• நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நாடகத்தில் முதன் முதலாக நடித்த பாத்திரம்} சீதை. அது மட்டுமல்ல. பரதன், தசரதன், லட்சுமணன், ராவணன், சூர்ப்பணகை, மண்டோதரி ஆகிய பாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
• இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு, கேரளத்தில் உள்ள அவரது சொந்த ஊரான எலபுள்ளி என்னும் கிராமத்தில் நினைவு மண்டபம் கட்டவிருக்கிறார்கள்.
• தயாரிப்பாளரும், இயக்குநருமான காரைக்குடி நாராயணன், நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார். படத்தின் தலைப்பு: "எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை'. இக்கால இளைஞர்களையும் தன் வசனங்களால் ஈர்க்க முடியும் என்கிறார் இந்த 70 வயது இளைஞர்.
• கவிஞர் அறிவுமதி மீண்டும் "தை' கவிதை இதழைக் கொண்டு வருகிறார். கவிதைகள் மாத்திரமே இடம்பெறும் இந்த சிற்றிதழ் தமிழ் இலக்கிய வெளியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
• பிரபலங்களின் பெயர்களை நகருக்கும், சாலைகளுக்கும் சூட்டுவதுண்டு. ஆனால், வித்தியாசமாக "தாய்' வார இதழ் ஆசிரியரும், முன்னாள் எம்.பி.யுமான வலம்புரி ஜானின் பெயர் சென்னை, பெரியார் பாதையில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மருக்கு (மின்மாற்றி) சூட்டப்பட்டுள்ளது.