கேரகல் என்ற விலங்கு யானை, புலி, சிங்கம் போல ஒரு காலத்தில் இந்தியாவில் மன்னராட்சி காலத்தில் புகழுடன் வாழ்ந்தது. ஆனால் இன்று கேரகல் என்ற காட்டுப்பூனை வகையைச் சேர்ந்த இந்த விலங்கினம் அதன் வாழிடத்தை இழந்து அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மன்னராட்சி காலத்தில் இந்த உயிரினம் அரசர்களுக்கு பிரியமான ஒரு விலங்காக இருந்தது.
அவர்களுடன் காட்டிற்குச் சென்று வேட்டையாடியது. அன்றைய அரசர்களுக்கு ஒரு பொழுதுபோக்காக இருந்தது. வேட்டையாடுதலின் போது அதற்கு உறுதுணையாக கேரகல், பறக்கும் பறவைகளைத் தாவிப் பிடித்து வேட்டையாடி அவர்களுக்கு உதவியது.
எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்படும் இதனை மன்னர்கள் வேட்டையாடச் செல்லும் போது தங்களுடன் அழைத்துச் சென்றார்கள். ஆனால் இன்று இதன் நிலை பரிதாபத்திற்கு உரியதாக மாறியுள்ளது. நடுத்தர அளவுள்ள இந்தப் பூனை இப்போது இந்தியாவில் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே வாழ்கிறது. 2021 ஜனவரியில் இந்திய வனவிலங்குகள் வாரியம் மற்றும் மத்திய சுற்றுச்சுழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சரகம் இந்த விலங்கை இன அழிவை எதிர்நோக்கியுள்ள விலங்குகளின் பட்டியலில் சேர்த்துள்ளது. உலகின் மற்ற பகுதிகளில் இது போன்ற ஆபத்தை கேரகல் இப்போது சந்திக்கவில்லையென்றாலும் இந்தியாவில் இந்த விலங்கு அழியும் நிலையில் உள்ளது.