இருபது சதவீதம்!
நாட்டின் தொழில் துறை வளர்ச்சிக்கு முக்கிய தூணாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் கருதப்படுகின்றன.
நாட்டின் தொழில் துறை வளர்ச்சிக்கு முக்கிய தூணாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் கருதப்படுகின்றன. வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிக அளவு வழங்குவது இத்தொழில்கள் தாம். வேலையில்லா இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்றுவதும் இந்த தொழில்கள்தாம்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையின் உற்பத்திப் பொருட்கள் விற்பனையானால்தான் அவர்கள் தொடர்ந்து தொழிலை நடத்த முடியும். பல்வேறு தொழில், வியாபாரப் போட்டிகள் நிலவும் இக்காலத்தில், பொருட்களை விற்பனை செய்வது மிகவும் சிரமமான ஒன்றாகவே உள்ளது.
எனவே சிறு, குறு மற்றும் நடுத்த தொழில் நடத்துபவர்களின் உற்பத்தி பொருட்களின் 20 சதவீதத்தை அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய அரசின் அமைச்சகங்கள், மத்திய அரசுத் துறைகள், குறு, சிறு தொழில் துறையினரிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டுமென்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இக்கோரிக்கை ஏற்கப்பட்டு, தங்களுடைய ஆண்டு தேவையில் 20 சதவீதத்தை குறு, சிறு தொழில் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டுமென்ற கொள்கை 2012 இல் அறிவிக்கப்பட்டது. மேலும் இது தற்போது கட்டாயமாகக்கப்பட்டுள்ளது.
Advertisement
கொள்முதல் செய்வதற்கான 358 வகையான பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவற்றின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் உள்ள பொருட்களை பொதுத்துறை நிறுவனங்கள் தங்களுடைய ஆண்டு தேவையில் 20 சதவீதத்தை கொள்முதல் செய்ய வேண்டும்.
இதற்காக, மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அமைச்சகத்தின் கீழ் இயங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவனம், குறு, சிறு தொழில் நிறுவனங்களின் பட்டியல், அவை தயாரிக்கும் பொருட்கள், அவர்களுடைய முகவரி பட்டியலை சேகரித்துள்ளது.
மாவட்ட தொழில் மையம், காதி கிராம தொழில் வாரியம், நார் வாரியம், தேசிய சிறு தொழில் கழகம், கைவினை மற்றும் கைத்தறித்துறை இயக்குநரகம் ஆகியவற்றின் ஏதேனும் ஒன்றின் கீழ் அந்த குறு, சிறு தொழில் நிறுவனம் பதிவு செய்திருந்தால் மட்டுமே, கொள்முதல் செய்ய அந்த தொழில் நிறுவனம் தகுதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இக்கொள்கையால் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மேலும் நல்ல வளர்ச்சி அடைய வாய்ப்பாக உள்ளது.
மேலும் தகவலுக்கு : http:dcmsme.gov.innotification.pdf