முகப்பு
தினமணி கதிர்

முரண்சுவை: கொடுமுடிக் கோகிலம்

மதவாதிகள், இலக்கியவாதிகள், அரசியல்வாதிகள், திரையுலகைச் சேர்ந்தவர்கள், இசையுலகத்தினர் உள்பட பல்வேறுபட்ட தமிழ் மக்களாலும் மிகவும் நேசிக்கப்பட்டவர், மதிக்கப்பட்டவர், போற்றப்பட்டவர், பாராட்டப்பட்டவர் கே.ப

தினமணி கதிர்

முரண்சுவை: கொடுமுடிக் கோகிலம்

மதவாதிகள், இலக்கியவாதிகள், அரசியல்வாதிகள், திரையுலகைச் சேர்ந்தவர்கள், இசையுலகத்தினர் உள்பட பல்வேறுபட்ட தமிழ் மக்களாலும் மிகவும் நேசிக்கப்பட்டவர், மதிக்கப்பட்டவர், போற்றப்பட்டவர், பாராட்டப்பட்டவர் கே.ப

Updated On : 27 டிசம்பர், 2023 at 5:17 PM
பகிர்:

மதவாதிகள், இலக்கியவாதிகள், அரசியல்வாதிகள், திரையுலகைச் சேர்ந்தவர்கள், இசையுலகத்தினர் உள்பட பல்வேறுபட்ட தமிழ் மக்களாலும் மிகவும் நேசிக்கப்பட்டவர், மதிக்கப்பட்டவர், போற்றப்பட்டவர், பாராட்டப்பட்டவர் கே.பி. சுந்தராம்பாள்.

அவர் 26.10.1908-ம் ஆண்டு கரூர் அருகிலுள்ள கொடுமுடியில் பிறந்தார். கொடுமுடி பாடல் பெற்ற திருத்தலம். இவருக்கு ஐந்து வயது இருக்கும்போதே சக சிநேகிதிகளோடு விளையாடிக் கொண்டிருக்கும்போது பாடி அசத்துவார்.

அந்த நாட்களில் நாடகங்களில் ஒலிப் பெருக்கி வசதி எல்லாம் கிடையாது. ஒலிப் பெருக்கி இல்லாததால் நடிகர்களும், பாடகர்களும் நாடகக் கொட்டகையின் கடைசி வரிசையில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு கேட்கின்ற அளவுக்குச் சத்தம்போட்டு பேச வேண்டும், பாட வேண்டும். ஆனால் கே.பி.எஸ்.ஸýக்கு சத்தம்போட்டுப் பாடக்கூடிய திறமை இயற்கையிலேயே அமைந்திருந்ததால், கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்தவர்களுக்கும் நன்றாகக் கேட்டது.

பெரிய பெரிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டிய வாய்ப்பு வந்தது. எனவே கும்பகோணத்திற்குச் சென்று அங்கேயே நிரந்தரமாகத் தங்க வேண்டியதாயிற்று.  அங்கு வள்ளித் திருமணம், பவளக்கொடி, நந்தனார் போன்ற நாடகங்களில் நடித்து புகழ் பெற்றார்.

1926-ஆம் ஆண்டு இலங்கைக்குச் சென்று நாடகங்களில் நடித்தார். இசை மற்றும் நாடக உலகில் அந்தக் காலத்தில் கொடிகட்டிப் பறந்த கிட்டப்பாவை இலங்கையில்தான் முதன்முதலில் கே.பி.எஸ். சந்தித்தார். இவரது குரலைக் கேட்ட கிட்டப்பா மயங்கி விட்டார். அதன் தொடர்ச்சியாக கிட்டப்பாவும் கே.பி.எஸ்.ஸýம் சேர்ந்து நடித்த நாடகம் இலங்கையில் அரங்கேற்றப்பட்டது. சங்கீதத்தில் எட்டுக்கட்டை ஸ்ருதி என்பார்கள். அந்த எட்டுக்கட்டையில் பாடுபவர்தான் கிட்டப்பா. அவர் பாடும் எட்டுக்கட்டை ஸ்ருதியை யாரும் தொட முடியாத நிலை இருந்தது. ஆனால் கே.பி.எஸ். எட்டுக்கட்டையைச் சாதாரணமாகத் தொட்டுவிட்டார். அதனால் கிட்டப்பாவுக்கு கே.பி.எஸ். மீது காதல் மலர்ந்தது.

உண்மையான காதலின் முடிவு திருமணம். எனவே இவர்கள் இருவரது திருமணம் 1927-ஆம் ஆண்டு மாயவரத்திலுள்ள ஒரு கோவிலில் நடைபெற்றது. திருமணத்துக்குப் பின்னர் இவர்கள் இருவரும் நடிக்கிறார்கள் என்று கேள்விபட்டாலேபோதும் அந்த ஜோடியைப் பார்க்க ரசிகர் பட்டாளங்கள் அலைமோதும். பொதுவாக கலைஞர்களுக்கு மதுப்பழக்கம் என்பது அந்தக் காலத்தில் சர்வசாதாரணமாக இருந்தது. அந்தக் கொடிய மதுப்பழக்கத்துக்குக் கிட்டப்பாவும் அடிமையானார். இதனால் 1933-இல் கிட்டப்பாவின் உடல் நலம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

உடல்நிலை சரியில்லாத நேரத்தில் திருவாரூருக்குச் சென்று ஒரு நாடகத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். அந்த நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே திடீரென்று மயங்கி விழுந்து, படுத்தபடுக்கையாகிவிட்டார். 1933-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ம் தேதி கிட்டப்பா மரணமடைந்தார். மரணமடையும் பொழுது அவருக்கு வயது 28. கிட்டப்பாவின் மறைவுக்குப் பிறகு எத்தனையோ சபாக்காரர்கள் சுந்தராம்பாளை நாடகத்தில் நடிக்க வற்புறுத்தினார்கள். ஆனால் சுந்தராம்பாள் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. கிட்டப்பாவைத் தவிர நான் யாருடனும் நடிக்கவும் மாட்டேன்  சேர்ந்து பாடவும் மாட்டேன் என்று கூறிவிட்டார். ஆனால் கோயில் கச்சேரிகளில் மட்டும் பாடத் தொடங்கினார். ஏனெனில் அது அவருக்கு மன நிம்மதியைக் கொடுத்தது.

அந்தக் காலத்தில் ஒரு திரைப்படம் தயாரிக்க எழுபத்தைந்தாயிரம் ரூபாய் தான் (75,000) செலவாகும். ஆனால் சுந்தராம்பாள் நந்தனாராக நடிப்பதற்கு 1 லட்சம் ரூபாய் சம்பளம் கேட்டார். தயாரிப்பாளர் எஸ்.எஸ். வாசன் உடனடியாக அந்தத் தொகைக்கு ஒத்துக் கொண்டார். இந்தியாவிலேயே ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய முதல் பெண் கே.பி.எஸ். தான். அதில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கியமான விஷயம் நந்தனாராக அவர் ஆண் வேடமேற்று நடித்தார்.

1958-இல் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர் சுந்தராம்பாளுக்கு சட்டசபை மேலவைப்பதவி கொடுத்தார். பல ஆண்டுகள் திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார் சுந்தராம்பாள். பின்பு ஏ.பி நாகராஜன் படங்களான திருவிளையாடல், கந்தன்கருணை, திருமலை தென்குமரி, தெய்வம், துணைவன், காரைக்கால் அம்மையார், பூம்புகார் போன்ற படங்களில் நடித்தார்.

1978-ம் ஆண்டு வாக்கில் உடல்நிலை மோசமானது. முருக பக்தியின் காரணமாக மருத்துவமனை செல்ல மறுத்துவிட்டார். 1980-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 24-ம் தேதி புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் முருகா முருகா என்று முனகிக்கொண்டிருக்கும்போதே அவரது உயிர் பிரிந்தது. மென்மையான மனம். அதற்குள் கணீர் குரல். இதுதான் கே.பி.எஸ். உச்சஸ்தாயியிலும் கூட சற்றும் பிசிறு தட்டாத குரலுக்குச் சொந்தக்காரரான இவர் வாழ்க்கையின் பெரும்பகுதி வெள்ளைச் சேலைக்குள்தான் கழிந்தது என்பதும் இவருக்கும் இவர் குரலுக்கும் ஜோடியாகத் திகழ்ந்த எஸ்.ஜி.கிட்டப்பாவுடனான மணவாழ்க்கை ஆறே ஆண்டுகள்தான் தொடர்ந்தது என்பதும் முரண்சுவை அல்லாமல் வேறென்ன?!

(தொடரும்)

முழு கட்டுரையைப் படிக்க →