பாலிவுட் சினிமாக்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்த இயக்குநர் சுசி கணேசன், ஹிந்தியில் "தில் ஹே கிரே' படத்தை இயக்கி முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வருகிறார் சுசி கணேசன். இந்தப் படத்துக்கு "வஞ்சம் தீர்த்தாயடா' என பெயரிடப்பட்டுள்ளது.
1980- காலக் கட்டங்களில் மதுரையில் நடந்த நிஜ சம்பவங்களின் பின்னணியை கொண்டு இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ஆக்ஷன் சினிமாவாக இது உருவாகவுள்ளது. இந்தப் படத்தை சுசிகணேசனின் 4 வி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஹிந்தியில் இரண்டு படங்கள் தயாரித்துள்ள சுசிகணேசன் ஹிந்தி தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராகவும் உள்ளார். அத்துடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் உறுப்பினராக அங்கம் வகிக்கிறார். "" மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்புவதில் பெருமை கொள்கிறேன். இது ஒரு வித்தியாசமான படைப்பாக தமிழ் ரசிகர்களை சென்று சேரும்'' என்று தெரிவித்துள்ளார் சுசி கணேசன்.