பெங்களூருவைக் கலக்கி வரும் நாடகக் குழு!
நவீன திரைப்படங்கள் சுநாமியாய் சுழன்றடித்தபோதும், அதற்கு ஈடு கொடுத்து கர்நாடகத்தில் கன்னட நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு வந்தன.
நவீன திரைப்படங்கள் சுநாமியாய் சுழன்றடித்தபோதும், அதற்கு ஈடு கொடுத்து கர்நாடகத்தில் கன்னட நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு வந்தன. ஆனால் 1960-களில் கர்நாடகத்தில் கோலோச்சிய நாடகங்கள், காணாமல் போய்விட்டன. தமிழ் நாடகக்
கலையைப் புதுப்பித்து மக்களுக்கு ஏற்றவாறு புதுமையைப் புகுத்தி தனது கலைப்பயணத்தை பெங்களூருவில் தொடங்கியுள்ளது ஒரு நாடகக் குழு.
வேதருண் ராஜ்குமார் இந்திய அறிவியல் கழகத்தில் கணினி அறிவியலில் பிஎச்டி பட்டம் பெற்றுவிட்டு ஜெராக்ஸ் ஆய்வு நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணிபுரிந்து வருகிறார். கல்கியின் படைப்புகள், பட்டினத்தார் பாடல்கள் மீது காதல் கொண்டவர். 2015-ஆம் ஆண்டு பெங்களூருவில் நாடகங்களை நடத்தும் முயற்சியில் ஈடுபட்டு, இந்திய அறிவியல் கழகத்தில் பிஎச்டி பட்டம் பெற்ற விஞ்ஞானி ஜானகிராமன் உள்ளிட்ட இளம் விஞ்ஞானிகளின் துணையோடு "கற்பனை குதிரை கலை மற்றும் நாடகக்குழு'வைத் தொடங்கியிருக்கிறார்.
Advertisement
இக்குழுவின் சார்பில் பெங்களூரு, பசவேஸ்வர நகரின் கமலாநகரில் உள்ள கர்நாடக என்ஜினியரிங் அகாதெமியின் கேஇஏ பிரபாத் ரங்கமந்திராவில் மே 29-ஆம் தேதி மாலை 6 மணிக்கு "கருத்திருமன்' என்ற தமிழ் நாடகம் அரங்கேற்றப்பட்டது.
வேதருண் ராஜ்குமாரின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த நாடகத்திற்கு பிரதீப், பிரசன்னா, ராமன்சங்கரன் ஆகியோர் இசை அமைத்துள்ளனர். பிரீத்தி பரத்வாஜ் நடன அசைவுகளை கோர்த்திருக்கிறார். நாடகத்தில் கருத்திருமனாக அன்புச்செல்வன், அனிலா ஜோசப்பாக கலா நாயர், பிரெசில்லா செபஸ்டினாக ஐஸ்வர்யா, செüந்தர்யா சந்தானகோபாலனாக கிரித்திகா, அறிவழகனாக தத்த பிரசாத், புலனறியும் பைரவாக மதுசூதனன், மானசியாக சைத்ராஞ்சலி, கல்லூரி முதல்வர் ஜோசப்பாக சந்திரசேகர், நடனமாடுபவர்களாக பவித்ரா, திவ்யா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒரு பள்ளி ஆசிரியரின் சிந்தனை வெளியில் ஏற்படும் திகிலூட்டும் மனரீதியிலான பரிணாம மாற்றங்களைச் சித்திரிக்கும் சுவாரஸ்யமான கதைத் தளத்தில் அமையப் பெற்றுள்ளது "கருத்திருமன்'. சொந்த மற்றும் சமூக அழுத்தங்களினால் கருத்திருமனின் பகுத்தறிவு மற்றும் அறவழிச் சிந்தனைகள் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன. அவன் மனவெளியில் எண்ணிலாச் சலசலப்புகளும் சஞ்சலங்களும் ஆக்கிரமித்து கொலை உணர்வுகளைத் தூண்டுகின்றன. விசித்திரமான நிகழ்வுகளால் மதி கலக்கப்பிடியில் இருந்து கருத்திருமன் விடுபடுவதை அழகுற காட்டப்படுகின்றன.
மனிதமனங்களில் விளையும் மாறுபட்ட சிந்தனையோட்டங்களை இயக்குநர் வேதருண் மிகவும் இயல்பான கதைக் களத்தில் சாமர்த்தியமாக விளக்க முற்பட்டிருக்கிறார். அவரது கதை நாயகனான கருத்திருமனை கண்முன்னே கொண்டு வருவதில் அன்புச்செல்வன் வென்றிருக்கிறார்.
கருத்திருமனின் வாழ்க்கைப் பாதையை திசைமாற்றும் நரம்பியல் மருத்துவராக நடித்துள்ள ஜானகிராமன், அனைவரின் கவனத்தை ஈர்த்து கைதட்டலை பெற்றார். கதைக்களத்தை சரியாக அமைத்து, அதில் கதாபாத்திரங்களை லாகவமாக சுழலவிட்டு, பார்வையாளர்களின் கண்களில் புதிய சிந்தனை பயிர்களை பயிரிடுவதில் வேதருண் சக்கைப்போடு போட்டிருக்கிறார். கருத்திருமன் கருத்துக் கருவூலத்தைக் கிளறுபவன் என்பது பார்த்தவர்களின் கருத்து.
இது குறித்து விஞ்ஞானி வேதருண் ராஜ்குமார் கூறுகையில்,""கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்று புதினத்தில் இடம்பெற்ற கருத்திருமன் கதாபாத்திரத்தை எங்கள் நாடகத்தின் தலைப்பாகவும், கதைக்களத்தின் வேராகவும் எடுத்தாண்டிருக்கிறோம். "அதிர்வலை பிம்பங்கள்', "பூங்கா உரைத்த காதை' ஆகிய நாடகங்களுக்கு பிறகு, "கருத்திருமன்' நாடகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பெங்களூருவை அடுத்து சென்னையிலும் தமிழ் நாடகங்களை அரங்கேற்றத் திட்டமிட்டிருக்கிறோம். நாடகங்கள் அழகான கலைவடிவமாகும். இந்த கலைவடிவத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. நாடகங்கள் தரும் உள்ளுணர்வைத் திரைப்படங்களால் தந்துவிட முடியாது. நாடகங்களை மக்கள் ஆர்வமாகப் பார்க்கத் தொடங்கினால், மேலும் பல நல்ல நாடகங்கள் மலரும். நாடகங்களுக்கு இணையான கலைவடிவத்தை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை'' என்றார்.