அங்குரா பூந்தி
தேவையானவை:
முழு உளுந்து - அரை கிண்ணம்
மைதா மாவு, கடலை மாவு - 1 கிண்ணம்
மூன்று வகையான கலர்கள் - சிறிது
ஏலக்காய்ப் பொடி - தேவைகேற்ப
செய்முறை:
உளுந்தை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் மைய அரைத்துக் கொள்ளவும். இதனுடன் மைதா, கடலை மாவைச் சேர்த்துக் கிளறவும். பிறகு இந்த மாவை மூன்று சமபங்குகளாக, மூன்று பாத்திரத்தில் பிரித்து எடுத்து, ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ஃபுட் கலரை சேர்த்து, கலந்து கொள்ளவும்.
அடி கணமான வாணலியில் சர்க்கரையைப் போட்டு, அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, கெட்டிப் பாகு காய்ச்சி ஏலக்காய்ப் பொடி சேர்த்து கலந்து வைக்கவும். மற்றொரு வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், பூந்தி கரண்டியை அதன்மேல் தூக்கி வைத்து, கலந்து வைத்துள்ள ஒவ்வொரு கலர் மாவையும், தனித் தனியாக ஊற்றி, வாணலி கொள்ளும் அளவு தேய்த்து, நன்றாக ஊறியதும் எடுத்து, அகலமான பாத்திரத்தில் கொட்டி ஆற வைத்து பரிமாறவும்.
கோதுமை அப்பம்
தேவையானவை:
கோதுமை மாவு - அரை கிண்ணம்
அரிசி மாவு - 2 தேக்கரண்டி
ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க தேவையானயளவு
வெல்லத் துருவல் - கால் கிண்ணம்
செய்முறை: மேற்காணும் பொருள்களில் எண்ணெய்யைத் தவிர, மற்ற அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாகப் போட்டு தேவையான அளவு தண்ணீர்
சேர்த்து, திக்காகக் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் ஊற்றி, சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை ஒரு சிறிய கரண்டியில் எடுத்து, எண்ணெய்யில் அப்பமாக ஊற்றவும். ஒருபுறம் வெந்ததும் மறு புறமும் திருப்பிப் போட்டு, வேக வைத்து எடுத்து
பரிமாறவும்.
தால் ஹல்வா
தேவையானவை:
பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு - தலா கால் கிண்ணம்
நெய் - அரை கிண்ணம்
சர்க்கரை - ஒரு கிண்ணம்
சோம்புத் தூள் - கால் தேக்கரண்டி
முந்திரி - 10
செய்முறை: பருப்புகளை ஒன்றாகப் போட்டு, 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைக்கவும். வாணலியில் நெய் ஊற்றி, முந்திரியை வறுத்து எடுக்கவும். அதே நெய்யில், அரைத்த விழுதைச் சேர்த்து, பச்சை வாசனைப் போகும் வரை வதக்கவும். பின்னர், சர்க்கரையைச் சேர்த்து நன்றாக கிளறவும். கலவையானது பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது சோம்புத் தூளைக் கலந்து, பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றவும். வறுத்த முந்திரியால் அலங்கரித்து பின் பரிமாறவும்.
கொக்கோ தேங்காய் பர்ஃபி
தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய் - 1 கிண்ணம்
கொக்கோ - 1கிண்ணம்
பால் - 1கிண்ணம்
பால் பவுடர் - 1 தேக்கரண்டி
சர்க்கரை - 1 கிண்ணம்
ஏலக்காய் - அரை தேக்கரண்டி
நெய் - 4-5 தேக்கரண்டி
செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 தேக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும், துருவிய தேங்காயைச் சேர்த்து பொன்னிறமாக 2 நிமிடம் வதக்க வேண்டும். பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கொக்கோ மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி, பின் வதக்கி வைத்துள்ள தேங்காயைச் சேர்த்து, பால் ஊற்றி குறைவான தீயில் கிளறி விட வேண்டும். பின்பு அதில் ஏலக்காய்ப் பொடி மற்றும் 1 தேக்கரண்டி பால் பவுடர் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை கிளற வேண்டும். அதற்குள் ஒரு தட்டில் நெய் தடவிக் கொள்ள வேண்டும். பின் தேங்காய் கலவையை தட்டில் பரப்பி, பின் கத்தி கொண்டு துண்டுகளாக வெட்டி, குளிர வைத்தால், கொக்கோ தேங்காய் பர்ஃபி ரெடி.
- இல. வள்ளிமயில், மதுரை.