முகப்பு
தினமணி கதிர்

செய்திகள் வாசிப்பது...

""ஆகாஷவாணி செய்திகள்.  செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி...'' என்ற குரல் 1990-ஆண்டுகள் வரை பிரசித்தம்.  இந்தக் குரலைக் கேட்காத தமிழர்களே இல்லை எனலாம்.

Updated On : 21 ஆகஸ்ட், 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:37 PM


""ஆகாஷவாணி செய்திகள்.  செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி...'' என்ற குரல் 1990-ஆண்டுகள் வரை பிரசித்தம்.  இந்தக் குரலைக் கேட்காத தமிழர்களே இல்லை எனலாம்.  இந்தக் கணீர் குரலுக்குச் சொந்தக்காரரான அவர் தனது 88-ஆவது வயதில் ,  கடந்த ஆக. 13-இல் மறைவுற்றார்.

24  மணி நேர செய்தித் தொலைக்காட்சிகள் இல்லாத,  பண்பலை வானொலிகள் இல்லாத,  அவ்வளவு ஏன் தூர்தர்ஷன் துவக்கப்படுவதற்கு முந்தைய காலகட்டத்தில் ஒலிபரப்புத் துறையில் கோலோச்சிக்கொண்டிருந்தது அகில இந்திய வானொலி.  அந்தக் காலத்தில் அதற்கு ஆகாஷவாணி என்று பெயர்.   அப்போது தமிழ் மக்கள் அனைவருக்கும் மிகவும் தனது கணீரென்ற குரல் மூலம் வசீகரித்த பெண்மணி சரோஜ் நாராயணசுவாமி.  அவர் தில்லியைச் சேர்ந்த தமிழ்ச் செய்தி வாசிப்பாளர். 

தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தில், மும்பையில் 1934-இல் பிறந்து வளர்ந்தவர் சரோஜ் நாராயணசுவாமி.  ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்.  திருமணமாகி தில்லிக்கு இடம் பெயர்ந்த அவர், அங்கு முதலில் வங்கிப் பணியில்சேர்ந்தார்.  அவர் பணியாற்றிய வங்கிக் கிளைக்கு அருகில்தான் அகில இந்திய வானொலி நிலையம்.

Advertisement

வாணொலியில் சேர வேண்டும் என்றுஆசைப்பட்டு,  தேர்வு எழுதி 1962-இல் தமிழ் செய்தி வாசிப்பாளர் பணியில் சேர்ந்தார். சுமார் 35 ஆண்டுகள் பணியாற்றிய அவர், இந்திய வானொலியின் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளர் என்ற பெருமைக்குரியவர்.

தன்னைப் பற்றிக் குறிப்பிடுகையில், ""மும்பை என் ஜென்ம பூமி; தில்லி என் கர்ம பூமி'' என்று சொல்லுவார். அவரது குரல் வசீகரத்தின் ரகசியம் என்ன என்று கேட்டால்,  சிரித்தபடியே, என்னோட அம்மா குடித்த காவிரி தண்ணீரும்,  நான் பார்த்த தமிழ் சினிமாக்களும்தான் என் தமிழ் உச்சரிப்புக்குக் காரணம்.  பாரதியார் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்'' என்பார்.

இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய்,  நரசிம்மராவ் ஆகிய பிரதமர்களைப் பேட்டி கண்ட சரோஜ் நாராயணசுவாமியை மிகவும் கவர்ந்த தலைவர் இந்திரா காந்தி. அவரது மரணச் செய்தியை சரோஜ் நாராயண சுவாமி தான் வானொலியில் அறிவித்தார்.

இதுகுறித்து நினைவுகூறும்போது, ""1984-ஆம் ஆண்டு அக். 31-ஆம் தேதி. அன்றைய காலை செய்தியின்போது, பிரதமர் இந்திரா காந்தி ஒரிஸ்ஸாவில் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, "என் கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை இந்த நாட்டின் முன்னேற்றத்துக்கு உழைப்பேன்' என்று பேசியதைக்குறிப்பிட்டேன்.  அன்றைய இரவு செய்தியின்போது,  அவரது மரணச் செய்தியை அறிவிப்பேன் என நான் கனவிலும் நினைக்கவில்லை. 

செய்திகளில் அவரது மரணத்தைக் குறிப்பிட்டபோது நானாகவே "அன்னை இந்திரா' என்று குறிப்பிட்டேன். அவரது மரணம் என்னை மிகவும் பாதித்தது.

ஆனால், துக்கத்தையோ,  மகிழ்ச்சியையோ செய்தி வாசிக்கும்போது வெளிப்படுத்தக் கூடாது என்ற செய்தி வாசிப்பு மரபையும் மீறி என் குரல். அப்போது தழுதழுத்தது என்று ஒரு பேட்டியில் அவர் நினைவு கூர்ந்தார்.

அதேபோல, வங்கத் தேசப் போரின்போது,  அவர் வாசித்த போர் குறித்த செய்திகளை தமிழக மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டனர்.  இந்திய ராணுவத்தின் வெற்றிச் செய்திகளைக் கேட்டு மகிழ்ந்து,  தங்கள் மகிழ்ச்சியை எனக்குக் கடிதம் எழுதித் தெரிவித்தனர்.  அப்படி எனக்கு ஏராளமான அக்கடிதங்கள் வந்ததும்,  அவற்றை நான் படித்து நெகிழ்ந்ததும் மறக்கமுடியாதஅனுபவம்'' என அவர் மனம் நெகிழ்ந்திருக்கிறார். 

செய்தி வாசிக்கும்போது உச்சரிப்பு மிகவும் முக்கியம்;  அது ஆன்மாவை போன்றது.  செய்தி வாசிப்புடன்கூட,  வானொலி செய்திப் பிரிவில் உயர் பொறுப்பு வகித்தவர்அவர். செய்திப் பிரிவில் யார் உச்சரிப்பில்தவறு செய்தாலும்,  உடனேஅதனைச் சுட்டிக் காட்டித் திருத்துவார்.  செய்தி வாசிக்கும்போது பிற நாட்டு வார்த்தைகள் வந்தால், அந்நாட்டு தூதரத்தையோ, கலாசார மையத்தியோ தொடர்புகொண்டு,  அந்த வார்த்தையின் சரியான உச்சரிப்பைத் தெரிந்துகொண்டு வாசிப்பது அவர் வழக்கம்.

பலர்அவரிடம், உங்கள் குரல்ஆண்மைத் தனம்கொண்டதாகக் கேட்பார்களாம். அதற்குஅவரது பதில், "" ஆம்!  என் குரல் (மற்றவர்களைவிட)  மேலான வாய்ஸ்தான்!''

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.