தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் உள்ள 'மதர் தெரசா கிரவுன்' அரங்கில் பிப்ரவரி 12-இல் திருமணம் ஒன்று நடைபெற உள்ளது. இந்தியா குடியரசு நாடாகி, 75 ஆண்டுகளான நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகையிலோ அல்லது அதன் வளாகத்திலோ இதுவரை திருமணம் ஏதும் நடக்கப்படவில்லை.
இந்த நிலையில், சி.ஆர்.பி.எஃப். உதவி கமாண்டன்ட் பூனம் குப்தாவின் திருமணத்துக்குச் சிறப்பு அனுமதியை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அளித்துள்ளார்.
பூனம் குப்தாவின் நன்னடத்தை, சேவை, பணித் திறமை உள்ளிட்டவற்றுக்காக, குடியரசுத் தலைவர் மாளிகை விதிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, திருமணம் நடைபெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ராஷ்டிரபதி பவன் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியான பூனம் குப்தா, 74-ஆவது குடியரசுத் தின விழாவின்போது சி.ஆர்.பி.எஃப். பெண் வீராங்கனைகளைக் கொண்ட குழுவுக்குத் தலைமை தாங்கி அணிவகுப்பில் கலந்துகொண்டார்.
இவருக்கும், ஜம்மு காஷ்மீரில் சி.ஆர்.பி.எஃப். உதவி கமாண்டன்ட்டாக பணிபுரியும் அவ்னீஷ் குமாருக்கும் பிப்ரவரி 12-இல் திருமணம் நடைபெறவிருக்கிறது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்துகொள்வார்கள்.
பூனம் குப்தா, குவாலியரில் உள்ள ஜிவாஜி பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலைப் பட்டமும், ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், இளங்கலை ஆசிரியர் பட்டமும் பெற்றுள்ளார். 2018-இல் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் தேர்வில் 81-ஆவது ரேங்க் பெற்று தேர்வானார்.
பீகாரில் நக்சல் பாதிப்புக்குள்ளான பகுதிகளிலும் பூனம் பணிபுரிந்துள்ளார். சமூக ஊடகங்களிலும் செயல்படும் பூனம், தனது இன்ஸ்டாகிராம் கணக்கில், சிஆர்பிஎஃப் அதிகாரியாக தான் மாறியது எப்படி என்பதைப் பதிவிட்டு, நாட்டின் சேவைக்கான பணிகளில் பெண்கள் ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
பெண்கள் உரிமை, அதிகாரம், மேலாண்மை, பொது விழிப்புணர்வு குறித்த பதிவுகளையும் அவர் பதிவேற்றம் செய்து வருகிறார். பிரதமர் நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு அளிக்கும் குழுவிலும் கடந்த ஆண்டில் பூனம், இடம் பெற்றிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.