முரண்சுவை - 20: நிஜாம் மன்னரும் நிஜ மன்னரும்!
குஜராத் மாநிலத்தில் கரம்சாத் கிராமத்தில் 1875-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதி பிறந்தார் வல்லபபாய் படேல். தந்தையின் பெயர் ஜாவேரி பாய் படேல். அவர் குடும்பம் பரம்பரையாக வீரம் நிறைந்த குடும்பம். பயம் எ
தினமணி கதிர்முரண்சுவை - 20: நிஜாம் மன்னரும் நிஜ மன்னரும்!
குஜராத் மாநிலத்தில் கரம்சாத் கிராமத்தில் 1875-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதி பிறந்தார் வல்லபபாய் படேல். தந்தையின் பெயர் ஜாவேரி பாய் படேல். அவர் குடும்பம் பரம்பரையாக வீரம் நிறைந்த குடும்பம். பயம் எ
கு ஜராத் மாநிலத்தில் கரம்சாத் கிராமத்தில் 1875-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதி பிறந்தார் வல்லபபாய் படேல்.
தந்தையின் பெயர் ஜாவேரி பாய் படேல். அவர் குடும்பம் பரம்பரையாக வீரம் நிறைந்த குடும்பம். பயம் என்பதை அறியாதவர்கள். ஆசிரியர்களைப் பார்த்துகூட படேல் பயந்ததில்லை.
படேலின் தந்தை மிகச் சிறந்த வீரர். வெள்ளையர்களை எதிர்த்த ராணி லட்சுமிபாய் படையில் தீவிரமாகப் போராடியவர்.
வகுப்பில் ஓர் ஆசிரியர் நோட்டு புத்தகங்கள் போன்றவற்றை தன்னிடமே வாங்க வேண்டும் என்று சொல்லி பள்ளிக் கூடத்திற்குள்ளேயே வியாபாரம் பண்ணினார். அதைச் சின்ன வயதிலேயே அவர் தட்டிக் கேட்டார்.
எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்ற பிடிவாத குணம் இவருக்கு சின்ன வயதிலிருந்தே இருந்தது. இவருக்கு தாய் மொழி மீது அதிகப் பற்று இருந்தது.
படேல் திட்டமிட்டபடியே கோத்ரா என்ற நகரில் முதன் முதலில் வக்கீல் தொழிலைத் தொடங்கினார். ஜாவர்பா என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.
ஜாவர்பா எதிர்பாராமல் நோய் வாய்ப்பட்டார். எவ்வளவோ சிகிச்சைகள் அளித்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை இறந்து விட்டார்.
ஜாவர்பா இறக்கும்பொழுது வல்லபாய்க்கு 34 வயதுதான். மனைவி இறந்ததும் அவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளுமாறு எவ்வளவோ பேர்கள் வற்புறுத்தினார்கள். ஆனால் படேல் அதற்கு சம்மதிக்கவில்லை. படேல் பாரிஸ்டர் படிப்பிற்காக இங்கிலாந்து சென்றார். நன்றாகப் படித்து பாரிஸ்டர் பரீட்சையில் முதல் மாணவராகத் தேர்ச்சியடைந்தார். அதற்காக அவர் பரிசும் பெற்றார். இங்கிலாந்தில் அவர் படித்துக் கொண்டிருந்தபோது ஆங்கில நாகரிகம் அவரைப் பெரிதும் கவர்ந்தது. அதனால் அவர் ஆங்கிலேயர்களைப் போலவே உடைகள் அணிய ஆரம்பித்தார்.
வக்கீல் தொழிலை மிகச் சிறப்பாகச் செய்தார். அதனால் பெயரும் புகழும் சேர்ந்தன. ஆரம்பக் காலத்தில் படேலுக்குக் காந்தியடிகளைப் பிடிக்கவே பிடிக்காது. காலப்போக்கில் பட்டேல் காந்தியடிகளை விரும்ப ஆரம்பித்தார். வெறும் பேச்சு என்று இல்லாமல் சொல்லியபடி நடக்கும் காந்தியடிகளின் அருங்குணம் படேலை மிகவும் கவர்ந்தது. யாருக்கும் அடங்காத படேல் காந்தியடிகளுக்கு அடிமையானார். எனவே காந்தியடிகளுடன் சேர்ந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடுவது என்ற முடிவுக்கு வந்தார்.
வரிகொடா இயக்கம் என்று ஒன்றை மகாத்மா தொடங்கினார். இதில் பணக்காரர்கள் மட்டும் வரி செலுத்தினால் போதும் என்று காந்தியடிகளுக்குப் படேல் ஒரு கடிதம் எழுதினார். அதை காந்தியடிகள் ஏற்றுக் கொண்டார். காந்தியடிகளுடன் நெருங்கிப் பழகிய பிறகு ஆங்கில நாகரிக மோகம் படேலை விட்டு அகன்றது.
தன்னுடைய வக்கீல் தொழிலையும், ஏராளமான வருமானத்தையும் உதறித் தள்ளிவிட்டு சுதந்திரப் போராட்டத்திற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
பர்டோலி சத்தியாகிரகப் போராட்டத்தில் படேலின் புகழ் இமயம் முதல் குமரி வரை எங்கும் பரவத் தொடங்கியது. பர்டோலிப் போராட்டத்தில் வெற்றி பெற்றதால் தான் சர்தார் என்ற பட்டத்தைப் பெற்றார்.
எரவாடா சிறையில் இருந்த படேல் ஆங்கில அரசாங்கத்தின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு இறந்த தன்னுடைய சகோதரனின் உடலைப் பார்க்கக்கூட விரும்பவில்லை.
வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டுப் போன பிறகு இந்திய நாட்டின் பிரதமர் பொறுப்பை ஜவாகர்லால் நேரு ஏற்றார். படேல் உதவிப் பிரதமராக ஆனார்.
சுதந்திரம் பெற்ற பிறகு, 10 மாதங்களுக்குள் படேல் 500க்கும் அதிகமான மன்னர்களிடம் கையெழுத்து பெற்று, அவர்கள் ஆண்ட பகுதிகளை இந்திய ஆட்சியில் சேர்த்தார்.
ஹைதராபாதை ஆண்ட மன்னர் நிஜாம் மட்டும் இந்திய ஆட்சியில் இணையாமல் இருந்தார். உலகிலுள்ள பணக்காரர்களில் அவரும் ஒருவர். அவர் ஆட்சியிலிருந்த மக்கள் இந்திய ஆட்சியோடு இணைய வேண்டும் என்று பெரும் போராட்டம் நடத்தினார்கள்.
ஆனால் படேல் இந்திய ராணுவத்தின் துணையைக் கொண்டு 5 நாட்களுக்குள் நிஜாமை அடிபணிய வைத்தார். இந்திய நாடு விடுதலையடைய காந்தியடிகள் பாடுபட்டார். இந்தியாவை ஒரே நாடாக ஆக்கியவர் படேல் ஆவார். அப்போது படேலுக்கு வயது 75.
படேலைச் சிறப்பிக்க ஆமதாபாத் மக்கள் அவருடைய 75-வது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி, 15 லட்சம் ரூபாய் பண முடிப்பை அவருக்குக் கொடுத்தார்கள். அதை அப்படியே படேல் பொது நிதிக்கு கொடுத்தார்.
இரும்பு மனிதர் என்று பெயரெடுத்த சர்தார் படேல் 1950-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி காலமானார்.
ஆரம்பத்தில் காந்தியைப் படேலுக்குப் பிடிக்காது. அப்படிப்பட்டவரை காந்தியின் தாசனாக்கியது வரலாறு. இதுதான் வரலாற்றின் முரண்சுவை.
(தொடரும்)