வயதானவரும் கணினியில் கேம்களை விளையாட ஆரம்பித்தால்போதும், அவரும் இளைஞராகிவிடுவார். அந்த அளவுக்கு கணினி விளையாட்டுகள், அனைத்து தரப்பினரையும் சொக்கி இழுத்துவிடுகிறது.
இப்படிப்பட்ட கேம் பிரியர்களுக்காக பிரம்மாண்ட மூன்று திரைகளைக் கொண்ட மடிக்கணினி (லாப் டாப்) உருவாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு "4 கே' திரையும் 17 அங்குல நீளம் கொண்டதாகும். உலகிலேயே முதல் முறையாக கேம் விளையாடுவதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள முதல் மடிக்கணினி இதுவாகும். ரேசார் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த மடிக்கணினிக்கு "வலாரி' என்று பெயரிட்டுள்ளது.
எந்தவித வயர்களின் இணைப்புகளுமின்றி சிறந்த முறையில் கேம் விளையாட வேண்டும் என்பதற்காகவே இந்த மடிக்கணினியை உருவாக்கியதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது கேமிங் உலகில் அடுத்த ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது. எனினும், இந்த பிரம்மாண்ட மடிக்கணினியை சோதனை வடிவிலேயே உருவாக்கி வெற்றி பெற்றுள்ளதாகவும் இதைச் சந்தைப்படுத்துவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று ரேசார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- அ.சர்ஃப்ராஸ்