்து சைபர் தாக்குதல்கள் அதிகம் நடக்கின்றன.
எப்படியெல்லாம் நடக்கிறது?
Advertisement
Advertisement
சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களைத்தான் பெரும்பாலும் தேர்வு செய்கிறார்கள். உங்களது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சமூக ஊடக பக்கங்களுக்கு 'நண்பராகும் கோரிக்கை' (Friend Request) அனுப்புகிறார்கள். அந்த கணக்கில் சுய விவரங்களைப் பார்த்து, நீங்கள் அதனை ஏற்றுக்கொள்ளலாம். இப்போது அவர் உங்கள் கணக்கில் நண்பராகி விடுகிறார்.
தொடர்ந்து உங்களிடம் ஒரு நண்பராக பேசத் தொடங்கி உங்கள் நம்பிக்கையைப் பெறுகிறார். சில நாள்கள் அல்லது மாதங்களுக்குப் பின்னர் உங்களுடைய தனிப்பட்ட விவரங்களையோ அல்லது புகைப்படங்களையோ வைத்து மிரட்டி பணம் பறிக்கலாம் அல்லது 'உதவி' என்று கேட்டும் பணம் பெற்று ஏமாற்ற வாய்ப்புள்ளது.
உங்களுக்கு தெரிந்த ஒரு நண்பரின் பெயரில் உங்களிடம் பேசியும் பணம் கேட்கலாம். நம்பிக்கையை ஏற்படுத்தி பின்னர் முதலீடு செய்யக் கோரியும் பணத்தை ஏமாற்றலாம்
உங்கள் மொபைல் போனை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரும் போலி லிங்க்குகளை அனுப்பலாம். அந்த லிங்க்குகளை அனுப்பினால் உங்களுடைய போன் முழுவதும் அவர்களின் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிடும், உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து பணம் போய்விடும்.
பெரும்பாலும் போலி சுய விவரங்களுடன் சமூக ஊடக கணக்கை உருவாக்கி ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
பாதுகாப்பு வழிகள் என்ன?
உங்களுக்குத் தெரியாதவர்களிடமிருந்து வரும் நட்பு கோரிக்கைகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
ஒருமுறைக்கு இருமுறை நன்கு சரிபார்த்த பின்னரே அழைப்புகளை ஏற்க வேண்டும்.
ஒரு பெயரில் ஏற்கனவே ஒருவர் உங்களுக்கு நண்பராக இருக்கும்பட்சத்தில் அதே பெயரில் இன்னொரு கணக்கில் இருந்து நட்பு அழைப்பு வந்தால் கவனமாக இருக்க வேண்டும்.
தெரியாத எண்களில் இருந்து வரும் லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம்.
புதிதாக நண்பராகியவர் பணம் ஏதேனும் கேட்டால் நன்கு யோசித்து செயல்படுவது நல்லது.
உங்களுடைய சமூக ஊடக கணக்குகளை பாதுகாப்பாக வைத்திருங்கள், உங்கள் சுய விவரங்களை அனைவரும் பார்க்கும்படி வைத்திருக்க வேண்டாம். கணக்கைத் திறக்க(login) இரண்டு அடுக்கு பாதுகாப்பை(Two-step verification) உறுதி செய்யுங்கள்.
சமீபமாக தொடங்கிய சமூக ஊடக கணக்குகளில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம்.
புதிய நபர்களிடம் பேசும்போது சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக 'பிளாக்' செய்துவிடுங்கள். தேவைப்பட்டால் வீட்டில் உள்ளவர்களின் உதவியை நாடுங்கள். தேவைப்படின் புகார் அளிக்கவும்.
தெரியாதவர்களுக்கு உங்களுடைய தனிப்பட்ட விவரங்கள், புகைப்படங்களை அனுப்ப வேண்டாம்.
உங்களுடைய விவரங்களை வைத்து மிரட்டினால் பயப்பட வேண்டாம். உடனடியாக காவல்துறைக்கோ அல்லது சைபர் குற்றப்பிரிவுக்கோ புகார் அளிக்கவும். 1930 அல்லது https://www.cybercrime.gov.in. என்ற இணையதளம் மூலமாக புகார் தெரிவிக்கலாம்.
How To Spot Fake Friend Requests On Social Media
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.