பார்வை: திருப்பூர்... பின்னலாடை... பங்களாதேஷ்!
பின்னலாடைத் தொழில் என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது திருப்பூர்தான். திருப்பூரில் தயாரிக்கப்படுகிற பின்னலாடைகள் வெளிநாடுகள் பலவற்றிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த 80 ஆண்டுகளாகத் திருப்பூர் பின
பின்னலாடைத் தொழில் என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது திருப்பூர்தான். திருப்பூரில் தயாரிக்கப்படுகிற பின்னலாடைகள் வெளிநாடுகள் பலவற்றிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த 80 ஆண்டுகளாகத் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியில் சாதித்தவற்றை முந்திக் கொண்டு போய்விட்டது பங்களாதேஷ். அதுவும் கடந்த 10 ஆண்டுகளில் அளவுக்கதிகமான வளர்ச்சி. திருப்பூரில் சாத்தியப்படாதது டாக்காவில் சாத்தியமானது எப்படி என்று தெரிந்து கொள்ள திருப்பூரில் இருந்து 12 பேர் கொண்ட குழு, பங்களாதேஷுக்குப் போய் வந்திருக்கிறது. அந்தக் குழுவில் புகழ்பெற்ற எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனும் இடம் பெற்றிருந்தார். திருப்பூரைச் சேர்ந்த அவர், 5 நாவல்கள், 11 சிறுகதைத் தொகுப்புகள் உட்பட 30 நூல்களை வெளியிட்டிருக்கிறார்.
""தன்னார்வக் குழு பிரதிநிதிகள், தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் என 12 பேர் கொண்ட குழுவில் என்னையும் சேர்த்துக் கொண்டு அழைத்துச் சென்றனர் பிரக்ருதி என்ற அமைப்பினர். சிறு வயதில் இருந்தே திருப்பூரில் பனியன் கம்பெனிகளைப் பார்த்துப் பழகிய எனக்கு, பங்களாதேஷின் இந்த வளர்ச்சிக்குக் காரணம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்தது. ஆனால் அங்கே போய்விட்டு வந்த பின்பு, அங்குள்ள நிலைமைகளைத் தெரிந்து கொண்ட பின்பு, அந்த வளர்ச்சிக்குப் பின்னுள்ள துயரக் காட்சிகளே இப்போது என் நினைவில் நிற்கின்றன'' என்கிறார் சுப்ரபாரதிமணியன்.
அப்படியென்ன துயரம் தரும் காட்சிகள்? என்று மெல்ல கேள்வி வலையை விரித்தோம்.
""பங்களாதேஷில் ஒருவாரம் இருந்து பல பின்னலாடை தயாரிக்கும் நிறுவனங்களைப் பார்த்தோம். உலகில் சீனாவுக்கு அதிகப்படியாக பின்னலாடைகளைத் தயாரித்து பங்களாதேஷ்தான் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. அங்குள்ள நிறுவனங்கள் லாபத்துக்கு மேல் லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றன. இதற்கு முக்கியமான காரணம், அங்கே வேலை செய்பவர்களுக்குச் சம்பளம் குறைவாக இருப்பதுதான். டாக்காவில் மட்டும் 4 ஆயிரம் பனியன் கம்பெனிகள் இருக்கின்றன. அங்கே வேலை செய்பவர்களில் 85 சதவீதம் பேர் பெண்கள். அதுவும் சுற்றிலும் உள்ள கிராமங்களில் இருந்து வேலை தேடி வந்தவர்கள். அவர்களுக்கு மாதச் சம்பளம் வெறும் 1600 ரூபாய்தான். இதை வைத்து அவர்கள் மூன்று வேளையும் சாப்பிட வேண்டும். ஆனால் விலைவாசியோ மிகவும் கடுமையாக உள்ளது. ஒரு லிட்டர் பால் 60 ரூபாய்க்கு விற்கிறது. பனியன் கம்பெனியில் வேலை செய்யும் பெண்களின் ஒரு நாளைக்கான சம்பளத்தைவிட இது அதிகம். அரிசி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் அதிகம். பருப்பு ஒரு கிலோ ரூ.110க்கு விற்கிறது. இந்தக் குறைந்த சம்பளம் கூட 2 ஆண்டு காலமாக அங்கே நடந்த பல போராட்டங்களின் விளைவாகக் கிடைத்ததுதான்.'' என்கிறார் துயரத்துடன்.
பங்களாதேஷில் சம்பள உயர்வு கேட்டுப் போராட முடியுமா? என்று கேட்டோம்.
""பங்களாதேஷில் மாற்றி மாற்றி இரு கட்சிகளின் ஆட்சிதான் 1971}இல் இருந்து நடைபெற்று வருகிறது. ஆனால் உண்மையில் சர்வாதிகார ஆட்சி என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். இந்தியாவில் இருக்கின்ற ஜனநாயக உரிமைகள் எல்லாம் அங்கு கிடையாது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போராட்டம் நடத்திய 15 ஆயிரம் பேரைச் சிறைக்குள் தள்ளியது அங்குள்ள அரசு. பயங்கர வறுமை, கடுமையான அடக்குமுறை அங்கே நிலவுகிறது. இப்படிக் குறைந்த சம்பளம் கொடுப்பதால் அங்குள்ள பல பனியன் நிறுவனங்கள் மிகப் பெரிய அளவில் லாபம் சம்பாதித்து வளர்ந்து விட்டன'' என்ற அவர் சிறிது இடைவெளிவிட்டு,
""அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களை நிரந்தரம் செய்வதில்லை. எல்லாரும் காண்ட்ராக்ட் முறையில் வேலை செய்கிறார்கள். அதிலும் பீஸ் ரேட் படிதான் சம்பளம். இவ்வளவு உற்பத்தி செய்தால் இவ்வளவு சம்பளம் என்று கணக்கிடுகிறார்கள். நமதுநாட்டில் உள்ளதுபோல் இஎஸ்ஐ, பிஎஃப், இன்சூரன்ஸ், பணிக்கொடை என்று எதுவுமே அங்கே இல்லை. இவற்றையெல்லாம் கேட்கக் கூடிய தொழிற்சங்கங்களும் அங்கே வலுவாக இல்லை.
அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களை ரோபோ மாதிரிதான் நடத்துகிறார்கள். இந்தக் கொடுமைகளின் பின்னணியில்தான் பங்களாதேஷின் பின்னலாடைத் தொழில் வளர்ச்சியைப் பார்க்க வேண்டும். அங்கேயுள்ள நிலைமைகளை ஒப்பிடும்போது நம்நாட்டின் நிலை எவ்வளவோ மேல் என்றுதான் சொல்ல வேண்டும்'' என்ற அவரிடம், திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிகளுக்கும் அங்குள்ள பனியன் கம்பெனிகளுக்கும் என்ன வேறுபாடுகள் உள்ளன? என்று கேட்டோம்.
""தொழிற்சாலைகளின் தரத்திற்கு தரப்படுகிற ஐஎஸ்ஓ சான்றிதழ் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுபோல பின்னலாடைத் தொழிற்சாலைகளுக்கு எஸ்ஏ 8000 ஸர்டிபிகேட் பெற வேண்டும். பல வெளிநாடுகள் எஸ்ஏ 8000 ஸர்டிபிகேட் பெற்ற நிறுவனங்களில் தயாரிக்கப்பட்ட பின்னலாடைகளையே இறக்குமதி செய்கின்றன. அந்த ஸர்டிபிகேட் பெற வேண்டும் என்று வற்புறுத்துகின்றன. இந்த ஸர்டிபிகேட் பெற நிர்வாகத்தில் பல மாற்றங்களைச் செய்து அவர்கள் குறிப்பிடுகிற முறைப்படி நிர்வாகம் செய்ய வேண்டும். நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் பணிச் சூழல், வேலை நேரம், குடியிருப்பு வசதி, மருத்துவ வசதி போன்றவற்றையும் கவனிக்க வேண்டும். அப்படி எஸ்ஏ 8000 ஸர்டிபிகேட் பெற்ற நிறுவனங்கள் திருப்பூரில் 350-க்கும் அதிகமாக உள்ளன. ஆனால் பங்களாதேஷில் வெறும் மூன்றுதான் உள்ளன. இருந்தும் அவர்கள் நம்மைவிட அதிகமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். அதாவது எஸ்ஏ 8000 ஸர்டிபிகேட்டை அதிகம் வற்புறுத்தாத வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். இது ஒரு முக்கியமான வேறுபாடு. மேலும் இங்குள்ளதைப் போல சுற்றுப்புறச் சூழல் சீர்கேட்டைப் பற்றிய விழிப்புணர்வு அங்கேயில்லை. அரசு சுற்றுப்புறச் சூழல் சீர்கேட்டைக் கண்டு கொள்வதில்லை. இதனால் அங்கே எந்தத் தங்குதடையுமில்லாமல் உற்பத்தி நடைபெறுகிறது. ஆனால் இம்மாதிரியான வளர்ச்சி நல்ல வளர்ச்சியில்லை'' என்கிறார் சீற்றத்துடன்.
நமது நாட்டிற்கும் பங்களாதேஷுக்கும் என்ன வித்தியாசத்தைப் பார்த்தீர்கள்? என்று கேட்டோம்.
""பெரிய வித்தியாசத்தைப் பார்க்க முடிவதில்லை. எல்லாம் ஒரு காலத்தில் ஒன்றாக இருந்த நாடுகள்தானே? இப்போது உலக அளவில் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு, நியாய வணிகம் என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். சுற்றுச் சூழல் சீர்கேட்டால் எல்லாருக்கும் பாதிப்பு என்பதால் சுற்றுச் சூழல் பாதுகாப்பில் பெரிய நாடுகளில் உள்ள நிறுவனங்கள் கூட அக்கறையிருப்பதாகக் காட்டிக் கொள்கின்றன. ஆனால் சுற்றுப்புறச் சூழலைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் - வேலை செய்யும் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக நடத்தி - ஒரு வளர்ச்சியை பின்னலாடைத் தொழிலில் பங்களாதேஷ் சாதித்திருக்கிறது. இதைத்தான் நான் பங்களாதேஷ் சென்று தெரிந்து கொண்டேன். இப்படிப்பட்ட வளர்ச்சி தேவையில்லை என்பதே என் கருத்து'' என்கிறார் சுப்ரபாரதிமணியன் ஆவேசத்துடன்.