காந்திஜியின் தைரியம் இன்று நாட்டுக்குத் தேவை : காந்திஜியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்ஜி
மகாத்மா காந்தியடிகளின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்ஜி. உலக அமைதி, ஒற்றுமை, கலாசாரம், கல்வி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு ஆற்றிய
மகாத்மா காந்தியடிகளின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்ஜி. உலக அமைதி, ஒற்றுமை, கலாசாரம், கல்வி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு ஆற்றிய அரும்பெரும் சேவையைப் பாராட்டி அவருக்கு பிரான்ஸ் நாட்டு அரசு தனது நாட்டின் உயரிய கலை இலக்கிய விருதை வழங்கி கௌரவித்துள்ளது. பிரெஞ்சு தூதரகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அதன் தூதுவரான ஃபிரான்காய்ஸ் ரிச்சியர் "Order of Arts and Letters' என்னும் விருதை வழங்கிப் பாராட்டினார்.
மகாத்மா காந்தியின் நான்காவது மகனான தேவதாஸ் காந்தியின் நான்காவது மகள், தாராகாந்தி. இவரது தாயார் மறைந்த லட்சுமி தேவதாஸ் காந்தி (ராஜாஜியின் மகள்) ஆவார். இவரது கணவர் ஜோதி பிரசாத் பட்டாச்சார்ஜி மறைந்துவிட்டார். மேலும் தாராகாந்தி,மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தியின் சகோதரியாவார்.
விருதை பெற்றுக்கொண்ட தாராகாந்தி பட்டாச்சார்ஜி கூறியதாவது-
""எனது பாட்டனார் காந்திஜியிடமிருந்து தைரியத்தை ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டும். அவரது அச்சமற்ற குணம் அன்பாலும் இரக்கத்தாலும் விளைந்தது. காந்திஜியின் துணிச்சலான செயல்கள் வித்தியாசமானதாகும். நான் அவரது அறையைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். அவரது அறை எப்போதும் திறந்தே இருக்கும். அவரை பார்த்துவிட்டு திரும்பும் அரசியல்வாதிகள் காந்திஜியின் கருத்து ஏற்க கூடியதாக இல்லை என்றே கூறுவார்கள். காந்திஜியிடம் உள்ள தைரியமும், மன உறுதியும் இன்று நாட்டுக்கு தேவை'' என்றார்.
தன் தாத்தாவின் மரபை உறுதியாகப் பின்பற்றி, சமாதானம், ஐக்கியம், பண்பாடு, கல்வி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் தாரா காந்தி ஆற்றிவரும் குறிப்பிடத்தக்க பணிகளைப் பாராட்டி இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது என பிரெஞ்சு தூதரக அறிக்கை குறிப்பிடுகிறது. கிராமப்புற ஏழைப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவும் வகையில், காந்தியால் தோற்றுவிக்கப்பட்ட தனது பாட்டியான கஸ்தூரிபாய் காந்தியின் தேசிய நினைவு அறக்கட்டளையை கடந்த 28 ஆண்டுகளாக தாரா காந்தி பொறுப்பேற்று நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு தொண்டாற்றி வருகிறார். 82 வயதுடைய இவர் காந்திஜியைப் போலவே அரிய பண்புகள் நிறைந்தவர். அன்பு மற்றும் பொறுமைக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார்.
18 ஆண்டுகளாக கங்கை பாதுகாப்பு இயக்கத்திலும் ஈடுபட்டு வரும் தாரா காந்தி, நதிகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்பாடுகளிலும் தீவிரமாக பங்கெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், பண்டிட் ஹரிபிரசாத் செளராஸ்யா, ரகு ராய் போன்றோர் இதற்கு முன் இந்த கெüரவத்தைப் பெற்ற இந்தியர்கள் ஆவர்.