சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது பொதுவான நீதி. குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சட்டப்படி தண்டனை விதிக்கப்படுவதும், அவர் தண்டனையை அனுபவிக்க வேண்டியதும் உலக நியதி.
ஆனால், சீனாவில் குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டாலும், அவர் அதிகாரமும் மிகுந்த பணக்காரராக இருந்தால், தனக்கு பதிலாக வேறு ஒருவரை சிறைக்கு அனுப்பி தண்டனை அனுபவிக்கச் செய்துவிடுகிறார். இந்த முறையை சீனாவில் 'டிங் சூய்' என்று அழைக்கிறார்கள்.
உதாரணமாக ஒரு வழக்கு. இருபது வயதான பணக்கார இளைஞர் தன்னுடைய புத்தம்புது 'மிட்சுபிஷி' காரில் அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்தார். அந்த கார் ஒரு பாதசாரிகள் சாலையைக் கடக்கும் இடத்துக்கு அருகில் வந்தபோது, சிவப்பு விளக்கு எரிந்தது.
பாதசாரிகள் சாலையைக் கடக்கத் தொடங்கினர். மற்ற வாகனங்கள் எல்லாம், சிவப்பு விளக்கை மதித்து, நிற்க, இந்த இளைஞரின் கார் மட்டும் நிற்காமல் விரைந்தது. அது சாலையைக் கடந்து கொண்டிருந்த இருபத்தைந்து வயது இளைஞர் மீது மோதி, அவரை தூக்கி வீசியது. அவரும் இறந்தார்.
சீன காவல்துறை வழக்குப் பதிவு செய்து, பணக்கார இளைஞர் மீது நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த இளைஞர் செல்வச் செழிப்பும், மேலிடத்துத் தொடர்பும் உள்ளவர் என்பதை அறிந்து மூன்றாண்டு சிறை தண்டனையை அளித்தார்.
வழக்கமாக, மது அருந்திவிட்டு கார் ஓட்டினாலே சீனாவில் மரண தண்டனையை விதிக்கச் சட்டத்தில் இடமுண்டு. இந்த இளைஞரோ சிக்னலை மதிக்காமல் கார் ஓட்டி, ஒரு அப்பாவியைக் கொன்றுவிட்டார். ஆனாலும் மூன்றாண்டு தண்டனையே வழங்கப்பட்டது.
அதைவிடக் கொடுமை என்னவெனில், அந்தத் தண்டனையையும் அனுபவித்தது அந்தக் குற்றம் இழைத்த இளைஞர் அல்ல; வேறு ஒரு இளைஞர்தான். இதுபோல நிறைய சம்பவங்கள் நடக்கின்றன என்று சீனப் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.
ஒட்டுமொத்தமாக இவ்வளவு என்றோ, இல்லை சிறை தண்டனை அனுபவிக்கும் நாள் ஒன்றுக்கு இவ்வளவு என்றோ பேசி, பணம் கொடுத்து, குற்றம் புரிந்து தண்டனை பெற்றவர்கள் தங்களுக்கு பதிலாக வேறு ஏழைக் குடும்பத்து ஆள்களை தண்டனையை அனுபவிக்கச் செய்து விடுகிறர்கள். இவ்வாறு நடப்பது அண்மைக்கால விஷயமில்லை. 1862-இல் பிரெஞ்சு நாட்டு சட்ட நிபுணர் ஒருவர் இதுகுறித்து விரிவாக எழுதி இருக்கிறார்.
1930-களிலும் அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஒருவர், 'சீனச் சட்டங்கள்' குறித்த தனது குறிப்புகளில் கூறியுள்ளார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் சீனாவுக்கு வந்த அயல்நாட்டுப் பயணியான ஜூலியஸ் பெர்ங்
காஸில், மரணத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர், ஆள் மாறாட்டம் செய்து, தனக்கு பதிலாக வேறு ஒருவரை தூக்கு மேடைக்கு அனுப்பி வைத்தது பற்றியும், அது கடைசி நிமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டு அவன் உயிர் பிழைத்தது பற்றியும் கூறுகிறார்.
பெரிய மாஃபியா குழுக்களில் குழுவின் முக்கியஸ்தர்களுக்கு பதிலாக சிறைத் தண்டனை அனுபவிப்பதற்காகவே சிலர் இருப்பார்கள் என்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.