முகப்பு
மகளிர்மணி

கர்ப்பிணிப் பெண்களுக்கான ஓர் விழிப்புணர்வு!

குடும்பம், குழந்தைகள், வேலை எனப் பல்வேறு பணிகளைச் சுமக்கும் இன்றைய பெண்களுக்குத் தங்களுடைய கர்ப்ப காலத்தில் குழந்தைகளைப் பாதுகாப்பதும் முக்கியமான பணி.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:47 PM
பகிர்:

குடும்பம், குழந்தைகள், வேலை எனப் பல்வேறு பணிகளைச் சுமக்கும் இன்றைய பெண்களுக்குத் தங்களுடைய கர்ப்ப காலத்தில் குழந்தைகளைப் பாதுகாப்பதும் முக்கியமான பணி. குழந்தை பிறந்த பிறகு எதையெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் நாம் செய்யத் தவறுவதில்லை. ஆனால், குழந்தை கருவிலே இருக்கும்போது நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கின்றன. மிகவும் முக்கியமானது கருவிலே இருக்கும் குழந்தையிடம் நாம் ஏற்படுத்தும் பந்தம். இதுதொடர்பாக, கோவை பீளமேட்டில் "சிருஸ்டி' என்கிற கர்ப்பிணிப் பெண்களுக்கான பாதுகாப்பு மையத்தை நடத்தி வரும் வித்யாதேவி சரவணன் கூறியதாவது:

 ""2007-இல் என்னுடைய கர்ப்பக் காலத்தில் நான் இந்தப் பயிற்சியை மேற்கொண்டேன். இந்தப் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்ததால் அடுத்த ஓராண்டுகளில் கோவை பீளமேட்டில் இந்த "சிருஸ்டி பிரக்னென்சி கேர்' எனும் பயிற்சி மையத்தை தொடங்கினேன். என்னதான் ஐ.டி துறையில் வேலை செய்தாலும், இந்தப் பணியை செய்யும்போது மட்டும்தான் மிகவும் மன திருப்தி ஏற்படுகிறது. ஏழைப் பெண்களுக்கு இலவசமாக இப்பயிற்சி கற்றுக் கொடுத்து வருகிறேன்.

 கருவிலே வளர்ந்து வரும் குழந்தையின் அறிவுத் திறன், உடல், மனநல மேம்பாட்டுக்காக, கலிபோர்னியாவில் உள்ள ஹேவர்டு பல்கலைக்கழகத்தில் 20 வருடங்களாக குழந்தைகளின் மேம்பாடு குறித்த ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்ட பல வழிமுறைகளை நமது கலசாரத்துக்கு ஏற்றாற்போல் வடிவமைத்து பயிற்சி அளித்து வருகிறேன்.

இதில், கருவில் வளரும் குழந்தையுடன் தொடர்பு கொள்ளுதல், தியானம், உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, குழந்தை வளர்ப்பு, உணவு முறைகள், சுகப்பிரசவத்துக்கான சிறப்புப் பயிற்சிகள், குழந்தைப் பிறந்த பின் செய்யக்கூடிய ஊக்குவிக்கும் பயிற்சிகள், கருவுற்ற காலத்திலும், பிரசவத்துக்குப் பின்னும் தாய்மார்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், நினைவாற்றல் பயிற்சிகள், மகப்பேறு குறித்த பல பயிற்சிகள் அடங்கும். இப்பயிற்சி மூலமாக, 80 சதவீதம் பெண்களுக்கு சுகப்பிரசவம் ஏற்பட்டுள்ளது என்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.

 கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உடலிலும், மனதிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். அதைப் பொறுத்துதான் கருவில் இருக்கும் குழந்தையும் வளர்கிறது.  இதனால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் குழந்தைகளை ஆரோக்கியமானவர்களாக வளர்க்கும் முறை குறித்த ஆலோசனைகளை வழங்கி வருகிறோம்.

 இன்றைய பெண்கள் வேலைப்பளு காரணமாக பல்வேறு மனசிக்கலுக்கு ஆளாகின்றனர்.  அதைத் தவிர்க்கும் வகையில் பல்வேறு சிறப்பு பயிற்சிகளையும், வகுப்புகளையும் எடுத்து வருகிறேன். இப்பயிற்சிகள் மூலமாக குழந்தைகளுக்கு ஏற்படும் மாறுகண், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்கப்படும். கருவிலே வளர்ந்து வரும் குழந்தை ஆற்றல்மிக்க, தன்னம்பிக்கை மிக்க, நல்ல நினைவாற்றல் உள்ள, ஆன்மிகச் சிந்தனையுடன் கூடிய குழந்தைகளாக உருவெடுக்க இப்பயிற்சி உதவியாக இருக்கும்'' என்கிறார் வித்யாதேவி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.