பயிற்சி: சென்னையில் உருவாகும் சச்சின்கள்!
வெங்கட்ராகவன், வி.பி. சந்திரசேகர், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ராபின் சிங், டபிள்யூ. வி. ராமன், டி.ஏ.சேகர், தினேஷ் கார்த்திக், முரளி விஜய், முரளி கார்த்திக், லஷ்மண் சிவராமகிருஷ்ணன், ஹேமங் பதானி, சடகோப
தினமணி கதிர்பயிற்சி: சென்னையில் உருவாகும் சச்சின்கள்!
வெங்கட்ராகவன், வி.பி. சந்திரசேகர், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ராபின் சிங், டபிள்யூ. வி. ராமன், டி.ஏ.சேகர், தினேஷ் கார்த்திக், முரளி விஜய், முரளி கார்த்திக், லஷ்மண் சிவராமகிருஷ்ணன், ஹேமங் பதானி, சடகோப
வெங்கட்ராகவன், வி.பி. சந்திரசேகர், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ராபின் சிங், டபிள்யூ. வி. ராமன், டி.ஏ.சேகர், தினேஷ் கார்த்திக், முரளி விஜய், முரளி கார்த்திக், லஷ்மண் சிவராமகிருஷ்ணன், ஹேமங் பதானி, சடகோபன் ரமேஷ், லஷ்மிபதி பாலாஜி, ஸ்ரீராம், பரத் ரெட்டி, டி. குமரன், ரவிச்சந்திரன் அஸ்வின் எனத் தமிழகத்திலிருந்து தேசிய அணிக்காக விளையாடிய கிரிக்கெட் வீரர்கள் ஏராளமானோர் உண்டு.
இவர்களைப் போலவே சென்னையில் நாளுக்குநாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் உருவாகி வருகின்றனர். இதற்குச் சர்வதேச தரத்திலான பயிற்சியாளர்களும், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும்தான் அடிப்படை காரணம்.
கோடை காலம் மட்டுமல்லாது தமிழகத்தில் ஆண்டுமுழுவதும் பயிற்சி முகாம்கள் நடப்பது அநேகமாக கிரிக்கெட் விளையாட்டுக்காக மட்டுமாகத்தான் இருக்கும். அந்த வரிசையில் சென்னை சோழிங்கநல்லூரிலுள்ள ஹாரிங்டன் கிரிக்கெட் அகாதெமி குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். தினேஷ் கார்த்திக், ஹேமங் பதானி உள்ளிட்ட வீரர்களுக்குப் பயிற்சியளித்த சர்வதேச கிரிக்கெட் பயிற்சியாளர் ஹாரிங்டன்தான் கடந்த 4 ஆண்டுகளாக சோழிங்கநல்லூரில் கிரிக்கெட் முகாம் அமைத்து நாளைய சச்சின்களை உருவாக்கி வருகிறார்.
இவரிடம் பயிற்சி பெற்ற ஏராளமான மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகள், டி20 போட்டிகளில் திறமை காட்டி வருகின்றனர். கோடைக் காலத்தையொட்டி சிறப்பு பயிற்சி முகாமை சோழிங்கநல்லூர் சேக்ரட் ஹார்ட் பள்ளி மைதானத்தில் நடத்திக் கொண்டிருந்த அவரைச் சந்தித்தபோது...
உண்மையில் கிரிக்கெட் முகாம்கள் நடத்துவதால் புதிய வீரர்கள் உருவாகிறார்களா? அல்லது வருவாய்க்காக இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றனவா?
அடிப்படை வசதிகளுடன் முறையான பயிற்சி அளிக்கும் அனைத்து கிரிக்கெட் முகாம்களும் சிறந்தவையே. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் அதிக அளவில் கிரிக்கெட் முகாம்கள் நடத்தப்படுகின்றன. எங்களது அகாதெமி 4-வது ஆண்டாக கோடைக்கால கிரிக்கெட் பயிற்சி முகாமை நடத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஆண்டு முழுவதுமே கிரிக்கெட் முகாமை நடத்தி வருகிறோம்.
மற்ற முகாம்களிலிருந்து உங்களது முகாம் எப்படி வேறுபட்டுள்ளது?
எங்கள் முகாமில் இப்போது 30-க்கும் மேற்பட்ட வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். திருச்சி, மதுரை, சாத்தான்குளம், தேனி, கோவை போன்ற நகரங்களிலிருந்தும் இங்கு வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தங்கும் இடம், உணவு வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளோம். 12 வயது முதல் 19 வயது வரையிலான மாணவர்கள் இங்கு சேர்ந்துள்ளனர்.
மற்ற முகாம்களைப் போல மாணவர்களை இஷ்டத்துக்கு வெளியே அனுப்புவது கிடையாது. இங்கு பௌலிங், பேட்டிங், ஃபீல்டிங் ஆகியவற்றில் நுட்பமான பயிற்சி அளிக்கப்படுகிறது. என்னுடைய உதவிப் பயிற்சியாளர்களின் கண்காணிப்பில் எப்போதும் வீரர்கள் இருப்பார்கள். வார நாள்களில் காலையில் 3 மணி நேரமும், மாலையில் 3 மணி நேரமும் பயிற்சி அளிக்கப்படுகிறது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை முதல் மாலை வரை அவர்களுக்கு இடைவிடாத பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஒருவர் முதலில் பேட்டிங் செய்தார் என்றால், 5 ஓவர்களுக்குப் பிறகு அவர் பௌலிங் செய்யவேண்டும். அதுமட்டுமல்லாமல் பேட்டிங் டெக்னிக்குகள், வேகப்பந்து வீச்சு டெக்னிக்குகள், சுழல்பந்து டெக்னிக்குகள் சொல்லித் தரப்படுகின்றன. விரைவில் பௌலிங் மிஷினும் வீரர்களுக்காக கொண்டு வரவுள்ளோம்.
கிரிக்கெட் விளையாட்டைத் துவங்க எந்த வயது சரியானதாக இருக்கும்?
பள்ளியில் படிக்கும் மாணவர்கள் என்றால் 10 வயதிலும், கல்லூரி மாணவர்கள் என்றால் 18 வயதும் சரியாக இருக்கும். ஆனால் போட்டிகள் நிறைந்த இன்றைய கிரிக்கெட் உலகில் பள்ளியிலேயே கிரிக்கெட்டைத் துவக்கிவிடுவது சரிதான்.
கிரிக்கெட் விளையாட மன உறுதி தேவையா? உடல் உறுதி தேவையா?
இரண்டுமே கிரிக்கெட்டுக்கு மிகமிக அவசியம். பௌலர் வீசும் வேகமான பந்தை அடித்துவிட முடியும் என்ற மன உறுதி இருந்தால்தான் அவர் சிறந்த பேட்ஸ்மேனாக வரமுடியும். அதைப் போலவே எந்த வித சிறந்த பேட்ஸ்மேனையும் தன்னால் வீழ்த்த முடியும் என்ற மன உறுதி இருந்தால்தான் சிறந்த பௌலராக உருவாக முடியும்.
மன உறுதி எவ்வளவு தேவைப்படுகிறதோ அந்த அளவுக்கு உடல் உறுதியும், ஃபிட்னஸýம் மிகவும் அவசியம். இல்லையென்றால் கால் சுளுக்கு, தசைநார் முறிவு, தோள்பட்டை பிரச்னை, மூட்டுப் பிரச்னைகள் ஏற்படும். இதைத் தவிர்க்க எங்களது முகாம்களில் உடற்பயிற்சிகளைச் சொல்லித் தருகிறோம்.
உங்கள் முகாமின் நோக்கம்தான் என்ன?
இன்றைய இளம் தலைமுறையினருக்குச் சிறந்த முறையில் கிரிக்கெட்டைக் கற்றுத் தரவேண்டும் என்பதுதான் எனது முக்கிய நோக்கம். அதனால்தான் குறைந்த கட்டணத்தில் பயிற்சி அளிக்கிறோம். இன்றைய கால கட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட வருகின்றனர். அவர்களுக்கு முறையான வசதிகளுடன், முறையான கிரிக்கெட்டைச் சொல்லித் தருகிறோம். அதுமட்டுமல்லாமல் ஆண்டுதோறும் கிரிக்கெட் கருத்தரங்கையும் நடத்தி வருகிறோம். ரஞ்சி வீரர்கள் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்று வீரர்களுக்குக் கிரிக்கெட் டிப்ஸ்களை அளிக்கின்றனர். பயிற்சி முகாமின் நிறைவில் சிறந்த பௌலர், பேட்ஸ்மேன், ஃபீல்டர் விருதுகளை வழங்கி மாணவர்களை ஊக்குவிக்கிறோம்.
தமிழகத்திலிருந்து மேலும் பல தேசிய கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவேன் என சபதம் கொண்டுள்ளேன். அதுதான் என்னுடைய இப்போதைய எதிர்காலத் திட்டம்.
படங்கள்: சிவக்குமார்