மறக்க முடியாத பாதிப்பைஏற்படுத்திய மர்தானி
2014-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிப் பெற்ற "மர்தானி' படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்படும் "மர்தானி -2' படத்திலும் மூத்த காவல்துறை அதிகாரி ஷிவானி சிவாஜிராய் பாத்திரத்தில் நடிக்க ராணி முகர்ஜி தயாராகிவிட்டார். ""முதல் பகுதியில் நடித்த பாதிப்பு இன்னும் என் மனதை விட்டு அகலாத நிலையில் மீண்டும் இரண்டாவது பகுதியில் அதே பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்று கூறும் ராணி முகர்ஜி நடிக்கும் "மர்தானி -2' பகுதியை முதல் பகுதியை இயக்கிய பிரதாப் சர்க்காரின் உதவி இயக்குநர் சோபி புத்ரன் இயக்குகிறாராம்.
தமிழ் கற்கும் பாலிவுட் நடிகை!
அண்மையில் வெளியான "கான்கேஷ்' என்ற படத்தில் நடனத்தில் ஆர்வமுள்ள இளம் பெண்ணொருத்தி , அலோபிஸியா என்ற நோயால் பாதிக்கப்பட்டு தலைமுடியை இழக்கும் பாத்திரத்தில் சில காட்சிகளில் மொட்டைத் தலையுடன் நடித்த ஸ்வேதா திரிபாதி, தமிழில் "மெஹந்தி சர்க்கஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் தனக்கு டப்பிங் பேச ஸ்வேதா அனுமதிக்கவில்லை. மாறாக தமிழை முழுமையாக கற்று தானே பேசுவதாக கூறியிருக்கிறார். ""வேற்று மொழியில் நடிக்கும்போது அந்த மொழியை கற்றுணர்ந்து நடிக்கும்போதுதான் முழுமையான முக பாவத்தையும், உடல் மொழியையும் வெளிப்படுத்த முடியும். மேலும் நல்ல குரல் வளம் உள்ள நான் சொந்த குரலிலேயே பேச விரும்புகிறேன்'' என்கிறார் ஸ்வேதா.
திருமண வதந்தியில் உண்மை இல்லை!
இருபதாண்டுகளுக்கு முன் வீடியோ ஜாக்கியாக இருந்த மலைக்கா அரோரா, இந்திப் படங்களில் குத்து பாடல்களுக்கு நடனமாடியதன் மூலம் பிரபலமானார். பின்னர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் அவரைப் பற்றிய தகவல்கள் வந்து கொண்டிருந்தன. அண்மையில் கரினா கபூர் கான் நடத்தும் "வாட் உமன் வாண்ட்' என்ற நிகழ்ச்சியில், 19 ஆண்டுகளுக்குப் பிறகு தன் கணவர் அர்பாஸ் கானிடமிருந்து விவாக ரத்து பெற்று, தன் 16-ஆவது வயது மகனுடன் வாழ்ந்து வருவதாகவும், சிறுவனாக இருந்தாலும் தன்னுடைய மகன் அக்கறையுடன் தன்னை கவனித்துக் கொள்வதாகவும் கூறியிருந்தார். இதற்கிடையில் மலைக்கா அரோரா, அர்ஜுன் கபூரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக வதந்தி பரவியது. இதை மலைக்கா அரோராவும், அர்ஜுன் கபூரின் தந்தை போனிகபூரும் மறுத்ததோடு, இது மீடியாக்கள் வெளியிட்ட வதந்தி என கூறியுள்ளனர்.
மீண்டும் டி.வி. நிகழ்ச்சிக்கு திரும்புகிறார்
புற்றுநோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற அமெரிக்கா சென்ற சோனாலி பிந்த்ரே, முன்பு நடுவராக பங்கேற்ற "இந்தியாவின் சிறந்த ட்ரீம் பாஸ்' என்ற நிகழ்ச்சியிலிருந்து விலகினார். தற்போது சிகிச்சைப் பெற்று இந்தியா திரும்பிய சோனாலி பிந்த்ரே, முன்பு பங்கேற்ற அதே நிகழ்ச்சியில் மீண்டும் பங்கு பெற விருப்பம் தெரிவித்துள்ளதால், ஆகஸ்ட் முதல் ஒளிப்பரப்பாக உள்ள நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பை தொடங்க ஏற்பாடுகள் நடக்கின்றன.
திருமணத்திற்கு அவசரமில்லை!
திரையுலகத்திற்கு வந்து பத்தாண்டுகளை நிவு செய்துள்ள ஸ்ருதிஹாசன், நடிகை, இசையமைப்பாளர், டிவி நிகழ்ச்சி நெறியாளர் என பல துறைகளில் வெற்றிப் பெற்று தற்போது இசை ஆல்பம் ஒன்றை வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்நிலையில் அவரது திருமணத்தைப் பற்றி கேட்டபோது, ""திருமணம் என்பது அவரவர் விருப்பப்படி நடப்பதாகும். இதுவரை திருமணத்தைப் பற்றிய சிந்தனை ஏதுமில்லை. யாருடனும் எந்த உறவும் இல்லை. ஒவ்வொருவருக்கும் தனக்குப் பிடித்தமானவரை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளதால், நேரம் வரும்போது நிச்சயம் என் திருமணம் நடக்கும்'' என்கிறார் ஸ்ருதிஹாசன்.
வெப் சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர்!
90 மற்றும் 2000 -ஆம் ஆண்டு ஆரம்பத்தில் "ராஜா இந்துஸ்தானி', "ஃபிஸா', "ஜூபைதா' போன்ற பல வெற்றி படங்களில் நடித்த கரிஷ்மா கபூர், திருமணத்திற்குப் பின் சினிமாவைவிட்டு ஒதுங்கியிருந்தார். 2012-ஆம் ஆண்டு மீண்டும் "டேஞ்சரஸ் இஸ்க்' என்ற படத்தின் மூலம் திரையுலகத்திற்கு வந்த கரிஷ்மாவுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது ஏக்தா கபூர் தயாரிக்கும் "மென்ட்ஸ் ஹூட்' என்ற வெப் சீரியலில் மூன்று குழந்தைகளுக்கு தாயாக நடிக்க கரிஷ்மா ஒப்புக் கொண்டுள்ளார். இது ஒரு வித்தியாசமான கதை என்பதோடு, மேலும் சில நடிகைகளும் உடன் நடிப்பதால் தானும் நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறுகிறார் கரிஷ்மா கபூர்.