முந்நூறு நூல்களை எழுதியிருக்கும் காரைக்காலைச் சேர்ந்த அறுபத்து ஒன்பது வயதான முனைவர் மரியதெரசா, தமிழ், ஆங்கிலம், ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆசிரியராகவும் பின்னர், பேராசிரியராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தமிழ்நாடு அரசின் 'தமிழ்ச் செம்மல்' விருது உட்பட 153 விருதுகளைப் பெற்றவர்.
அவரிடம் பேசியபோது:
'எனது முதல் நூல் 1998-இல் வெளியானது. ஒரே மேடையில் 2018-இல் 40 நூல்களையும், 2022-இல் 100 நூல்களையும், 2023-இல் 50 நூல்களையும் வெளியிட்டேன். செப். 29-இல் எனது 300 -ஆவது நூலை வெளியிட்டேன். ஏனைய நூல்கள் பல ஆண்டுகளில் வெளியிடப்பட்டவை. இந்த நூல்கள் 50 பிரிவுகளில் எழுதப்பட்டவையாகும்.
50 பிரிவுகளில் கவிதைகளை எழுதியுள்ளேன். எனது கவிதை நூல்களிலிருந்து பல கவிதைகள் தஞ்சை தமிழ்ப் பல்கலைகழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பொள்ளாச்சி என். ஜி. எம். கல்லூரி தமிழ்ப் பாட நூல்களில் இடம் பெற்றுள்ளன.
குறில் கூ, நெடில் கூ, குறில் நெடில் கூ, நெடில் குறில் கூ, குறில் நெடில் குறில் கூ, நெடில் குறில் நெடில் கூ, இரட்டைச் சுவடிகள், நாலடி பா, மோனை எதுகை, குறள் கூ, மோனை எதுகை கூ, இரண்டரியோ பிரிவுகளில் அதிகக் கவிதைகளை எழுதியிருக்கிறேன்.
ஐந்து வரிகள் கொண்ட குறும்பாக்களின் தொகுப்பு, அறுசீர் விருத்த கவிதை தொகுப்பு, ஏழு சீர் விருத்தம், எண்சீர் விருத்தம் பிரிவுகளிலும் கவிதை நூல் வெளியிட்டுள்ளேன். ஒரு பொருளையே ஒன்பது பிரிவுகளில் கவிதைகள் எழுதியுள்ளேன். 18 பேர் எனது நூல்களை ஆய்வு செய்து, ஆராய்ச்சி பட்டம் பெற்றுள்ளனர்.
ரான். ஹப்பார்ட் என்பவர் 1084 நூல்களை எழுதி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்தியாவில் அதிக நூல் எழுதி வெளியிட்டிருக்கும் எழுத்தாளர் யார் என்ற தகவல் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை. அநேகமாக அது நானாகத்தான் இருக்கும். ரான். ஹப்பார்ட் சாதனையை முறியடிக்காவிட்டாலும் அவர் எழுதியிருக்கும் என்ணிக்கைக்கு அருகிலாவது இடம் பிடிக்க முடியுமா என்று நிச்சயம் முயலுவேன்'' என்கிறார் மரிய தெரசா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.