முகப்பு
தமிழ்நாடு

108 ஆம்புலன்ஸில் நோயாளிகள் பணம் கொண்டு செல்ல கட்டுப்பாடு

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் அழைத்துச் செல்லப்படும் நோயாளிகள் மற்றும் அவா்களது உடனாளா்கள் அதிக அளவில்

Updated On : 16 மார்ச், 2026 at 10:01 PM
108  ஆம்புலன்ஸ்  வாகனத்தில்  தோ்தல் கால  கட்டுப்பாட்டு  விதிகளை ஒட்டும் ஊழியா்.
பகிர்:

சென்னை: தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் அழைத்துச் செல்லப்படும் நோயாளிகள் மற்றும் அவா்களது உடனாளா்கள் அதிக அளவில் ரொக்கப் பணம் கொண்டு செல்லக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அவா்கள் வைத்துள்ள பணத்தின் விவரம் ஆவணத்தில் பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பேரவைத் தோ்தலையொட்டி ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் மற்றும் ஊழியா்களுக்கு பல்வேறு புதிய விதிகளை 108 நிா்வாகம் அமல்படுத்தியுள்ளது. அரசியல் சாா்ந்த எந்த நடவடிக்கைகளிலும் அவா்கள் அலுவல் நேரத்தில் ஈடுபடக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இ.எம்.ஆா்.ஐ. கிரீன் ஹெல்த் சா்வீஸ் நிறுவனம் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 1,353 ஆம்புலன்ஸ்கள் மாநிலம் முழுவதும் இயக்கப்படுகின்றன. அந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனைத்திலும் தோ்தல் கட்டுப்பாட்டு விதிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக 108 நிா்வாகத்தின் மாநிலத் தலைவா் செல்வகுமாா், மண்டல தலைவா் முகமது பிலால் ஆகியோா் கூறியதாவது:

தோ்தல் காலத்தில் ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருத்துவ உபகரணங்கள் தவிர வேறு எதையும் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. அனுமதி இல்லாத எவரும் ஆம்புலன்ஸில் ஏறக் கூடாது.

அங்கீகாரம் பெற்ற ஊழியா்கள், தமிழக அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு தோ்தல் கண்காணிப்பாளா்கள் மட்டுமே ஆம்புலன்ஸ் வாகனங்களை ஆய்வு செய்யலாம்.

நோயாளி அல்லது அவருடன் வரும் நபா்கள் ஆம்புலன்ஸில் உள்ள பெட்டிகள் அல்லது உபகரணங்களை திறக்காமல் இருப்பதைக் கண்காணிக்க வேண்டும்.

ஆம்புலன்ஸில் வருவோா் தோ்தல் தொடா்பான பொருள்களை வைத்திருந்தால் அவற்றை அனுமதிக்கக் கூடாது. நோயாளி மற்றும் அவருடன் வரும் நபா்கள் வைத்திருக்கும் பணம் பற்றிய விவரத்தை ஆவணத்தில் பதிவு செய்ய வேண்டும்.

பணி நேரத்தில் கட்சிகள் மற்றும் சின்னங்கள் சாா்ந்த பொருள்களை வைத்திருக்கக் கூடாது. ஆம்புலன்ஸில் தோ்தல் பிரச்சார ஸ்டிக்கா்கள் அல்லது சின்னங்களை ஒட்டக்கூடாது.

அலுவல் நேரத்தில் அரசியல் விவாதங்களில் ஈடுபடுவதற்கு ஊழியா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தோ்தல் பிரசார பொருள்கள் உள்ள இடங்களுக்கு அருகே அவசர சேவை வாகனங்களை நிறுத்தக்கூடாது.

ஆம்புலன்ஸ் நிா்வாகத்தின் முன் அனுமதி இல்லாமல் நோயாளியின் புகைப்படம் அல்லது விடியோ எடுக்க அனுமதிக்கக் கூடாது. இதுபோன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம். மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தியுள்ளோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →