எங்க வீட்டு ருசி
மனஹோளம் ரேவதி சண்முகம் தேவையான பொருட்கள் பா. பருப்பு : 3 ஆழாக்கு, க. பருப்பு : 2 ஆழாக்கு, உ. பருப்பு : ஒன்றரை ஆழாக்கு, ப. அரிசி : ஒன்றரை ஆழாக்கு, பொட்டுக் கடலை : 2 ஆழாக்கு, வெல்லம் : 8 ஆழாக்கு (தட்டி
மனஹோளம்
ரேவதி சண்முகம்
தேவையான பொருட்கள்
பா. பருப்பு : 3 ஆழாக்கு,
க. பருப்பு : 2 ஆழாக்கு,
உ. பருப்பு : ஒன்றரை ஆழாக்கு,
ப. அரிசி : ஒன்றரை ஆழாக்கு,
பொட்டுக் கடலை : 2 ஆழாக்கு,
வெல்லம் : 8 ஆழாக்கு (தட்டி பொடிசெய்தது)
செய்முறை
பா. பருப்பு, க. பருப்பு, உ. பருப்பு, ப. அரிசி ஆகியவற்றை வெய்யிலில் காய வைத்து மிஷினில் அரைத்துக்
கொள்ளவும். மாவை சலித்து வைத்துக் கொண்டு தண்ணீரை சூடாக்கிக் கொண்டு, நெய் சிறிது சேர்த்து சிறிது சிறிதாகப் பிசைந்துக் கொண்டு, ஓமப்பொடி
குழாயில் பிழியவும்.
தேங்காயைப் பல்லு பல்லாகக் கீறி வைத்துக் கொள்ளவும். அவற்றை நெய்யில் வறுக்கவும். வெல்லத்தை அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டவும். மறுபடியும் வெல்லப் பாகு முற்றும் வரை கொதிக்க விடவும். பிறகு ஓமப்பொடி, தேங்காய் பால், பொட்டுக் கடலை ஆகியவற்றை சர்க்கரையுடன் சேர்த்து வெல்லப் பாகு ஊற்றிக் கிளறவும்.
கவனத்துக்கு...
(இதற்கு இன்னும் ஓர் அளவை உண்டு. மேற்சொன்ன செய்முறைப்படிதான் செய்ய வேண்டும்)
க. பருப்பு : 3 ஆழாக்கு,
பா. பருப்பு : 2 ஆழாக்கு,
உ. பருப்பு : ஒன்றரை ஆழாக்கு,
ப. அரிசி : 1 ஆழாக்கு,
பொட்டுக் கடலை : 2 ஆழாக்கு,
சர்க்கரை : 1 ஆழாக்கு,
வெல்லம் : 8 ஆழாக்கு.
பத்மாவதி
தேவையான பொருட்கள்
உருட்டு உளுந்தம் பருப்பு: ஒரு ஆழாக்கு
கருப்பட்டி : 1 வட்டு
எண்ணெய் : தேவையான அளவு
செய்முறை
உளுந்தம்பருப்பை ஒன்றரை மணி நேரம் தண்ணீர் விட்டு ஊற வைக்க வேண்டும். பிறகு நன்றாகக் கழுவி நீரை வடித்துவிட்டு, நைசாக அரைக்கவும். அரைக்கும்போது நீர் விடக்கூடாது. உளுந்த வடைக்கு அரைப்பது போல் லேசாகத் தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம்.
முக்கால் பதம் வந்ததும் கருப்பட்டியைத் தட்டி அதில் சேர்த்து அரைக்கவும். இது கொஞ்சம் நீர்க்கும் என்பதால் நீர் விடாமல் அரைத்தால் நல்லது. கிரைண்டரில் அரைப்பதை விட உரலில் அரைத்தால் பதம் சரியாக வரும். நன்றாக பக்குவமாக அரைத்து எடுத்து
வைத்துக் கொள்ளவும்.
இப்போது வாணலியில் எண்ணெய் வைத்து காய்ந்ததும், உளுந்த வடையைச் சுடுவது போல் இந்த மாவெடுத்து நடுவில் ஓட்டை இட்டு, எண்ணெயில் போட்டு எடுக்கவும். சுவையான கருப்பட்டி வடை தயார்.
சாந்தி விஜயகிருஷ்ணன்
தேவையான பொருட்கள்
பச்சரிசி : 1 கப்,
கடலைப் பருப்பு : 1 டேபிள் ஸ்பூன்
பயத்தம் பருப்பு : 1 டேபிள் ஸ்பூன்,
நெய் : 1/4 கப்,
பால் : 3 கப்,
பாகு வெல்லம் : 3 கப்,
ஏலக்காய்த் தூள் : 1/2 டீஸ்பூன்,
துண்டுகள் செய்த முந்திரி :
1 டேபிள் ஸ்பூன்,
உலர்ந்த திராட்சை : 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை
1 டீஸ்பூன் நெய்விட்டு அரிசியை தீயாமல் வறுத்துக் கொள்ளவும் .
1 டீஸ்பூன் நெய்விட்டு பயத்தம் பருப்பையும் கறுகாமல் வாசனை வரும்வரை வறுத்தெடுத்துக் கொள்ளவும். கடலைப் பருப்பையும் அதே போன்று வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து 1 கப் தண்ணீர் 3 கப் பால் சேர்த்து குக்கரில்
குழைய வேகவிடவும்.
வெல்லத்தை பொடி செய்து, அரை கப் நீர்விட்டு கனமான கடாயில் போட்டு கொதிக்க விடவும். வெல்லம் கரைந்ததும் அதில் உள்ள மண்ணை வடிகட்டி மீண்டும் கடாயில் போட்டு நன்றாகக் கொதித்ததும், அதில் வேக வைத்து எடுத்துள்ள அரிசி பருப்பு கலவையைப் போட்டு நன்றாகக் கொதிக்க விடவும். கட்டியில்லாமல் இருக்க வேண்டும்.
கெட்டியாக இருந்தால் மீண்டும் சிறிது பாலை சேர்க்கலாம். இது சர்க்கரைப் பொங்கலைப் போல் கெட்டியாகவும் இருக்கக் கூடாது, தண்ணீராகவும் இருக்கக் கூடாது. குழைவாக இலையில் விடும் பக்குவத்தில் இருக்க வேண்டும். பின்னர் ஏலக்காய்த்
தூளை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும். நெய்யில் முந்திரி திராட்சை இவற்றை வறுத்துப் போடவும். தேவையெனில் கொஞ்சம் பச்சை கற்பூரம்
சேர்த்தால் வாசனையாக இருக்கும்.
அரங்க. மல்லிகா
தேவையான பொருட்கள்
மைதா மாவு : ஒன்றரை கப்
வெல்லம் : ஒரு கப் (இனிப்பு
விரும்புபவர்கள் இன்னும் சிறிது சேர்த்துக்கொள்ளலாம்)
தேங்காய் துருவல் :
தேவையான அளவு
ஏலக்காய்ப்பொடி : தேவையான அளவு
சுக்குப்பொடி : அரைத் தேக்கரண்டி
எண்ணெய் : பொரிப்பதற்குத் தேவையான அளவு
வேகவைத்த கடலைப்பருப்பு: 2ஸ்பூன்
செய்முறை
கடலைப்பருப்பை வேகவைத்துக் கொள்ள வேண்டும்.
தோசை பதத்தில் மைதா மாவைக் கரைக்கவும். அதனுடன் வெல்லம்,
ஏலக்காய், சுக்குப்பொடி, வேகவைத்த கடலைப்பருப்பு
ஆகியவற்றைக் கலந்து கொள்ளவும்.
தேங்காய் விரும்புபவர்கள் தேங்காயைத் துருவி, அதனை மாவுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாகக் காய்ந்ததும், ஒரு கரண்டி மாவை எடுத்து சிறுசிறு அப்பமாக ஊற்றி நன்றாக வெந்த பிறகு எடுக்கவும். சுவையான தோப்பம் தயார்.
தீபாவளி அன்று பல் இல்லாத பெரியவர்கள், முதியவர்கள் மற்ற பலகாரங்களை கடித்துச் சாப்பிட முடியாத நிலையில், வீட்டில் அன்று அவர்களும் பலகாரம் சாப்பிட வேண்டும் என்பதற்காகவே இதனைச் செய்து கொடுப்பது வழக்கம். இதனால் இது சிறப்பானதும்கூட!
ராமலட்சுமி
தேவையான பொருட்கள்
பயத்தம் பருப்பு (அ) பாசிப்பயறு: ஒரு கப்
பனைவெல்லம் (அ) வெல்லம்: முக்கால் கப்
தேங்காய் துருவல் : அரை கப்
எள் : ஒரு டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு : கால் கப்
ஏலக்காய் : ஆறு
சீனி : ஒரு தேக்கரண்டி
நெய் : ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் : பொரிக்கத் தேவையான அளவு
மேல் மாவுக்கு...
மைதா மாவு : அரை கப்
அரிசி மாவு : அரை கப்
மஞ்சள் பொடி : கால் டீஸ்பூன்
பேக்கிங் சோடா : ஒரு சிட்டிகை
உப்பு : ஒரு சிட்டிகை
செய்முறை
சூடான வெற்று வாணலியில் பயத்தம் பருப்பை சிவக்க வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பாசிப்பயறு என்றால் வறுத்தபின் தோலினை நீக்கி விடவேண்டும். பிறகு எள்ளை வறுத்தெடுத்து வைக்கவும். அதே வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரிப்பருப்பு ஏலக்காய் ஆகியவற்றை வறுத்து எடுத்து வைக்கவும். பின் அதே நெய்யில் தேங்காய்ப்பூவை சேர்த்து லேசாக வறுக்கவும்.
மிக்ஸியில் 1 டீஸ்பூன் சீனியுடன் ஏலக்காய் நன்கு பொடி செய்யவும்.
முந்திரிப்பருப்பை மிகப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
அதன் பிறகு வறுத்த பயத்தம் பருப்பை மிக்ஸியில் நன்கு திரித்து எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பொடித்த பனைவெல்லத்தோடு சிறிது நீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். கொதித்துக் கரைந்ததும் வடிகட்டி, மறுபடி அடுப்பில் ஏற்றிப் பக்குவமாகப் பாகு காய்ச்சவும். கம்பிப்பதம் வந்த உடனேயே தயாராக
வைத்திருக்கும் திரித்த மாவில் சேர்த்து, கட்டி விழாமல் கிளறவும். பொடித்த ஏலக்காய், வறுத்த எள் மற்றும் முந்திரியைச் சேர்த்து, அது ஆறிய பிறகு சிறுசிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.
மேல் மாவுக்கு சொன்ன பொருட்களை, தோசை மாவு பதத்துக்கு கட்டி இல்லாமல் இளக்கமாகக் கரைத்துக் கொள்ளவும்.உருண்டைகளை மாவில் தோய்த்து வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் மூன்று மூன்றாகப்
போட்டுப் பொரித்து எடுத்தால் ஒட்டிக் கொண்டு கொத்துக் கொத்தாகக் கிடைக்கும். அதனாலேயே சுவையான இந்தப் பதார்த்தம் முந்திரிக் கொத்து என அழைக்கப் படுகிறது.
கவனத்துக்கு...
இனிப்புக்கு வெல்லத்தை விட பனைவெல்லம் (கருப்பட்டி) தான் சுவை கூட்டும்.
அதே போல சிலர் மேல்மாவுக்கு மைதாவுக்குப் பதில் உளுந்தை ஊறவைத்து அரைத்து, கூட அரிசி மாவு
சேர்த்தும் செய்வார்கள்.
அது தனிச் சுவையுடன் மிருதுவாக இருக்கும் என்றாலும்,
செய்த ஓரிரு தினங்களில் சாப்பிட்டு முடித்துவிட
வேண்டும். அரிசி மாவு மட்டுமே உபயோகித்து
செய்வது கூடுதல் மொறுமொறுப்புடன் இருக்கும். மைதா மற்றும் அரிசி மாவில் செய்வதை தீபாவளிக்கு சிலதினம்
முன்னரே செய்து வைத்து விடலாம்.
கீதாஞ்சலி பிரியதர்ஷினி
தேவையான பொருட்கள்
கடலைப் பருப்பு : 500 கிராம்,
வெல்லம் : 250 கிராம்,
தேங்காய்ப்பூ : சிறிதளவு,
ஏலக்காய் : சிறிதளவு,
எண்ணெய் : 500 கிராம்
அரிசி மாவு மற்றும்
உளுந்து மாவு : 250 கிராம்.
செய்முறை
கடலைப் பருப்பை அரை வேக்காடு வேகும் அளவுக்கு வேக வைத்துக்கொள்ளவும்.
பிறகு வெல்லம், தேங்காய்ப்பூ சேர்த்து மசித்து சிறிய உருண்டைகளாகப் பிடித்து வைக்க வேண்டும்.
ஊற வைத்த அரிசி மற்றும் உளுந்தை தோசை மாவு பதத்துக்கு அரைக்க வேண்டும். கடலைப் பருப்பு உருண்டையை அரிசி மாவுக் கலவையில் முக்கி எடுத்து தேங்காய் எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.
தீபாவளி அன்று காலையில் இட்லி வடையுடன் பரிமாறப்படும் பலகாரம் இது.
உமா தயாளன்
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி :200 கிராம்
குண்டுவெல்லம் :250 கிராம்
கடலைப்பருப்பு :250 கிராம்
ஏலக்காய் :தேவையானது
தேங்காய் துருவியது:ஒன்று
செய்முறை
புழுங்கல் அரிசியை 1 மணிநேரம் நன்றாக ஊறவைத்து, நைசாக அரைத்துக் கொள்ளவும். கடலைப் பருப்பை வேகவைத்து, மிக்சியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். வெல்லத்தைப் பொடி செய்து, அரைத்த கடலைப் பருப்பு மாவுடன் சேர்த்துக் கொண்டு, துருவிய தேங்காயை நன்கு வதக்கிய பிறகு கடலைப் பருப்புக் கலவையுடன் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் பொடி செய்த ஏலக்காயையும் போட்டு, நன்றாக பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து, அரைத்த புழுங்கல் அரிசி மாவில் தேய்த்துக் கொண்டு, அடுப்பில் பணியாரக் கல்லை வைத்து எண்ணெய் விட்டு பின்பு அந்த மாவில் தோய்த்த உருண்டைகளை பணியாரக் குழியில் போட்டு வேகவைக்க வேண்டும். பின்பு நன்கு திருப்பித் திருப்பி
உருண்டைகளைப் போட்டு, வெந்தவுடன் எடுக்கவேண்டும்.
இந்தப் பணியாரம் சாப்பிட ருசியாக இருக்கும். உடம்புக்கும் நல்லது.
கொங்கு நாட்டில் திருமணம் முடிந்து, மணப்பெண் மாப்பிள்ளை வீட்டுக்குச் செல்லும்போது, இதைத்தான் கூடையில் போட்டு அனுப்புவார்கள்.
திலகவதி
தேவையான பொருட்கள்
மைதா : 1/4 கிலோ
வெல்லம் : 300 கிராம்
முந்திரிபருப்பு : 10
ஏலக்காய் : 5
ஆப்ப சோடா : 1/4 டீஸ்புன்
எண்ணெய் : பொரித்து எடுக்க தேவை யான அளவு
செய்முறை
வெல்லத்தை இரண்டு டம்ளர் தண்ணீரில் நன்றாகக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். மைதா மாவுடன் கரைத்து வைத்துள்ள வெல்லத் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். இத்துடன் முந்திரியை இரண்டு இரண்டாக உடைத்து, கரைத்த மாவுடன் போடவும். ஏலக்காயைப் பொடி செய்து போடவும்.
ஆப்ப சோடா கால் டீஸ்புன் கலந்து, எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் மாவை சின்ன குழிக் கரண்டியில் ஊற்றி, இருபுறமும் பொன்நிறமாக வருமாறு பொரித்து எடுக்கவும். சுவையான அப்பம் தயார்.
சுபத்ரா
தேவையான பொருட்கள்
1. கடலை மாவு
2. அரிசி மாவு
3. மைதா மாவு
4. வேர்க்கடலை : வறுத்து தோல் நீக்கியது
5. பொட்டுக் கடலை
6. அவல் : பொரித்தது
7. கருவேப்பிலை
8. மிளகாய்
9. பெருங்காயம்
10. உப்பு
11. எண்ணெய் (சமையல் எண்ணெய்)
12. காரப் பொடி
13. நெய்
செய்முறை
1 லிட்டர் எண்ணெய்யை வாணலியில் விட்டு அடுப்பில் வைக்கவும்.
1. பூந்தி: இரண்டு கப் கடலை மாவை சிறிது உப்பு சேர்த்துக் கொண்டு தண்ணீர் விட்டு கொஞ்சம் கெட்டியாக கரைத்துக் கொண்டு பூந்தி தட்டின் மூலம் அதை வாணலியில் இருக்கும் எண்ணெய் காய்ந்தவுடன் ஊற்றி, பூந்தி செய்யவும்.
2. முள்ளு முறுக்கு: அரிசி மாவு நான்கு கப், கடலை மாவு இரண்டு கப் மற்றும் கொஞ்சம் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து, கொஞ்சம் வெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். முறுக்கு பிழியும் அச்சில், மாவை போட்டு வாணலியில் இருக்கம் எண்ணெய் காய்ந்தவுடன் வெந்து எடுக்கவும்.
3. ஓமப்பொடி: அரிசி மாவு நான்கு கப், கடலை மாவு இரண்டு கப் மற்றும் கொஞ்சம் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து, கொஞ்சம் வெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஓமப்பொடி பிழியும் அச்சில், மாவைப் போட்டு, வாணலியில் இருக்கும் எண்ணெய் காய்ந்தவுடன் வெந்து எடுக்கவும்.
4. காராசேவு: அரிசி மாவு மூன்று கப், கடலை மாவு இரண்டு கப் மற்றும் கொஞ்சம் உப்பு, பெருங்காயப் பவுடர், மற்றும் காரப் பொடி சிறிது சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து கொஞ்சம் வெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். காரா சேவு தட்டில் மாவை காய்ந்த எண்ணெய் உள்ள வாணலியில் தேய்க்கவும். வெந்து எடுக்கவும்.
5. சின்ன நாடா: (ஒட்டு பக்கோடா): மேற்கூறிய காராசேவு முறையில் மாவை தயார் செய்து சின்ன நாடாத்தட்டில் மாவை காய்ந்த எண்ணெய் உள்ள வாணலியில் தேய்க்கவும். வெந்து எடுக்கவும்.
6. வறுத்த வேர்க்கடலை, அவல் மற்றும் பொட்டுக் கடலை, கருவேப்பிலையை வறுத்துப் போடவும்.
7. காய்ந்த மிளகாய், பெருங்காயம், சிறிது உப்பு எல்லாம் வறுத்து பொடி செய்து விடவும்.
இவ்வாறு தயார் செய்த பொருட்களை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலந்து, அதில் சிறிது சுட வைத்த நெய்யை ஊற்றி நன்றாக கலந்து விட்டால் மிக்சர் ரெடி! தீபாவளிக்கு அவசியப் பலகாரம் இது.
டாக்டர். விஜயா கணேஷ்
தேவையான பொருட்கள்
கடலைமாவு: அரைகிலோ
வெல்லம்: அரைகிலோ
சுக்கு: சிறிதளவு
ஏலக்காய்: சிறிதளவு
எண்ணெய்:
பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை
கடலைமாவை தண்ணீர் விட்டு காரசேவு மாவு பதத்துக்குப் பிசைந்து வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி மாவு பிழிந்து வெந்ததும் எடுத்து, மொத்த மாவையும் காராசேவு செய்து கொள்ளவும்.
வெல்லத்தைத் தட்டி, இன்னொரு பாத்திரத்தில் எடுத்து தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். அதில் ஏலக்காய்,
சுக்கு சேர்க்கவும். பாகு தண்ணீர் விட்டால் கரையாத பதம் வந்ததும் இறக்கி, காராசேவை அதில் போட்டுக் கிளறி,
தட்டில் எடுத்து ஆற விடவும்.
தனித்தனியாக பிரித்து எடுத்துக்கொள்ளவும்.
சுவையான மனோகரம் தயார்.