முகப்பு
தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: குடல்புண் குணமாக...

உணவுக்குப் பிறகு பல மாத்திரை மருந்துகளைச் சாப்பிட வேண்டிய கட்டாய நிலை.

Updated On : 7 மார்ச், 2026 at 10:34 PM
பகிர்:

உணவுக்குப் பிறகு பல மாத்திரை மருந்துகளைச் சாப்பிட வேண்டிய கட்டாய நிலை. எவ்வளவு தான் தண்ணீர் அருந்தினாலும் உணவுக் குழாய் எரிச்சல், குடல் புண் ஏற்பட்டு விடுகிறது. உடல் சூடு அதிகமாக இருக்கிறது. இவை மாற என்ன சாப்பிடலாம்? வாய்ப்புண்ணும் ஏற்படுகிறது.

-ஆரோக்கியசாமி, ராசிபுரம்.

பல மாத்திரைகளின் கலப்பு வயிற்றில் உணவுக்குப் பிறகு சாப்பிட்டாலும் அவற்றிலிருந்து வெளிப்படும் வீரியமானது கடும் உஷ்ணத்தை வயிற்றில் ஏற்படுத்துகிறது. தண்ணீர் அருந்துவதால் அது அடங்குவதில்லை.

இஸப்கோல் விதை என்னும் இஸ்கோல் விதை பஞ்சாப், குஜராத், வங்கப்பிரதேசங்களில் அதிகம் கிடைக்கிறது. இதன் விதை தோல் நீக்கியும், நீக்காமலும் கிடைக்கிறது. தோல் நீக்காததை ஊறவைத்து, அதன் தெளிவான தண்ணீரை நீங்கள் அருந்தலாம். தோல் நீக்கியதை பால், பழச்சாறு, தண்ணீர் முதலியவற்றுடன் உள்கொள்ளலாம். உணவுப் பாதையில் எரிச்சல், அழற்சி நீங்கும். குடல் புண் ஆறும். சீதபேதி, ரத்தக்கடுப்பு, மூல ரத்தப் பெருக்கு, மலம் இறுகிப்போகுதல், சிறுநீர் எரிச்சல் இவற்றுக்கு மிகச்சிறந்த கை மருந்து. உடல் வெப்பம் தணிக்கும். புஷ்டி தரும்.

பாலை நன்றாகக் காய்ச்சி இறக்கி நல்ல சூடாக இருக்கும்போதே சிறிது எலுமிச்சம் பழச்சாற்றைப் பிழிந்ததும் உடனே மேல்குடை போன்ற ஆடையும் கீழ் தெளிந்த நீருமாகப் பிரித்து விடும். துணியால் வடிகட்டப்பெற்ற தெளிந்த நீரை சர்க்கரை சேர்த்து, நீங்கள் மாத்திரைகளை உட்கொண்ட சிறிது நேரத்துக்குப் பிறகு அருந்தலாம். இது மிகவும் லேசானது. சாப்பிட ருசியாக இருக்கும். உணவில் வெகுட்டலைப் போக்கி ருசியைத் தரும்.

ஜுரம், ரத்தக் கொதிப்பு, பித்தத்தில் உண்டாகும் நாக்கு தொண்டை வறட்சி, உடல் எரிச்சல், நீர் வேட்கையிலும், இவற்றில் முக்கியமாகக் கொண்ட மற்ற நோய் நிலைகளிலும் சிறந்த பத்திய உணவு. உடனே உடல் நிலையில் தெளிவு ஏற்படும்.

வீரியமுள்ள மருந்துகளை எதிர்கொள்ளும் அளவுக்கு நீங்கள் முதல் நாள் இரவே மண்பானையில் ஊற வைத்த வெட்டிவேர், சந்தன சிராத்தூள், விளாமிச்சை வேர்த் தண்ணீரை மறுநாள் காலை மற்றும் மதியம் உணவுக்கு அரை மணி நேரம் முன் சிறிது பருகுவதை வழக்கமாக்கிக் கொள்ளவும். வயிற்றிலுள்ள சவ்வுகளின் உள்பகுதியில் குளிர்ச்சியை ஏற்படுத்தி, எதிர் வினையாற்றும் வீரிய மருந்துகளிடமிருந்து பாதுகாப்பளிக்கும்.

உமிழ்நீர் சுண்டி விடுவதால் வாய்ப்புண்ணை ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. இதைத் தவிர்க்க அடிக்கடி தண்ணீர் விட்டு வாய் கொப்பளிப்பது, வாய் நிறைய தண்ணீர் நிரப்பி அடிக்கடி முகம் அலம்புவது, நெய், வெண்ணெய் முதலானவைகளை அடிக்கடி நாக்கில் தடவிக் கொள்வது, படிக்காரைப் பொரித்து நெய், தேன், வெண்ணெய் இவைகளில் ஒன்றைக் குழைத்து நாக்கில் தடவிக் கொள்வது, தேங்காய்ப் பால் விட்டு கொப்பளிப்பது, நல்ல எள்ளை வாயிலிட்டு மென்று சாப்பிடுவது, பனங்கற்கண்டு, சாரைப் பருப்பு, பிஸ்தா விதை முதலியவைகளை வாயிலிட்டு மென்று சாப்பிடுவது நல்லது.

வீரியமான மருந்துகளால் ஏற்படும் வயிற்றுச் சூட்டை வெளியேற்ற திராட்சைப்பழம், சுக்கு, சூரத்தாவாரை, ரோஜா மொட்டு, பிஞ்சுக் கடுக்காய் இவைகளின் கஷாயத்தைக் குடிப்பது நல்லது.

மருந்துகளைப் பிரித்துச் சாப்பிடலாம். அவற்றின் மில்லிகிராம் அளவை குறைக்கலாமா, அவற்றுடன் சேர்த்து அன்டாஸிட் மருந்துகள் சாப்பிடும் முறை போன்றவை, உங்கள் மருத்துவரிடம் பேசித் தீர்மானிக்க வேண்டிய நிலையும் தங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

(தொடரும்)

முழு கட்டுரையைப் படிக்க →