அ றிமுக இயக்குநர் குழந்தை வேலப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள "ஆண்மை தவறேல்' படத்தில் நாயகனாக நடித்துள்ளார் த்ருவா. சினிமா பிரவேசம் குறித்து அவர் கூறியது, ""சென்னைதான் பூர்வீகம். கெமிக்கல் என்ஜினீயரிங் முடித்து விட்டு அப்பாவுக்கு உதவியாக வேலை பார்த்து வந்தேன். கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்கு உதவியாக எனக்கு கிடைத்த சென்னை நாயகன் பட்டமும் இருந்தது. நிறைய இயக்குநர்களிடம் போட்டோக்களைக் காட்டி வாய்ப்பு கேட்டேன். குழந்தை வேலப்பன் இந்தப் படத்தில் வாய்ப்பு தந்தார். கால் சென்டரில் வேலை பார்க்கும் கேரக்டரில் நடித்துள்ளேன். முதல் படத்தில் நடிப்புக்கு நல்ல ஸ்கோப் இருந்தது. நல்ல வரவேற்பு கிடைக்கும் என நினைக்கிறேன். இனி தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்க எண்ணுகிறேன்'' என்றார் த்ருவா.
தினமும் கடந்து செல்பவர்கள்!
நாசிகா பிலிம்ஸ் நிறுவனத்துடன் கோல்டன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் "சங்கர்'. கந்தேஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக ஹாசிகா நடிக்கிறார். இவர்களுடன் நிறைய புதுமுகங்கள் அறிமுகமாகும் இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி வீரா இயக்குகிறார். ""தினம் தினம் எத்தனையோ பெண்கள் நம்மை கடந்து செல்கிறார்கள். ஆனால் ஏதோ ஒரு பெண்ணின் மீது மட்டும் காதல் ஏற்படுகிறது. இதே மாதிரிதான் பெண்களும். ஆண்களைப் போல்தான் எல்லா உணர்வுகளும் பெண்களுக்கும் படைக்கப்பட்டு இருக்கிறது. ஆண்கள் வெளிக்காட்டி விடுகிறார்கள். பெண்களால் அது முடியவில்லை. இதை மையமாக வைத்துதான் இந்தப் படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறேன். காதல்தான் களம் என்றாலும், அதை வேறொரு வித்தியாசமான கோணத்தில் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. அதன் விளைவுதான் இந்தப் படம். புதுமையான யுக்தியில் இதை படமாக்கி வருகிறேன். படத்தின் பெரும்பாலான காட்சிகள் ராஜபாளையம் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகின்றன. கணேஷ்ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். கவிஞர் முத்துலிங்கத்துடன் புது முக கவிஞர்கள் பாடல்கள் எழுதுகிறார்கள். தஷி என்பவர் இசையமைக்கிறார்'' என்றார் இயக்குநர் வீரா.
நட்புக்காக ஒரு கதை!
இராம.நாராயணனின் மாணவர் அன்பு சரவணன் இயக்கும் படம் "கூட்டாஞ்சோறு'. நட்பை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அஜய்குமார், ரமேஷ், சிவமாறன், பிச்சுமணி, தீனா ஆகிய புதுமுகங்கள் நடிக்கிறார்கள். "வள்ளுவன் வாசுகி' உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ஸ்வேதா நாயகியாக நடிக்கிறார். போஜ்புரி மொழியில் முன்னணி நடிகையாக உள்ள ஸ்வாதி வர்மா இதில் முக்கிய பாத்திரம் ஏற்றுள்ளார். படம் குறித்து இயக்குநர் அன்பு சரவணனிடம் பேசிய போது, ""நட்பை அடிப்படையாக வைத்துதான் திரைக்கதை அமைத்துள்ளேன். இத்தனை வருட சினிமாவில் சுழன்ற வந்த கதைகளில் இதுவும் ஒன்று. அதை புதிய களத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறேன். காதலுக்கு ஆயிரம் பிரச்னைகள் இருப்பதை போல் நட்புக்கும் நிறைய பிரச்னைகள் இருக்கிறது. காதலுக்கு அரசியலும், ஜாதியும் தடை போடுகிறது. ஊரில் நடக்கும் சில திடுக்கிடும் சம்பவங்கள் நட்பையும் பிரிக்கிறது. நட்பின் பின்னணியில் ஒரு அற்புதமான காதலை மையப்படுத்தியிருக்கிறேன்'' என்றார் அன்பு சரவணன்.
கால்ஷீட் பிரச்னை!
மோகன்லால் ஜோடியாக ஸ்ரேயா மலையாளத்தில் நடித்து வரும் படம் கேசனோவா. ரோஷன் ஆண்ட்ரூ இயக்குகிறார். பிப்ரவரியில் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இப்போது திடீரென மே மாதத்துக்கு படம் தள்ளி போய் உள்ளது. இந்தப் படத்தில் நடித்த படியே மோகன்லால் ஜோடியாக கிறிஸ்டியன் பிரதர்ஸ் படத்திலும் நடித்து வருகிறார் ஸ்ரேயா. திடீரென அந்தப் படத்துக்கு ஸ்ரேயா முக்கியத்துவம் தந்து கால்ஷீட் கொடுத்து விட்டாராம். மோகன்லால் தரப்போ கிறிஸ்டியன் பிரதர்ஸ் படத்துக்கு முக்கியத்துவம் தருகிறது. இதனால் கேசனோவா படக்குழு ஹீரோ மோகன்லால் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறதாம். 75 சதவீதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் மற்றொரு படத்தில் மோகன்லால் கவனம் செலுத்துவது மலையாள படவுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறதாம். "" ஒவ்வொரு படத்தின் சூழ்நிலையை உணர்ந்துதான் கால்ஷீட் கொடுத்து வருகிறேன். இப்போதும் அப்படிதான் கொடுத்தேன். ஆனால் என்னால் எந்த வித பாதிப்பும் படத்துக்கு வந்து விடக் கூடாது என நினைக்கிறேன். இரண்டுமே நல்ல படங்கள். அதனால் இப்போது மிகுந்த கவனத்துடன் இருக்கிறேன்'' என்றார் ஸ்ரேயா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.