இரட்டைப் பதக்கம்!
மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிக்கவும், அவர்களின் விளையாட்டுத் திறமையை வெளிக்கொணரவும் பாராலிம்பிக் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிக்கவும், அவர்களின் விளையாட்டுத் திறமையை வெளிக்கொணரவும் பாராலிம்பிக் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தவுடன் சில நாள்கள் கழித்து பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தியாவும் டோக்கியோ பாராலிம்பிக் போட்டிக்கு இம்முறை 54 பேர் கொண்ட குழுவை அனுப்பி இருந்தது..
பவினாபென் படேல்: பாராலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்தார் டேபிள் டென்னிஸ் வீராங்கனையான பவினாபென் படேல். பவினா 1 வயதில் போலியா நோயால் பாதிக்கப்பட்டு கால்களில் செயல்திறனை இழந்தவர். ஆமதாபாதில் உள்ள பார்வையற்றவர் சங்கத்தின் மூலம் டேபிள் டென்னிஸ் பயிற்சி பெறத் தொடங்கிய பவினா சிறந்த வீராங்கனையானார். 2013-இல் ஆசிய மண்டல சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதுமுதல் அவரது விளையாட்டு வாழ்க்கை ஏறுமுகமானது. தனது விடா முயற்சியால் இந்திய பாராலிம்பிக் அணியில் இடம் பெற்று வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
அவனி லெகரா: பாராலிம்பிக் போட்டியில் முதன்முறையாக இரட்டைப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தினார் துப்பாக்கி சுடும் வீராங்கனை அவனி லெகரா. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த அவனி லெகரா 11 வயதாக இருந்த போது, ஏற்பட்ட கார் விபத்தில் கால்கள் முற்றிலும் செயலிழந்தன. அதன்பின்னர் அவரது தந்தை பாராலிம்பிக் விளையாட்டுகளில் ஈடுபட லெகராவை ஊக்குவித்தார். பாராலிம்பிக் போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்ற அவனி லெகரா, 10 மீ. ஏர் ரைஃபிள் ஸ்டேன்டிங் பிரிவில் உலக மற்றும் பாராலிம்பிக் புதிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனையையும் படைத்தார். அதன் தொடர்ச்சியாக 50 மீ. ஏர் ரைஃபிள் ஸ்டேன்டிங் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்று, இரட்டை பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற சிறப்பையும் பெற்றார்.