பட்டாம் பூச்சி பறக்கிறது -உயிர்ப்
பூவின் இதழைத் திறக்கிறது!
பட்டுப் போன்ற சிறகாலே -தினம்
பறந்து துயரம் மறக்கிறது!
மொட்டின் மேலே அமர்கிறது -அதில்
மூழ்கி வாசம் நுகர்கிறது!
வட்டம் போட்டுப் பறந்தபடி -தேன்
வாரிக் குடித்து நகர்கிறது!
சிறகால் உலகை அளக்கிறது -தன்
ஜீவனை மகிழ்வாய் வளர்க்கிறது!
சுறுசுறுப்பாகத் தினம் பறந்து -நறுஞ்
சோலையில் பூப்போல் கலக்கிறது!
வண்ணம் சுமந்து வாழ்கிறது -தன்
வனப்பால் உலகை ஆள்கிறது!
மண்ணில் சொர்க்கம் கண்டதுபோல் -அது
மலரின் மடியில் வீழ்கிறது!
பட்டாம் பூச்சி போலிருப்போம் -தினம்
பகலும் இரவும் மகிழ்ந்திருப்போம்!
கிட்டா இன்பம் கிட்டுமென -நாம்
காலையில் சுகமாய்க் கண்விழிப்போம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.