நெல்சன் மண்டேலாவுக்குப் பிறகு...
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேக் மகராஜ் 12 ஆண்டுகள் நெல்சன் மண்டேலாவுடன் சிறையில் இருந்தவர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேக் மகராஜ் 12 ஆண்டுகள் நெல்சன் மண்டேலாவுடன் சிறையில் இருந்தவர். ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் ஆட்சியில் நிலைமை எப்படி இருக்கிறது என்று பத்திகையாளர் அலெக் ரஸ்ஸல் அவரைப் பேட்டி கண்டு பைனான்ஷியல் டைம்ஸ் இதழில் எழுதியிருக்கிறார். அதன் சுருக்கம்: (நெல்சன் மண்டேலா: தென் ஆப்ரிக்காவின் ஆன்மாவின் போராட்டம் நூலின் ஆசியரும் கூட.)
நிற வேற்றுமைப் போக்குக்கு எதிராகப் போராட்டங்கள் 1976 இல் நடைபெற்றபோது, ரோபன் தீவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை மறக்கவே முடியாது. கைதிகள் குவாரிகளுக்குக் கல்லை உடைக்க, சாரி சாரியாகச் சென்ற போது, உயரமான, வெள்ளி நிறத் தலைமுடியுடன், ஐம்பது வயது ஆவேசக்கார தென்னாப்ரிக்கர் ஒருவர் நெல்சன் மண்டேலாவுடன் சிறையில் தங்கிவிட்டார்.
அவர்களுக்குக் கடுமையான பணிகள் கொடுக்கப்பட்டிருந்தன. சுமார் பத்து வருடங்கள் கேப் டவுனை அடுத்த பகுதியில் நெல்சன் மண்டேலாவுடன் அவருடைய சுயசரிதையை ரகசியமாகத் தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தார் மேக் மகராஜ். அது "விடுதலையை நோக்கி நீண்ட பயணம்' என்ற நூல். எதை எழுத வேண்டும், என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று இருவரும் விவாதிப்பார்கள். அதை எல்லாம் மேக் எழுதிக் கொள்வார். விடுதலைக்குப் பின்னர் புத்தகத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தார்கள். அவர்களுடைய கொள்கை, நெறிமுறைகள், போராட்டம் எல்லாம் பற்றி எழுதியாக வேண்டும் என்று காரசாரமாக அப்போது விவாதித்தார்கள்.
நான் மேக் மகராஜைப் பேட்டி காண, அவர் வசித்து வந்த டர்பன் நகரின் அடுக்கு மாடிக் குடியிருப்புக்குப் போன தினம், நுரையீரல் புற்றுநோய் தாக்கி, அதற்கு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட மறு நாள். அந்த எரிமலை சற்று அடங்கிப் போயிருந்த மாதிரி இருந்தது. சிகிச்சை வெற்றி என்றாலும் நுரையீரலில் இருந்து கசிவு ஏற்பட்டுக் கொண்டே இருந்தது.
ஒரு நாற்காலியில் மேக் அமர்ந்துகொண்ட பின் என்னை ஒரு சோபாவில் உட்காரச் சொன்னார். நான் அவரை நேருக்கு நேராகப் பார்த்த போது வாய்விட்டுச் சிரித்தார். வழக்கறிஞராகத் தொழில் செய்தபோது, வாதியை விட உயரமான நாற்காலியில் உட்கார வேண்டும் என்று மண்டேலா கூறியிருந்ததை நினைவுகூர்ந்தார்.
""சுயசரிதையை மேற்பார்வை செய்துகொண்டிருந்த போது, மண்டேலா எப்போதும் ஒரு சிமெண்ட் பலகையின் மீது அமர்வார். நான் அதைவிடக் கீழே இருக்கும் இடத்தில் உட்கார்வேன். இதை நிறுத்தியாக வேண்டும் என்று ஒரு நாள் தீர்மானமும் செய்தேன். மறுநாள், அவர் சிமெண்ட் தளத்தில் உட்காரும் முன்னால் போய்விட்டேன். அப்புறம் அடுத்த இரண்டு நாட்களும் யார் கீழே உட்கார்வது என்ற வாக்குவாதம்தான் எங்களுக்கு இடையே நடந்தது.
நிறவேற்றுமைக்கு எதிராக நடந்த போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், நியூகாஸில் நகரில் ஓர் இந்து குடும்பத்தில் பிறந்தார் மேக் மகராஜ். இப்போது அவருக்கு எண்பது வயது. ரோபன் தீவில் வாழ்ந்தவர்.
1960களில், அவர் ஒரு பயண ஏஜென்ட், வெடிகுண்டு தயாரிப்பாளர், ரோபன் தீவில் 12 ஆண்டுகள் காவல் துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். ஏழாவது மாடியிலிருந்து, ஒற்றைக் கணுக் காலில் கயிற்றைக் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கிறார். பதினைந்து ஆண்டுகள் ஆப்ரிக்க தேசிய காங்கிரஸின் துப்பறியும் சிங்கமாக உலா வந்திருக்கிறார். நான்கு முக்கியத் தொண்டர்களில் அவர் ஒருவர். மற்ற மூவர் - ஆலிவர் டாம்போ தலைமறைவுத் தலைவர். இன்னொருவர் மண்டேலா. அடுத்தவர் ஜேக்கப் ஜூமா. அவர் அமைச்சரவையில் கடந்த ஏப்ரல் மாதம் வரை மேக் பணியாற்றியிருக்கிறார். பழைய ஆப்ரிக்க நாடுகள் விடுதலை பெற்று 50 வருடங்கள் ஆகிவிட்டன. ஆப்ரிக்கா இதுவரை எப்படி இருந்தது, இனி எப்படி இருக்கப் போகிறது என்பதை அவர் வாயால் கேட்க நினைத்தேன்.
அவர் லண்டனில் வெறும் 5 பவுண்டுடன் லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில் படிக்க வந்து இறங்கியபோதே நிறவேற்றுமைக் கொடுமைகளை அனுபவித்திருக்கிறார். நாட்டில் அவர் வசித்த இடத்தில் சிவப்பினத்தவருக்கு மட்டும் என்ற அறிவிப்புப் பலகை தொங்கவிடப்பட்ட கட்டடம் அப்போது இருந்தது.
பனிப்போர் ஆப்ரிக்காவுக்கு ஆபத்தாகவே இருந்தது. நிதி நிலையும் மேம்பாட்டுக்கு உதவவில்லை. ""60-களில் விடுதலை பெறாததைவிட, 90களில் விடுதலை பெற்றது ஒருவிதத்தில் நல்லதாகப் போயிற்றா?'' என்று கேட்டேன்.
""மிகவும் சரி'' என்றார் மேக். ""ஆனால் நான் டூட்டு மாதிரி சொல்ல விரும்பவில்லை. மண்டேலா துன்பம் அனுபவித்த பிறகு சமரசமடைந்துவிட்டார். ஆர்ச் பிஷப் டெஸ்மாண்ட் டூட்டு, மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் இருந்ததால், போராளியாக இருந்த அவர் சமரசவாதியாக மாறிப் போனார் என்றார். இதை நான் ஏற்கவில்லை. மண்டேலாவின் சமரச மனப்பான்மைக்கு அவருடைய கடந்த கால சிந்தனையும், நட்புறவும் கட்சிக் கருத்தை ஒட்டியே வந்திருக்கிறது. என்றாலும், அவர் விவாதிக்க விவாதிக்க அவர் குரல் உறுதி பெறுகிறது. அலசுகிறார். அறுபதுகளில் இருந்த நிலையை ஆராய்கிறார். கடாஃபியின் வழியைப் பின்பற்றி ஆட்சியைக் கைப்பற்றுவது உட்பட சிந்திக்கப்பட்டதாம். அந்த லிபியக் கனவுகள் கலைந்து போயின என்பதை ஒப்புக்கொள்ளும் மேக், கடாஃபி என்ன செய்திருக்க வேண்டும் என்று இப்போது சொல்கிறார். ஆனால் சுதந்திர கினியாவின் தலைவர் அகமது சேகு மூர் ஆட்சியை மேற்கொண்டபோது, எங்களிடம் நிதி வசதி இல்லை. இது இல்லை. அது இல்லை. என்றாலும் நாங்கள் உயர்வோம். காரணம், எங்களிடம் மிகப் பெரிய சொத்தான மனிதவளம் இருக்கிறது என்றார். ஆனால் இறுதியில் என்னவாயிற்று? மூர் மிகக் கொடுமையான சர்வாதிகாரி ஆனார்.
அறுபதுகளில் ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் காஸ்ட்ரோவையும் கடாஃபியையும் பின்பற்றக் கனவு கண்டது. மாவோதான் வால்டர் சிசுலுவை எச்சரித்தார் தென்னாப்பிரிக்காவுக்கு இன்னும் போராட நேரம் வரவில்லை என்று. நாங்கள் 61}இல் ஆயுதம் ஏந்திப் போராட முற்பட்டபோது, ஆறே மாதத்தில் எல்லாம் முடிந்துவிடும் என்று நினைத்தோம். சிறைச்சாலைக்குப் போனபோது, வில்ட்டன் மிக்வாய் ஒவ்வோர் ஆண்டும் புது வருட ஆரம்பத்தில், எங்களை வாழ்த்துவார், அவருடைய சிறையிலிருந்து. ஐந்து வருடங்கள்தாம். அப்புறம் நாங்கள் வெளியே வந்துவிடுவோம் என்பார். எங்களில் ஒருவர் வெறுத்துப் போய், வில்ட்டன், இதைக் கேட்டுக் கேட்டுக் காது புளிச்சுப் போச்சு என்று சொல்வார். வில்ட்டனும், ஐந்து வருடம் எப்போது ஆரம்பமாகும் என்று நான் சொல்லவில்லையே என்பார். நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்பேன். அவர்களைப் புரிந்துகொள்ளுங்கள். அவர்கள் கலாசாரத்தை, கவிதையை என்பார்.
மண்டேலா சிறைக் கைதிகளின் குறைகளை சிறை அதிகாரி ஜெனரல் ஸ்டீனிடம் தெரிவிப்பார். அவர் நல்ல மனிதர். ஆனால் அவரோ, ""மிஸ்டர் மண்டேலா, நீங்கள் இருப்பது ஐந்து நட்சத்திர ஓட்டல் அல்ல. சிறைச்சாலை'' என்பார். ""நீங்களும் நானும் எதிரிகள். கடைசியில் யார், யாரிடம் சரண் அடையப் போகிறோம் என்பது தெரியாது'' என்பார்.
ஆப்ரிக்கா வளர்ச்சி அடைந்திருக்கவில்லை. எக்கச்சக்க பிரச்னைகள். ஒவ்வொரு பரிசோதனையும் ஒவ்வொரு வழக்குக்கு இட்டுச் சென்றது. ஓரடி எடுத்து வைத்தால், இரண்டடி பின்னால் போக வேண்டியதாயிற்று. அப்புறம் மே 1994}இல் மண்டேலா அதிபராகப் பதவியேற்ற போது, ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் ஆட்சிக்குத் தயாராக இருக்கவில்லை. அதாவது போராட்ட மனப்பான்மையிலிருந்து விடுபட்டு, நிர்வாகம் செய்யத் தொடங்குவதற்குச் சிறிது காலம் ஆயிற்று.
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, தென்னாப்பிரிக்கா மாற்றம் கண்டது. வாணிபம் வளர்ந்தது. பிரிக்ஸ் நாடுகளில் ஒன்றானது. முந்தைய வெள்ளையர்களின் இருப்பிடமாக இருந்த வணிகத்தலமான ஜோஹன்ஸ்பர்கில் கறுப்பின நடுத்தட்டு மக்கள் குடியேற முடிந்தது. புதிதாக விடுதலை பெற்ற எல்லா நாடுகளையும் போல் ஆப்ரிக்காவும், நிர்வாகத்துக்கும் கட்சிக்கும் இடையே வேறுபாடு காண முடியாமல் திணறித் திண்டாடியது.
உடனடியாகப் பணம் பண்ணுவது என்ற கலாசாரம் தலை தூக்கியது'' என்றார் மேக். ஆப்ரிக்கர்கள் ஆடம்பரத்துக்குச் செலவழிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்றார். ""எங்கள் வாழ்க்கை வெளிப்படையானது. அதற்காக நீங்கள் எங்களைக் குற்றம் சொல்லலாம். ஆனால் பல நாடுகளும் அப்படித்தானே இருக்கின்றன தொழிற் புரட்சியின்போது பிரிட்டனில் ஊழியர்களைக் கடுமையாக நடத்தி நிறையப் பணம் பண்ணியவர்கள், பின்னர் தர்ம சிந்தையுடன் நன்கொடைகளை வாரி வழங்கி அவப் பெயரைத் தவிர்த்துக் கொண்டார்கள். நாங்கள் எங்கள் பிரச்னைகளை இன்னும் சரியாக அடையாளம் காணவில்லை. காலம் போகப் போக அது சாத்தியமாகும். அதனால் என்னைப் பொறுத்தவரை ஏமாற்றமில்லை. நாங்கள் பிரச்னைகளைச் சரியாக அறிந்தோமா? அவற்றுக்குத் தீர்வு இருக்கிறதா?
அதிபர் ஜூமாவின் பிரச்னையில் மேக் சிக்கிக் கொண்டார். அதைப் பற்றிக் கேட்டேன். அவர் கண்கள் அப்போது பளிச்சிட்டன. ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் தோழர்கள், மறைந்த இடங்களிலிருந்து வெளியே வந்தார்கள். பென்ஷனும் இல்லை. வேலை அனுபவமும் கிடையாது. சிலர் நண்பர்களிடம் போனார்கள். சிலர் மக்களிடமே சென்று வேலை கேட்டார்கள். 2003 இல் மேக், ஷபீர் ஷேக்கின் ஊழலில் சிக்கிக் கொண்டார். இவர் முன்னர் ஜூமாவுக்குப் பணம் கொடுத்தவர். ஏழு வருடங்களுக்கு முன்னால், மேக்குக்கு டிஸ்னி லேன்டுக்கு இலவசமாகப் போய்வர உதவினார் என்பதுதான் பிரச்னையாக வெடித்தது. மேக் மகராஜ் அப்போது போக்குவரத்து அமைச்சர். மேக்கின் மனைவி ஜரீனா, ஷேக்கைக் கையில் போட்டுக் கொண்டு அந்நியச் செலாவணி மோசடி செய்தார் என்று அப்போது ஒரு குற்றச் சாட்டு எழுந்தது.
இப்போதைய நிலையில், மேக் இப்போது எங்கள் செயல்களுக்கு நாங்கள் பொறுப்பு ஏற்கும் நிலை வந்திருக்கிறது என்கிறார். மேக் இப்போது துணை அதிபர் சில் ராம்போசாவுக்கு நெருக்கமாக இருக்கிறார். 1997ல் மண்டேலாவுக்குப் பிறகு, அதிபராக முயன்றார். அவர் பேரத்தில் கெட்டிக்காரர். அவர் அதிபராகலாம் என்கிறார்.
இடைவேளை உணவின் போது, மேக்கின் மகன் மிலோ வந்தார். அப்போது மண்டேலா பற்றி திடீரென்று வெடித்தார் மேக். அவர் பிரபுத்துவ சர்வாதிகாரி. சோஷலிசவாதியாக வேடம் போட்டார் என்று குற்றம் சாட்டினார்.
சில சமயம் அவர் செய்தது வேதனை தந்தது. என்றாலும் மேக் நாசுக்கைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் எதையாவது சொல்லிக் கொண்டிருப்பார். என்னிடமிருந்து அவர் எதுவும் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய கௌரவத்தைக் காப்பாற்ற அவர் நினைக்கிறார், அவ்வளவுதான் என்று ஒரு நாள் சொன்னார் மண்டேலா.
சிறையில் விவாதம் செய்வது போல் இப்போது விவாதிக்க முடியாது. எங்களுக்கு மிகப் பெரிய சவால்கள் காத்திருக்கின்றன. ஆப்ரிக்க தேசிய காங்கிரசால் அதை சமாளிக்க முடியும். ஆனால் யார் தலைவர் என்று போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அது வீண் வாதம். சிறைவாசம் எப்படி இருந்தது என்று சிலர் கேட்கிறார்கள். எத்தனை அபூர்வமான வாய்ப்பு அது'' என்கிறார் மேக் மகராஜ்.