இளைஞர்மணி

மூன்றாவது கண்! சுகி. சிவம்

DIN

நீ... நான்... நிஜம்! -43
விழிப்புணர்வு என்ற வார்த்தையைப் படித்துவிட்டு அதெல்லாம் மகான்கள், ஞானிகள் சமாச்சாரம் என்று தூரத்தில் போய் விட வேண்டாம்... ஏழெட்டு கேள்விகள் கேட்கிறேன்... பாத்ரூமுக்குள் குளிக்க ஆரம்பித்த பிறகு, "ஆஹா துண்டு எடுக்கவில்லை... சோப்பு கொண்டு வரவில்லை' என்று கவலைப்பட்ட துண்டா? கழிவறையை உபயோகப்படுத்திய பிறகு, "அடடா... குழாயில் தண்ணீர் வரவில்லையே' என்று கண்டறியும் விநோத மனிதரா நீங்கள்? அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிக்கட் இத்யாதிகளைத் தேடுகிறேன் பேர்வழி என்று கலவரம் அடைந்து கலாட்டா செய்கிறவரா? கைபேசி எங்கே வைத்தோம் என்பது தெரியாமல் பிறரிடம் மிஸ்டு கால் கொடு என்று கெஞ்சிய பிறகு, அடடா silent-இல் அல்லவா போட்டோம் என்று தலையில் அடித்துக் கொள்ளும் பழக்கம் உண்டா? இருவரிடம் அல்லது மூவரிடம் சந்திப்பதாக (ஒரே நாள் ஒரே நேரத்தில்) வாக்குக் கொடுத்து விட்டு, "அடடா... முட்டாள் தனம் செய்துவிட்டோமே' என்று வருத்தப்பட்ட துண்டா? "நாம் இவ்வளவு கோபப் பட்டிருக்க வேண்டாம்... இந்த விஷயத்தைக் கேட்டிருக்க வேண்டாம்... அந்த வார்த்தையைச் சொல்லியிருக்க வேண்டாம்' என்று Flash Back சீன்களை ஓட்டி அதை Erase (அழிக்க) அல்லது Delete (நீக்க) பண்ண தத்தளிப்பது உண்டா?
"அதைச் சாப்பிட்டிருக்க வேண்டாம்... இதை இந்த அளவு சாப்பிட்டிருக்கக் கூடாது'' என்று பலமுறை சொல்லிக் கொள்கிற அல்லது நினைக்கிற பழக்கம் உண்டா? தொடர்ந்து தாமதமாகப் போய் பள்ளி, கல்லூரி, அலுவகங்களில் அவமானப்படுவது உண்டா? மன்னிப்பு கேட்டு இளிக்கும் வழக்கம் உள்ளவரா? பேசக் கூடாத மனிதரிடம் பேசக் கூடாத விஷயத்தைப் பேசி பிரச்சனைக்கு அடிக்கடி ஆளாவது வழக்கமா? உங்கள் செயல்களை மற்றவர் விமர்சித்தாலும் பிடிக்காது... தானாகவும் தன்னை விமர்சிக்கும் வழக்கமுமற்றவரா? என்னுடைய மதம், மொழி, இனம், நாடு, வழிபாடு, ஜாதி, குலம், கோத்திரம் மிகமிக உயர்ந்தது என்கிற கர்வம் உடையவரா? இதில் எந்த கேள்விக்கு "ஆம்' என்ற பதில் வந்தாலும் நீங்கள் விழிப்படைய வேண்டியவர். இன்னும் விழிப்படையாதவர். இத்தனை கேள்வி எழுப்பும் இவன் ரொம்ப யோக்யனா? இவன் மட்டும் இந்த மாதிரி இருப்பதில்லையா? இப்படிக் கேட்க இவனுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று பொருமுகிற நபரா? மன்னிக்கவும் நீங்கள் ரொம்பவே தூக்கத்தில் இருப்பவர்... விழிக்க இரண்டு மூன்று ஜன்மங்கள் கூட எடுக்க வேண்டி இருக்கலாம்... கோபம் வருகிறதா? சரி வம்பை நிறுத்திவிட்டு விஷயத்துக்கு வருகிறேன்.
கடந்த சில இதழ்களில் புத்தர், காஞ்சி மகாபெரியவர், இப்படிப் பட்டவர்கள் பற்றி நான் எழுதியதைப் படித்துவிட்டு, "என்னடா இவன் சாமியார்கள் சமாச்சாரமாக எழுதுகிறான். அதுவும் இளைஞர் மணியில், சுயமுன்னேற்றம் குறித்த கட்டுரையில் போய் இந்த மாதிரி மனிதர்களையா எழுதுவார்கள்?' என்று சிலர் யோசித்திருக்கலாம். இவன் இந்து மத ஞானியரை நைசாக நுழைத்து இந்து மதப் பிரச்சாரம் மறைமுகமாகச் செய்கிறானோ என்று கூட சிலர் சந்தேகப் பட்டிருக்கலாம். விழிப்பு என்பது மதத்திற்கு அப்பாற்பட்டது. கிறித்தவத்தில் இயேசுவின் பணி கூட மதமாகப் புரிந்து கொள்ளப்பட்டதே ஒழிய, அதன் சூட்சுமம் பலருக்கும் தெரியவில்லை. இயேசு குறித்து என் பார்வையைச் சொல்கிறேன். பிறகு முடிவு செய்யுங்கள்... இயேசுவின் வசனங்களில் புகழ் பெற்ற வசனம் உண்டு. "இறந்தவனை இறந்தவர்களிடமே விட்டுவிடுங்கள். இறந்தவரை இறந்தவர்களே பார்த்துக் கொள்வார்கள்' என்றொரு பொன்மொழி. இதன் ஆழமான பொருள் மதத்தன்மையில் ஊறியவர்களுக்கு ஒருபோதும் விளங்காது. மதவெறி கடந்து விழிப்படைந்தவர்களுக்கு மட்டுமே அதன் உண்மை தரிசனமாகும். விளக்குகிறேன்.
ஆழமான ஏரியில் ஒருவர் வலையை வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அவர் நிறைய மீன்கள் பிடித்த மகிழ்ச்சியில் மீன் போலவே துள்ளினார். அப்போது அவரது தோள்களை வலிவும் பொலிவும் மிக்க கைகள் அழுத்தின. அந்த அழுத்தத்தில் அளவு கடந்த அன்பும் கருணையும் அர்த்தமாயின. திடுக்கிட்டுத் திரும்பிய மீனவர் தம் தோள்களை அழுத்திக் கொண்டிருக்கும் கைகளுக்குச் சொந்தக்காரரைக் கண்டார். ஊடுருவும் பார்வை. கவர்ந்திழுக்கும் காந்தம் போன்ற திருமுகம். அவரது ஆளுமை வட்டத்தில் இருந்து மீளுவது அத்தனை சுலபமல்ல. "இப்படிச் சின்னச் சின்ன மீன்களைப் பிடித்தே காலம் கழிக்கிறாயே? என்னுடன் வா. வாழ்க்கையைப் பிடிக்க, இதைவிட உயர்ந்தவற்றை வலை வீசி பிடிக்கும் கலையைச் சொல்லித் தருகிறேன்'' என்றார் அந்தப் புனிதர்... அவர் பெயர் இயேசுபிரான். மறுதலிக்க முடியாதவராய், வலையையும் மீன்களையும் வீசி விட்டு அவர் பின்னே நடக்கத் தொடங்கினார் அந்த மீனவர். அவரது கருணை மழை, ஞான அலை, மீனவரை அவர் பின்னே போக விட்டது. இருவரும் சிறிது தொலைவு நடந்த சமயம்... உறவினர்கள் ஓடி வந்தார்கள்.
"உன் தகப்பன் இறந்து விட்டான்... வா... உடனே வா'' என்று மீனவரின் உறவினர்கள் கூவி அழைத்தனர். கைகளைக் கூப்பி யேசுவை நோக்கியவர், ""போதகரே என் தந்தை இறந்து விட்டாராம்... அவரை அடக்கம் செய்துவிட்டு உங்கள் பின்னே வந்து விடுகிறேன்... நீங்கள் கொஞ்சம் காத்திருக்க இயலுமா?'' என்று கண்ணீர் மல்கக் கேட்டார் அவர். இயேசு சிரித்தபடி சொன்னார். "இறந்தவரை இறந்தவர்களே அடக்கம் செய்யட்டும். நீ போக வேண்டாம். நீ என்னுடன் வா. நீ உயிருடன் இருக்கிறாய். இந்தக் கிராமத்தில் அநேக மனிதர்கள் இறந்தவர்கள். அவர்கள் இறந்தவரை அடக்கம் செய்து விடுவார்கள்'' என்றபடி இயேசு புறப்பட்டார்.
இறந்தவர்கள் இறந்தவரை அடக்கம் செய்வார்கள் என்ற வசனம் புரிகிறதா? உயிரோடு இருக்கும் போதே சிலர் செத்தவர்களைப் போல ஆகி விடுவதை யேசு குறிப்பிடுகிறார். அவர்கள் விழிப்படையாதவர்கள். இருந்தும் இல்லாதவர்கள். உயிருண்டு... ஆனால் உயிர்ப்பில்லை. அவர்கள் இறந்தவர்கள்... அவர்கள் நிஜமாகவே மரித்துப்போனவர்களை அடக்கம் செய்வார்கள் என்கிறார் யேசு. என்னை உலுக்கிய வரிகளில் வலிமையான வரி இது!
விழிப்புணர்வு என்பது மதங்கடந்தது என்பதை உணர்த்த இஸ்லாத்தில் இருந்தும் ஓர் உதாரணம் தருகிறேன். ஹசரத் அலி என்கிற பெருமகனார், இஸ்லாத்தை - மார்க்கத்தை நிலை நாட்ட ஒருவருடன் போருக்கு அழைக்கப்பட்டார். போரிட வந்தவருக்குக் கொள்கை விளக்கங்களை உணர முடியாததால், "என்னைப் போரில் நபிகள் வென்றால் மார்க்கத்தில் இணைகிறேன். வெற்றி முடிவானது'' என்று சவால் விட்டார். நபிகள் ஹசரத்தைப் போரிட பணித்தார். மற்ற விவரங்களை நாகூர் ரூமி அவர்கள் புத்தகத்திலிருந்து படித்ததைத் தருகிறேன். தன் எதிரியைக் கீழே தள்ளி அவன் நெஞ்சின் மீது அலி உட்கார்ந்து விட்டார்கள். வெற்றி முடிவானது. அந்த நேரத்தில் அந்த எதிரி ஒரு காரியம் செய்தான். தோற்றுப் போகப் போகிறோம் என்று தெரிந்து விட்ட தருணத்தில் யாரும் செய்ய நினைக்காத, செய்யத் துணியாத காரியம் அது. திடீரென்று அலீயவர்கள் முகத்தில் காறி உமிழ்ந்துவிட்டான். அவ்வளவுதான்! அலீக்குக் கோபம் பொங்கியது. அவனைக் கொல்ல வாளை உருவினார்கள். ஆனால் என்ன நினைத்தார்களோ, உடனே எழுந்துவிட்டார்கள். "உன்னைக் கொல்லாமல் விட்டுவிடுகிறேன். நீ போய்விடு'' என்றார்கள். எதிரிக்கு ஒரே ஆச்சரியம். நாமாக இருந்திருந்தால் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்திருப்போம். ஆனால் அவனோ அலீயின் செயலுக்கு விளக்கம் கேட்டான். முகத்தில் காறி உமிழ்ந்து அவமானப்படுத்தியும் ஏன் என்னை விடுகிறீர்கள்? என்று கேட்டான்.
அலீ சொன்னார்கள்: நீ என் முகத்தில் காறி உமிழ்ந்த போது எனக்கு பயங்கரமான கோபம் வந்துவிட்டது. உடனே நான் உன்னைக் கண்டம் துண்டமாக வெட்டிப் போட நினைத்தேன். ஆனால் அப்படி நான் செய்திருந்தால், அது என் கோபத்தின் காரணமாக உன்னைக் கொலை செய்ததாகும். இது இறைவனுக்காக நடத்தப்படும் யுத்தம். இதில் என்னுடைய உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்து இந்தப் போரின் புனிதத்தைக் கெடுக்க நான் விரும்பவில்லை. ஃபார்ஸி மொழியில் இயற்றப்பட்ட தனது மஸ்னவி என்ற காவியத்தில் மௌலானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்) அவர்கள் இந்த நிகழ்ச்சியை விவரித்து சிலாகிக்கிறார்கள்'' என்கிறார் நாகூர் ரூமி. இறைவனுக்காக என்று தொடங்கிய சண்டை தன் மீது எச்சில் துப்பியதற்கான கொலையில் முடிவது சரியல்ல என்ற விழிப்பே அலீ அவர்களின் சிறப்பு.
கோபத்தில் நாம் எதுசெய்தாலும் அது விழிப்புணர்வற்ற செயல் என்று அறிய வேண்டும். இன்னும் பல புனிதமான பெயர்களில் மனிதர்கள் வன்முறை இன்று நிகழ்த்துகிறார்கள். ஆனால் உண்மையான காரணம் அறிவு தூங்கி வழிய, மனக்குழப்பம் தலைவிரித்தாடி அந்தப் பிழைகளை அரங்கேற்றம் செய்கிறார்கள். இந்த நுட்பமான பார்வையை உங்கள் மூன்றாவது கண்தான் வழங்கமுடியும். விழிப்புணர்வற்ற நிலையை விளக்கும் ஜென் கதை ஒன்று சொல்கிறேன். கொஞ்சம் நம்ம ஊர் சரக்காக்கித் தருகிறேன்.
பல அடுக்குகளைக் கொண்ட மாடியின் உச்சியில் நின்று கொண்டிருந்தார் ஒரு நபர். தரை தளத்தில் தெரிந்த நீச்சல் குளத்தை இரசித்துக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்தில் ஒரு பெருங்கூச்சல் கேட்டது. "ஏ... ராமசாமி உன் மகன் நீச்சல் குளத்தில் விழுந்துட்டான்'' என்று அலறினார் ஒருவர். அவ்வளவுதான்... மேல்மாடியிலிருந்து நீச்சல் குளம் நோக்கிக் குதித்தார் அந்த நபர். ஆனால் நீச்சல் குளம் நோக்கித் தலை கீழாக வரும் பாதி வழியில் தான் அவருக்கு உரைத்தது... "நான் ராமசாமி இல்லையே... கிருஷ்ணசாமி அல்லவா என் பெயர்' என்று குழம்பினார். கொஞ்ச தூரத்தில் வரும்போது நமக்கு மகன் இல்லை காரணம் திருமணமே ஆகவில்லை... அப்படியிருக்க ஏன் குதித்தோம் என்று கவலைப்பட்டார். இது உண்மையல்ல... ஒரு வேடிக்கைக் கதை... ஆனால் பல மனிதர்கள் குழப்பத்திலும் மயக்கத்திலும் செயல்படுகிறார்கள். என்பதை எடுத்துரைக்கும்... இல்லை... இடித்துரைக்கும் கதை. நாம் குழப்பத்தில் செயல்படுகிறோம் என்பதை உணரும் அந்தக் கணத்தில்தான் விழிப்பே தொடங்குகிறது... புரிந்தால் சரி!
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT