முகப்பு
தினமணி கதிர்

பாரம் - சுமக்க சுமக்கத்தான் புரியும்!

சில பணிகளை நிறைவேற்ற நூறு ஆண்டுகள் தேவைப்படும் நிலையில் அதை ஒரு சில ஆண்டுகளில் செய்து முடிப்பதை ஆங்கிலத்தில் putting century into capsule என சொல்வதுண்டு. அது போல சாதாரண சுமை தூக்கும் தொழிலாளியாக தனது

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

சில பணிகளை நிறைவேற்ற நூறு ஆண்டுகள் தேவைப்படும் நிலையில் அதை ஒரு சில ஆண்டுகளில் செய்து முடிப்பதை ஆங்கிலத்தில் putting century into capsule என சொல்வதுண்டு. அது போல சாதாரண சுமை தூக்கும் தொழிலாளியாக தனது வாழ்க்கை பயணத்தைத் தொடங்கியவர் இன்று 110 கல்வி நிறுவனங்களை ஒரு சில ஆண்டுகளில் உருவாக்கி இருக்கிறார். அவர் ஆர்.வி.எஸ். கல்வி அறக்கட்டளை நிறுவனத் தலைவரான கே.வி.குப்புசாமி. தனது அனுபவங்களை அவர் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

""கோவை மாவட்டம் காடாம்பாடி கிராமத்தில் 1942 ஆம் ஆண்டு கே.பி.வெங்கடாச்சலம், மருதம்மாள் தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தேன். முன் பிறந்த இருவரும் இறந்து போனதால் மூன்றாவது மகனாவது தங்க வேண்டும் என்பதற்காக கிராமத்தில் உள்ள மூன்று வீடுகளில் இருந்து குப்பைகளை சேகரித்து அந்த குப்பை மேட்டில் அமர வைத்து மூக்கு, காது குத்தி குப்புசாமி எனப் பெயரிட்டனர். குடும்பச் சூழ்நிலை காரணமாக கோவை சூலூர் அரசு பள்ளியில் பதினோராம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயில முடிந்தது. பதினாறாவது வயதில் ரைஸ் மில்லில் நெல் மூட்டைகளை தூக்கிப் போடும் சுமைக் கூலியாக இருந்தபோது, ரூ.12,500 கடனாகி மனைவி பத்மாவதி தந்த உண்டியல் சேமிப்பு ரூ.300 உடன் வாழ்க்கையைத் தொடங்கினேன்.

அதன் பின்னர் லாரி ஓட்டுனராகவும் மாறினேன். அரிசி ஆலையை ஏற்படுத்த வேண்டும் என்றும் ஆசை. தந்தையின் தொழிலான அரிசி வியாபாரத்தைக் கவனிக்க ஆரம்பித்தேன். அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு மாதம் அரசு தரும் ஆயிரம் மூட்டை நெல்லை அரிசியாக அரைக்கும் அரவைத் தொழிலிலை மேற்கொண்டு மாநில அளவில் தனிநபர் ஆலை பிரிவில் முதலிடம் பெற்றேன். இதனைத் தொடர்ந்து பவர் லூம், ஜின்னிங் பேக்டரி என்று இறங்கினேன். இறைவனின் அனுமதியால் திண்டுக்கல்லில் 2 நூற்பாலைகளைத் தொடங்கி நடத்தினேன்.

Advertisement

வாழ்க்கையில் திருப்புமுனை வரும் நேரத்தில் அந்த வாய்ப்பினைச் சரியாக பயன்படுத்திக் கொண்டவர்களே வாழ்க்கையில் வெற்றியைப் பெறுகிறார்கள் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உண்டு. இதன்படி ஒருநாள் கல்வி நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என மனதில் பட்டது. அதே சமயத்தில் இரு நூற்பாலைகளையும் நல்ல விலைக்கு வாங்கிக் கொள்ள ஆட்கள் கிடைத்ததால் இரண்டையும் விற்றேன். அந்த சமயத்தில் தான் தமிழக அரசு சுயநிதி கல்லூரிகளை தொடங்க தனியாருக்கு அனுமதி அளித்தது. இதன்படி திண்டுக்கல்லில் முதன் முதலாக 1984ஆம் ஆண்டில் ஆர்.வி.எஸ். பாலிடெக்னிக் கல்லூரி துவக்கினேன்.

இதனைத் தொடர்ந்து ஆர்.வி.எஸ். பொறியியல், தொழில் நுட்ப கல்லூரி, ஆயுர்வேதக் கல்லூரி, வேளாண் அறிவியல் மையம், உழைக்கும் மகளிர் விடுதி, ஹோமியோபதி கல்லூரி, சமுதாயக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, சித்த மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி என மாநிலம் முழுவதிலும் 110 நிறுவனங்களை உருவாக்கி அவற்றை நிர்வகித்து வருகிறேன்.

1993 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டில் உள்ள டையனோரா பல்கலைக் கழகம் எனக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. பன்னாட்டு நட்புறவு கழகம் குளோரி ஆப் இந்தியா விருதினையும், 1994ல் முன்னாள் ஆளுநர் சி.சுப்ரமணியம் பாரத் ஜோதி விருதினையும், 1996ல் ராஜீவ்காந்தி விருது, இங்கிலாந்து நாட்டின் இந்திய தூதர் லலித் மான்சிங் வழங்கிய 1999ல் பன்னாட்டு தங்க நட்சத்திர விருது என பலவிருதுகள் கிடைத்துள்ளன'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments