எழுத்துக்குப் பின்னால்...: வாழ்வது போல் நடிக்கிறோம்!
கலைமாமணி விக்கிரமனின் இளையமகள் ஹேமமாலினி சென்னை மாடம்பாக்கத்தில் பிரமிடு வடிவில் ஸ்ரீ அரவிந்த
கலைமாமணி விக்கிரமனின் இளையமகள் ஹேமமாலினி சென்னை மாடம்பாக்கத்தில் பிரமிடு வடிவில் ஸ்ரீ அரவிந்த அன்னை ஆஸ்ரமத்தை அமைத்து நடத்தி வருகிறார். அதன் 2-ஆம் ஆண்டு விழாவில் நடிகர் கிரேஸி மோகன் கலந்து கொண்டு பேசினார்:
சிறுவயதிலிருந்தே எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். எல்லா சாமியையும் கும்பிடுவேன். சாமி என்னைக் கைவிட்டு விடுமோ என்ற அச்சம் இருந்தது. பின்னாளில் ஸ்ரீ அரவிந்த அன்னையை வணங்கியபோது என் அச்சம் தீர்ந்தது. எந்த தெய்வங்களைக் கும்பிட்டாலும் அன்னையைக் கும்பிட்டதாக அர்த்தம்.
என்னுடைய வெற்றிக்குப் பல பெண்கள் காரணமாக இருக்கிறார்கள். (தவறாக நினைக்க வேண்டாம்) அதாவது என்னுடைய பாட்டி, தாய், ஆசிரியை, செவிலியர் போன்றோர். என்னை தாத்தா-பாட்டித்தான் வளர்த்தார்கள்.
Advertisement
கூட்டுக் குடும்பமாக வளர்ந்ததால் சிறுவயதிலிருந்தே பந்தம், பாசம், என உறவுகள் மீது பற்று இருந்தது. அந்தப் பற்று இப்போதும் தொடர்கிறது. இப்பல்லாம் கணவன், மனைவி சேர்ந்து வாழ்ந்தாலே கூட்டுக் குடும்பம் தான் என்று சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டது.
நாம் நிஜமாக வாழவில்லை. வாழ்வதைப் போல் நடிக்கிறோம். நாம் உண்மையாக இருந்தால் தெய்வத்திடமிருந்து அனைத்து உதவிகளும் கிடைக்கும். நன்றி மறக்கக்கூடாது என்பது அன்னையின் முக்கிய நிலை. நான் சிறுவயதில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் போடுவேன். பல பள்ளிகளில் நான் நாடகம் போட காரணமாக இருந்தவர் ஜானகி டீச்சர். இன்றும் நான் அவர்களை மறக்காமல் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். என்னுடைய பணிவு தான் நான் பிரபல நடிகர்களுடன் இணைந்து நடிக்க முடிகிறது. எனது 37-ஆவது திருமண நாளை மனைவியுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவதை, என்னுடைய பிள்ளைகள் பேரப் பிள்ளைகள் ரசிக்கிறாங்க.
நமது பண்பாட்டை அவர்களுக்கு புரிய வைக்கவே விழாக்களைக் கொண்டாடுகிறோம். நமக்கு கிடைக்கும் விடுமுறை மற்றும் ஓய்வு நாட்களை நமது உறவினர்களுடன் கொண்டாடினால் தான் உண்மையான ஆனந்தமாக இருக்க முடியும்.
ஆனா இப்போ நாம எங்க ஓடுகிறோம் எதுக்கு ஓடுறோம்னே தெரியாம ஓடிக்கிட்டு இருக்கோம். அதனால குழந்தைகங்களும் அப்பா, அம்மாவ மிஸ் பண்ணுறாங்க.
குழந்தைங்க போகோ சேனல், ஹாஸ்டல்னு தனிமைப்படுத்தப்படுறாங்க. அதனால வாழ்க்கைன்னு வரும்போது சின்னச் சின்ன விஷயங்களைக்கூட பெரிய பிரச்னையாக்கிக்கிறாங்க.
எத்தனையோ நாடகங்கள் போட்டிருக்கோம். இன்னிக்கும் பல வாய்ப்புகள் தேடி வருது. எல்லாமே வெற்றியா முடியுது. காரணம், நான் எழுதும் ஸ்கிரிப்டை அன்னை முன்பு படித்துக் காட்டிவிட்டுத்தான் மறுவேலை.