என் அம்மா சாம்பார், சட்னி, ரசம், கூட்டு போன்ற உணவுவகைகளில் மிக அதிகமாகக் கடுகு தாளித்துச் சேர்க்கிறார். கேட்டால், "நல்லது, சாப்பிடு' என்கிறார். அவர் கூறுவது சரியா?
ரம்யா, காங்கேயம் .
பாவ பிரகாசர் எனும் முனிவர் கடுகைப் பற்றிக் கூறுவதாவது:
ரúஸ பாகே கடு: நாக்கின் சுவையிலும், ஜீரணத்தின் இறுதியிலும் காரமானது. காரமான சுவையுள்ளதால் பித்த உடல்வாகு கொண்டவர்களுக்கு இது அதிக அளவில் சேர்க்கத்தக்கதல்ல. இதை அதிகமாக உபயோகப்படுத்தினால் நா வறட்சி, எரிச்சல் முதலியவை ஏற்படும். அதைக் குறைக்க இனிப்பு வகைகளை அதிகம் பயன்படுத்த வேண்டும்.
ஸ்நிக்த: குடலுக்கு எண்ணெய்ப் பசையைத் தரக் கூடியது. இந்த எண்ணெய்ப் பசையினால் வயிற்றில் வாயு சேராமல் சுறுசுறுப்புடன் குடலை இயங்கச் செய்யும். கடுகெண்ணெய் மிகவும் சூடு தரக்கூடியது. வசிக்கும் சூழ்நிலை, தட்ப வெப்பநிலை ஏற்றதாக இருந்தால் இது ஒத்துக் கொள்ளும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை மந்தமாகிவிடும். ஆனால் மண்ணீரல் பெருத்து கெட்டுப் போன நிலையில் இது கலந்த மிகவும் உணவு மிகவும் நல்லது.
மண்ணீரலிலுள்ள அடைப்பை அகற்றி அங்குள்ள வீக்கத்தைக் குறைத்து விடும் தன்மையுடையது.
தீக்க்ஷ்ணோஷ்ண: ஊடுருவும் தன்மை கொண்டது. சூடான வீர்யத்தை உடையது. கடுகின் இந்த இருவகைக் குணங்களைக் கொண்டு வாந்தி எடுக்க அதைப் பயன்படுத்தலாம். இரைப்பை சோம்பல், மார்பில் கபம், இரைப்பையில் பித்த சேர்க்கை, விஷப் பொருளைச் சாப்பிட்டநிலை போன்றவற்றில் 6 - 8 கிராம் அளவு கடுகு, 10 கிராம் இந்துப்பு ஆகியவற்றைத் தூளாக்கி அரை லிட்டர் சூடான தண்ணீரில் கலக்கிச் சிறிது சிறிதாகக் குடிக்க, சிறிதுநேரத்தில் வாந்தி ஏற்படும்.
மறுபடியும் குடிக்க, திரும்பவும் வாந்தியாகும். இப்படியாக இரைப்பையில் ஏற்பட்டுள்ள உபாதைகளை மிக எளிதாக நிவர்த்தி செய்து கொள்ளலாம். உடல் களைப்பு, ஆயாஸம், உமட்டலோ இல்லாத எளிய வாந்தி செய்யும் முறையாகுமிது. கபவாதக்ன: கப வாத தோஷங்களால் ஏற்படும் உபாதைகளை நீக்கக் கூடியது.
கடுகுத் தூளையும் அரிசி மாவையும் சம அளவில் சேர்த்துக் கிளறித் துணியில் தடவி வயிற்றுவலி, குடைச்சல் ஏற்பட்டுள்ள இடங்களில் மேல் போடுவது நல்லது. உடனே வலி குறையும். மார்பிலுள்ள கபம் கரைய இதை மார்பில் போடலாம். இதைப் பிடறியில் போட, தலையிலுள்ள நீர்க்கோவையினால் ஏற்படும் இசிவு வலி, விரைப்பு போன்றவை குறையும். காய்ச்சல், பேதியினால் ஏற்படும் கெண்டைக்கால் சதைப் பிரட்டல், இசிவு வலியிலும் போடலாம்.
ரக்தபித்தாக்னிவர்த்தன: ரத்த பித்தங்களைக் கெடுத்து உடலிலுள்ள நுண்ணிய ஓட்டைகளின் வழியாக வெளியேற்றும். பசித்தீயைத் தூண்டும். உணவில் எண்ணெய் அல்லது நெய்யுடன் கடுகைத் தாளித்துச் சேர்த்துச் சாப்பிட, நன்கு பசியைத் தூண்டி ஜீரணத்திற்கு உதவுகிறது. தாளிக்காமல் பச்சையாகச் சேர்த்தரைத்த உணவை அடிக்கடி சாப்பிட வயிற்றில் வேக்காளம் ஏற்படும்.
கண்டுகுஷ்டகோடகிருமிக்ரஹான் ஜயேத்: அரிப்பு, குஷ்டம், வட்டத் தடிப்பு, கிருமி, கிரக உபாதை போக்கும். பெரிய கடுகிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை மேலே தடவிக் கொண்டாலும் உள்ளுக்குச் சாப்பிட்டாலும் கசிவும் அரிப்பும் தடிப்பும் உள்ள சரும நோய் விலகும். கடும் தொற்று நோய் உள்ளவர்கள் தங்கும் அறைகளில், மாசுபட்டுள்ள காற்றைச் சுத்தமாக்க கடுகைப் புகை போடுவது இன்றும் சில கிராமங்களில் வழக்கத்திலுள்ளது.
கைய்ய தேவ நிகண்டுவில் "பத்தமூத்ரவிட்' சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது கடுகுக் கீரையை அதிகம் பயன்படுத்தினால் புளிப்பு அதிகமாகி ஜீரணம் கெட்டுவிடும். குடல் சூடு அதிகமாவதால் சிறுநீர் சுண்டி, அதன் வெளியாவது குறைந்துவிடும். குடலில் நீர்ப்பசை குறைவதால் மலம் இறுகிவிடும். இதற்குக் குடல் வறட்சியினால் ஏற்படும் மலம் சிறுநீர்க்கட்டிற்கு "பத்தமூத்ரவிட்' என்று பெயராகும்.
அதனால் உங்களுடைய அம்மா உங்களுடைய இரைப்பை மந்தமாகாமலிருக்கவும், அவ்விடத்திலுள்ள சுரப்பிகளைத் தூண்டிவிடவும்தான் கடுகை அதிகம் சேர்க்கிறார். இருந்தாலும் கடுகைச் சிறிய அளவில் சேர்த்துச் சாப்பிடுவதே நல்லது என்பதை அம்மாவிடம் தெரிவிக்கவும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.