விமான டிக்கெட் என்றாலே வழக்கமான போக்குவரத்துக் கட்டணங்களை விட அதிகம்தான். ஆனால், ஒவ்வொரு நாளும் நள்ளிரவு 2 மணிக்கு மேல் விமான டிக்கெட் முன்பதிவு செய்தால், வழக்கமான கட்டணத்தை விட குறைவாகக் கிடைக்கும் என்று தகவல்கள் பரவி வருகிறது.
ஆனால் இந்த தகவல் உண்மையா, அல்லது இது எல்லோரும் நம்பக்கூடிய வகையில் பரப்பப்பட்ட கட்டுக்கதையா? என்று அலசினால், அது உண்மைக்கும் கட்டுக்கதைக்கும் நடுவில் நிற்கிறது.
விமானக் கட்டண விலை நிர்ணயம் மற்ற போக்குவரத்து கட்டணங்களைப் போல ஒரே சீராக இருக்காது. இதனை செயற்கை நுண்ணறிவு (AI) எனப்படும் செய்யறிவு மற்றும் மெஷின் லேர்னிங் எனப்படும் இயந்திர கற்றல் போன்றவை தீர்மானிக்கின்றன.
இவை எந்த நேரத்திலும் மாறக்கூடிய பல்வேறு அடிப்படைக் காரணிகளின் அடிப்படையில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் விலைகளை மாற்றியமைக்கின்றன.
இந்த வகையில் பார்த்தால், நள்ளிரவில் விமானக் கட்டணங்கள் குறைந்த விலையில் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றாலும், இரவு நேரத்தில் விமான கட்டணங்களை முன்பதிவு செய்யும் போது, ஓரளவுக்கு விலை குறைவாகக் கிடைப்பதற்கான சாதகமான வாய்ப்புகள் உள்ளதாகவே கூறப்படுகிறது.
பொதுவாகவே, டிக்கெட் தேவை, போட்டி, இருக்கைகளின் இருப்பு ஆகியவற்றைக் கொண்டே விலை உயர்வு நடக்கிறது. இதனால்தான், நாள் முழுக்க விமான டிக்கெட் விலைகள் மணிக்கு ஒரு முறை மாறிக் கொண்டே இருக்கின்றன.
அதாவது, பகல் நேரத்தில் மக்கள் விமான டிக்கெட்டை அடிக்கடி தேடிக்கொண்டிருப்பார்கள். சிலர் தங்களது பயண திட்டத்தை முடிவு செய்வதற்காகக் கூட விலை நிலவரம் அறியவும் டிக்கெட்டுகளை தேடுவார்கள். அப்போது, குறைவானவர்கள் விமான சேவையை தேடும்போது விலை குறையும். ஒரே வழிப்பாதையை அதிகம் பேர் தேடும்போது விலை அதிகரிக்கும். ஆனால், அவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை என்றாலும்கூட, அவர்கள் தேடியதாலேயே விலை அதிகரிக்கும். இதுதான் நிலவரம்.
இந்த ஒரு காரணத்தாலேயே, நள்ளிரவு 2 மணிக்கு விமா டிக்கெட்டுகள் விலை குறைகிறது. அதாவது உண்மையிலேயே டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அந்த நேரத்தில் இணையதளத்தில் தேடுவார்கள். எனவே, குறைந்த போட்டி காரணமாக விமான டிக்கெட் விலைகள் சற்று குறைந்துகொண்டிருக்கும் நேரம் என்றுகூட அதனைச் சொல்லலாம்.
அதிகம் தேடப்படாததால், விமான டிக்கெட் விலைகள் குறைந்து, சில வேளைகளில் மிகவும் குறைவாகக்கூட விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் வாய்ப்பு உருவாகிறது என்றும் கூறப்படுகிறது.
ஆனால், இது உண்மையல்ல, பல விமான சேவை நிறுவனங்கள், நள்ளிரவு நேரங்களில்தான் தங்களது இணையதளத்தின் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும். எனவே, அந்த நேரத்தில் உறுதியாக டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்று சொல்ல முடியாது. அதேவேளையில், ஒவ்வொரு நாட்டுக்கும் நள்ளிரவு நேரம் என்பது மாறுபடும். எனவே, எந்த நேரம் எந்த ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு நள்ளிரவு என்பதை எப்படி தீர்மானிக்க முடியும்? எனவே, இது தோராயமாகக் கூறப்படும் தகவல்தான் என்கிறார்கள்.
உண்மையில், விமான டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும் என்றால், முன்கூட்டியே திட்டமிட்டு ஒரு சில நாள்கள் தொடர்ந்து அதனை கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். அந்த விமான சேவை நிறுவனத்தின் நள்ளிரவு நேரம் என்பதை கண்டறிந்து அந்த நேரத்தில் விமான டிக்கெட்டை தேடலாம். இது ஒருவேளை பயனளிக்கலாம் என்றே கூறுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.