மாணவனின் அசத்தல் சாதனை..!
வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்து மக்களைத் தாக்குவதும், பயிர்களைச் சேதப்படுத்துவதையும் தடுக்கும் வகையில் எச்சரிக்கை விடுக்கும் கருவியை வடிவமைத்துள்ளார் மாணவர் கிறிஸ்பின் ஜேடன்.
வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்து மக்களைத் தாக்குவதும், பயிர்களைச் சேதப்படுத்துவதையும் தடுக்கும் வகையில் எச்சரிக்கை விடுக்கும் கருவியை வடிவமைத்துள்ளார் மாணவர் கிறிஸ்பின் ஜேடன்.
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்பட்ட மார்த்தாண்டம் பம்மலில் சேக்ரட் ஹார்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கிறார்.
முளகுமூடு பகுதியைச் சேர்ந்த இவரது தந்தை கிறிஸ்பின் ஜீவா, தனியார் கல்லூரியில் நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்து வருகிறார்.
இதுகுறித்து கிறிஸ்பின் ஜேடனிடம் பேசியபோது:
'வன விலங்குகளை ஊருக்குள் நுழையாமல் தடுக்க வனத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், யானைகள், கரடிகள், காட்டுப்பன்றிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியையொட்டிய கிராமங்களில் வசிப்போரைத் தாக்குவதும், பயிர்களைச் சேதப்படுத்துவதும் தொடர் நிகழ்வாக இருக்கின்றன. இதை செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகளின் வாயிலாக அறிந்தேன்.
இந்தச் சூழலில் மக்களைப் பாதுகாக்க எளிய முறையில் இயங்கக் கூடிய கருவியை வடிவமைக்கும் ஆர்வம் எனக்கு தோன்றியது.
இதற்காக எனது பெற்றோர் ஆதரவுடன் பல்வேறு கருவிகளை உருவாக்கியும், பயன் அளிக்கவில்லை.
பட்டாசு சத்தம், எரியூட்டும் தீயைப் பார்த்து வனவிலங்குகள் அச்சப்படுவதை அறிந்தேன். அத்தகைய ஒலியும் ஒளியும் எழுப்பக் கூடிய கருவியை சுமார் ரூ.6 ஆயிரம் செலவில் உருவாக்கினேன்.
லேசர் விளக்குகள், ஸ்பீக்கர் உள்ளிட்ட எளிய உபகரணங்களை அதில் பயன்படுத்தி, பாமரரும் எளிதில் பயன்படுத்தும் வகையில் கையடக்கக் கருவியாகவே இருக்கிறது. இதற்காக, காப்புரிமையையும் பெறப்பட்டுள்ளது.
இந்த இயந்திரத்தின் செயல்பாடு குறித்து தமிழகஅரசுக்கு செயல்விளக்கம் அளிக்கவும், பழங்குடியின மக்களுக்கு இந்த இயந்திரத்தைக் கிடைக்கச் செய்யுமாறு வலியுறுத்தவும் திட்டமிட்டுள்ளேன்.
எதிர்காலத்தில் இதுபோன்று ஏழை, எளிய மக்களுக்கு பயன்தரக்கூடிய கருவிகளை உருவாக்க முயற்சி செய்வேன்'' என்றார்.