ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: எலும்பு மஜ்ஜையை மாற்றுவதற்கு முன்பு...
என் 5 வயது மகன் ரஞ்சித் குமாருக்கு BRUTTONS HYPOGAMMA GLOBULINEMIA என்ற குறைபாடு உள்ளது. 1½ வயதாக இருக்கும்போது இதற்குத் தீர்வாக IVIG என்ற மருந்தை 21 நாட்களுக்கு ஒருமுறை வாழ்நாள் முழுவதும் செ
என் 5 வயது மகன் ரஞ்சித் குமாருக்கு BRUTTONS HYPOGAMMA GLOBULINEMIA என்ற குறைபாடு உள்ளது. 1 ½ வயதாக இருக்கும்போது இதற்குத் தீர்வாக IVIG என்ற மருந்தை 21 நாட்களுக்கு ஒருமுறை வாழ்நாள் முழுவதும் செலுத்த வேண்டும் என்று கூறினார்கள். மருந்தின் விலை ரூ.15 ஆயிரம். இந்த ஆண்டு மகனை பரிசோதனைக்கு அழைத்துச் சென்றபோது மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை பற்றிக் கூறினார்கள். அதற்கு ரூ.30 லட்சம் செலவாகும் என்றும் குணமாகும் வாய்ப்பு 70% தான் இருப்பதாகவும் கூறினார்கள். எங்களுக்கு வசதி இல்லை. இதற்கு ஆயுர்வேதத்தில் தீர்வு உள்ளதா?
"மஜ்ஜா மஜ்னா' என்று ஒரு குறிப்பு ஆயுர்வேதத்தில் உள்ளது. அதாவது, மஜ்ஜை உடலின் உட்புறத்தில் குறைந்து போனால், மிருகங்களின் எலும்பினுள்ளே அமைந்துள்ள மஜ்ஜையையே முக்கிய உணவாகச் சாப்பிட வேண்டும் என்று அதற்கு விளக்கம் தரலாம். ஆனால் மஜ்ஜையை அவ்வளவு எளிதாகச் செரிக்கச் செய்ய முடியாது. அதைச் செரிக்க வைத்து குடல் வழியாக தாதுக்களில் பரவச் செய்து, தாத்வக்னி எனப்படும் தாதுக்களில் பரவி நிற்கும் நெருப்பில் வேக வைத்து, உடல் அந்த வெளிப்புற மஜ்ஜையை தன் வசம் சேர்த்து, உட்புற மஜ்ஜைப் பகுதியை புஷ்டிப்படுத்துவதற்கு அடிப்படை ஆதாரமாக ஜாடராக்னி (ஜடரம் - வயிறு, இரைப்பை முதல் பெருங்குடல் வரை உள்ள பகுதி, அதிலுள்ள சூடு) எனும் பசித்தீயின் துணையில்லாமல் செய்ய இயலாது. உங்களுடைய மகனுக்கு இந்த ஜாடராக்னி அநேகமாக மந்தமான நிலையில் இருக்கக் கூடும். அதனால் வயிற்றுப் பகுதியில் போதுமான அளவு சூடு இல்லாமல் சில்லிட்டிருந்தால், தாது போஷணைக்கு வழி இல்லாமல் அவஸ்தைகள் பல நேரிடும். ஒரு சில உணவுமுறைகளால் ஜாடராக்னியை சூடேற்றி, நன்றாக எரியும்படி செய்து விட்டால், மஜ்ஜையை உணவாக ஏற்று, அறுவைச் சிகிச்சையைத் தவிர்க்கலாம்.
காலை உணவாக ஒரு டம்ளர் (சுமார் 250 - 300 கிராம்) புழுங்கலரிசியுடன் வகைக்கு 2 கிராம் வீதம் சுக்கு, தனியா மற்றும் அரிசித் திப்பிலியைச் சேர்த்து வெண்கலப் பாத்திரத்தில் கொதிக்கவிடவும். சாதம் நன்றாக வெந்தவுடன் கஞ்சியை மட்டும் வடிகட்டி அரை ஸ்பூன் அஷ்ட சூரணம் எனும் ஆயுர்வேத பொடி மருந்தைக் கலந்து சிறிது பசு நெய் கலந்து, 2 -3 கிளாஸ் வெதுவெதுப்பாக குடிக்கக் கொடுக்கவும். நார்த்தங்காய் வற்றலைச் சிறிது கடித்துக் கொள்ளலாம்.
Advertisement
மதியம் சூடான சாதம், எலுமிச்சம் பழ ரசம், கறிவேப்பிலைத் துவையல், வெங்காய தயிர்ப்பச்சடி, கடைந்து வெண்ணெய் நீக்கிய சூடாக்கி, மஞ்சள் தூள், நல்லெண்ணெய்யில் ஓமம் தாளிதம் செய்த மோர் என்ற வகையில் உணவை வீட்டிலேயே தயாரித்து, பள்ளிக்கு எடுத்துச் சென்று ஊட்டி விடவும். அரவிந்தாஸவம் என்ற ஆயுர்வேத மருந்தை 2 ஸ்பூன் (10 மி.லி.) உணவை உண்ட பிறகு சாப்பிடக் கொடுக்கவும்.
மாலையில் பிஸ்கட் இல்லாமல், சர்க்கரை கலந்த சூடான வெதுவெதுப்பான பால் சாப்பிடக் கொடுக்கவும். இரவு ஏழுமணிக்கு சூடான சாதத்தில் மறுபடியும் அரை ஸ்பூன் அஷ்ட சூரணம், நெய் கலந்து முதல் கவளத்தைச் சாப்பிடக் கொடுக்கவும். அப்பளம் போட்டு செய்த வற்றல் குழம்பைச் சாதத்துடன் கலந்து, நல்லெண்ணெயுடன் பிசைந்து, தயிர்ப் பச்சடியில் தோய்த்து ஊட்டிவிடவும். அதன் பிறகு அரை கிளாஸ் மோர் பருகச் செய்யவும். பிப்பல்யாஸவம் 10 மி.லி. சாப்பிட வேண்டும். இப்படியாக 2 -3 மாதங்கள் தொடர்ந்து செய்து வர எதையும் செரிக்கச் செய்யும் சக்தியை ஜாடராக்னி பெற்றுவிடும். இந்த அக்னியையை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் தாத்வக்னிகளும் வலுவடைந்துவிடுவதால், மஜ்ஜையையே பிரதான உணவாக அதன் பிறகு கொடுக்கலாம். வயிறு மற்றும் தாதுக்களின் பகுதிகளனைத்தும் ஒரு கதகதப்பான சூழ்நிலையை மேற்குறிப்பிட்ட உணவு மற்றும் மருந்துகளின் வழியாக உங்கள் மகன் அடைந்துவிட்டால், கிருமித் தொற்றை அழிக்க முடியும். உணவின் சாராம்சம் உடலில் நன்கு சேரத் தொடங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சில்லிட்டுப் போன ஓர் இருண்ட குகையினுள்ளே எடுத்துச் செல்லப்படும் சூடான தீப்பந்தத்தைப் போல மேற்குறிப்பிட்ட சிகிச்சை முறையினால், மகனுடைய வாழ்வு ஆரோக்கியமான வழியில் மலரக்கூடும். காரணம் குடல் மற்றும் உணவை ஏற்றிச் செல்லும் பாதை சுத்தமானதாகவும், சூடானதாகவும் இருக்கும் சூழ்நிலைதான்.
(தொடரும்)